Monday, November 10, 2014

…ல்லை

எனக்குப் பிடித்த விசயங்களைக்
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது
***

எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை

க‌ட‌ந்த‌ கால‌ம்

எழுதத் தொடங்கி
பின்
பாதியில் அழித்த‌
கவிதைகளிலிருந்து
ஒரு வார்த்தைத் தப்பித்து
ஒரு பெருமரமாய்
இன்று வளர்ந்து நிற்கிறது.
ஆசைகள்,
கோபங்கள்,
அனுதாபங்கள்,
தனிமை,
அச்சம்,
ஆற்றாமை,
இன்னும் பலவும்
கிளைத்திருக்கின்ற‌ன‌.
எல்லா கிளைக‌ளிலும்
ப‌ச்சை பசேலென இலைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பழங்கள்
அதில் தொங்கும் பறவைகள்…
இன்று
பார்க்க‌
அழகாய்த்தான் உள்ளது
என் க‌ட‌ந்த‌ கால‌ம்

முத்தம் தரும் காகம்

தினமும் காலை
பத்து மணிக்கு
எங்கள் வீட்டுக்கு
ஒரு காகம் வரும்

ஒவ்வொரு நாளும்
எங்கிருந்தோ
ஒரு முத்தத்தைப்
பறித்து வரும்

ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தம்
தரும்

காக்கைத் தரும்
முத்தமென்பதால்
கழுவி
எடுத்து வைத்துக்கொள்வேன்

சோறு வைக்க மறந்த
ஒரு நாளில்
இரண்டு முத்தங்களைப்
போட்டுப் போயிருந்தது

மறுநாள்
அக்காக்கையைப் பின் தொடர்ந்து
சென்றேன்

மாய வனமொன்றில்
நுழைந்த
காக்கை
ஒரு பெண்ணாய் மாறியது

இதுவரை
இவ்வுலகம் பார்த்திராத
பேரழகி

எல்லோரிடமும்
காட்டி
பெருமைப்படத் துடித்தது மனம்

விரைந்து சென்று
எல்லோரையும்
அழைத்து வந்து
காட்டினேன்

யாருக்கும்
தெரியவில்லை

வீட்டிற்கு அழைத்துச் சென்று
முத்தங்களைக் காட்டினேன்
அவர்களுக்கு
எதுவும்
தெரியவில்லை

மீண்டும்
அவளிடம் ஓடிச்சென்று
"நான் உனக்கு சோறு வைப்பவன்
நீ எனக்குத் தினமும் முத்தம் தருவாய்" என்றேன்

அவள்
மாயமாய் மறைந்தாள்

அடுத்த நாள்
பத்து மணியாயிற்று

காக்கை வந்தது
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தமும் தந்தது

இதுவா
அவள்?

ஏனோ
அன்றைய முத்தத்தையும்
கழுவியே
எடுத்துக்கொண்டேன்