நிலா,
இது ஒரு காதல் கடிதம். நான் உன்னைக் காதலிக்கிறேன். இதைச் சொல்லிவிட்டே ஆரம்பிக்கிறேன். இல்லையேல் இந்த இரண்டுவருடங்களாக, ஒவ்வொருமுறை உன்னைப் பார்க்கும்பொழுதும் சொல்லிவிட நினைத்து முடியாமல் போனதுபோலாகிவிடக்கூடும்.
முதன்முதலாக உன்னைப் பார்த்தபொழுது ஒரு புன்னகை, ஒரு ஹலோ. நீ சென்றுவிட்டாய். அந்த நாள் முழுவதும், ஏதோ மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மறுநாள் உன்னைப் பார்த்தபொழுது இல்லை உன் இதழில் தவழந்த புன்னகையைப் பார்த்தபொழுதுதான் நான் என் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொண்டேன். ஆறு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் புன்னகை என் கண்களில் ஒரு மச்சம் போல் ஒட்டிக்கொண்டுவிட்டது.
மச்சம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. உனது வலது உள்ளங்கையில் ஒரு மச்சம் உள்ளது.அதைப் பற்றி நாம் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் நான், உனக்கு அது கடவுள் கொடுத்தனுப்பிய முத்தம் என்றேன். வாய்விட்டுச் சிரித்தாய். அந்த நொடி, உறைந்த நதியில் நடப்பது போல் பதட்டமும், பயமும், சந்தோஷமும் அடைந்தது மனம் என்று சொன்னால் சரியாய் இருக்கும். ஓடும் நதி நீ, சிரிக்கையில் கொட்டும் அருவியாகிறாய்.
நிலா, இந்த ஆறு வருடங்களில் எப்பொழுது என் காதலை நான் உணர்ந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நாளும் உன்னைப்பற்றி நினைக்காமல் தொடங்கியதும், இல்லை முடித்ததும் இல்லை. காதலில் விழுந்தவர்கள் கனவுலகில் மிதப்பார்கள், ஆகாயத்தில் பறப்பார்களென்றெல்லாம் சொல்வார்கள். என் கதை சற்று வித்யாசமாக உள்ளது. நிலா, நீ என் வாழ்க்கையை உன் அலகுகளால் கொத்திச் சென்று வானில் போட்டுவிட்டாய். நான் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேகங்கள் இல்லா வானம். ஒரு புன்னகையில் என் ஜீவ நதி கரைதாண்டும். வெறும் மழை எதற்கு! நட்சத்திரங்கள் இல்லா வானம். மின்னும் உன் கருவிழிகள் முன் நட்சத்திரங்கள் எம்மாத்திரம்! சூரியன் இல்லா வானம். சுட்டெரிக்கும் காதல் வாழும் இடத்தில் சூரியந்தான் என் செய்யும்! என் வாழ்க்கையின் வான்வெளிகளில் நான் பார்ப்பதெல்லாம் நிலா. காலையும் நிலா;மாலையும் நிலா....
பித்துபிடித்தவன் போல்தான் இருக்கிறேன் நிலா. உன்னைப் படைத்தவன் வந்தாலும் அவனையும் தள்ளி நின்றுதான் உன்னிடம் பேசவேண்டும் என்பேன். ஏன் நிலா காதலில் பித்து தவறு என்கிறாய்? என் பித்தின் நிலை அறியமாட்டாய் நீ. உன் கைகளில் ஓடும் பச்சை நரம்பை ஏதேச்சையாய் ஒரு நாள் தொட்டுவிட்டேன். பின் அதிலிருந்து வெளிவர வழி மறந்து இரண்டு நாட்கள் அலைந்தேன். உன் கண்களில் கண்ணீரைக் காணுபொழுது என் உடலெல்லாம் நீராகி வழிந்தோடுவதாய் உணர்வேன். பித்தன் தன் பித்தை உணர்ந்தவனானால், தெளிவிக்கும் மருந்துண்டோ சொல்...
நிலா நீ காதல் தேவதையின் செல்லக் குழந்தை. புன்னகை தோட்டத்து மலர்களில் தேன் நீ. ஒருமுறை புதிய சுடிதார் ஒன்றை அணிந்துவந்து எப்படி இருக்கிறது என்று கேட்டாய். திருவிளையாடல் படத்தில் சிவனாய் நடித்த சிவாஜி அவர்களின் இசை நிற்க அடங்கும் உலகம் போல் நான் ஸ்தம்பித்து நின்றேன். என் விழிகள் மட்டும் இமைக்க மறுத்து பார்த்துகொண்டிருந்தன உன்னை. அந்த ஒரு நிமிடம் என் வாழ்வில் கடவுள் உண்டு அவரின்றி உன்னை யார் படைத்திருப்பார் என்று நம்ப வைத்தது. பின் உன் புன்னகையால் மீண்டும் உயிர்பெற்று நினைவுதிரும்பியவனாய் நன்றாக உள்ளதென்றேன். அன்று என் நாட்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தேன். "பூந்தோட்டதில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். பூவொன்றோ புத்தாடையுடுத்தி வந்து எப்படி? என்று கேட்கிறது!"
காதல் எல்லோரையும் கவிஞர்களாக்கும். என் விசயத்தில் அதற்கு நேர்மாறாய் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன். உன் பெயருக்கு பக்கத்தில் எல்லாமும் அர்த்தமிழக்கின்றன் நிலா.
நீ தலையில் பூச்சூடி நான் பார்த்ததில்லையே என்றோர் நாள் கேட்டேன். ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றாய். ஆணவக்காரி என்று உன்னைத் திட்டினேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது. இவ்வுலகில் பூக்கும் எம்மலரும் நீ சூட தகுதியற்றதாய்தான் இருக்கும். நிலா சூட நட்சித்திரங்களைத்தான் கோர்க்கவேண்டும்!
மழை பெய்கிறது நிலா. ச்சோவென்று பெய்கிறது. நான் மட்டும் நனையவில்லை. உன்னோடு மூங்கில் காடொன்றில் நடை போக வேண்டும். துளையுண்ட மூங்கில்களின் கீதம் கேட்டுக்கொண்டே நீண்ட தூரம் நடை போகவேண்டும். உன்னோடு ஒரு பரிசல் பயணம் செல்லவேண்டும். காதல் நதியில் நாம் போவதுதானே தூரம்.
எங்கிருக்கிறாய் நிலா. ஒரு சொல்லின் முடிவில் ஒரு சொல் பிறக்கிறது. முடிந்த சொல் பின் தான் பெரிதாய் மிகப் பெரிதாய் வளர்கிறது. நதி முடிந்து கடலாவது போல். ஒரு கல் உடைந்து சிற்பமாகிறது.வைக்குமிடத்தில் வைத்தால் அதுவே கடவுளாகிறது. நம்மிடையே இருக்கும் நட்பும் காதலாகட்டும் நிலா. நம்மிடையே இருக்கும் இக்கைக்குட்டை அளவு இடைவெளியையும் காதலால் நிரப்புவோம். சம்மதமா?