Sunday, August 5, 2018

கடல் - சிறுகதை - விஷால் ராஜா



                               
விஷாலின் கதை கேட்ட வரை யாருக்குமே புரியவில்லை. சரி கதை அவ்வளவுதான் என்று ஒதுக்க நினைத்த நேரத்தில் சுனில் கிருஷ்ணன் கதையைப் புரிந்துகொள்ள ஒரு பார்வையை முன் வைத்தார். சுவாரசியமாகத்தான் இருந்தது. சற்று விரிவாக எனக்குப் பட்டதை எழுதலாம் என்று தோன்றியது,.

கதையை இரண்டு பாகங்களாக பிரித்துக்கொள்கிறேன். முதல் பகுதியில் ஒரு குடும்பம் கடற்கரைக்குச் செல்கிறது. இரண்டாம் பகுதியில் குடும்பத்திலிருக்கும் ஒரு ஆண் ஒரு காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

முதல் பகுதியைப் பார்ப்போம்.

ஒரு சிறுவன் தன் குடும்பத்தோடு கடற்கரைக்குச் செல்கிறான்.

அம்மா, அப்பா மற்றும் அண்ணன் (பெரியம்மா மகன்) உடன். அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு கால் நனைத்து விளையாடுகிறான். சற்று முன்னால் போக விரும்பவனிடம் போகக் கூடாது அலை வந்து தூக்கிப் போய்விடும் என்று அண்ணன் சொல்ல, சிறுவன் சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் மனதில் இருக்கும் கேள்வியைப் புரிந்துகொண்டு பெரியவர்கள் ஒரு எல்லை வரை போகலாம் என்கிறான். மீண்டும் இலையேல் அலை வந்து தூக்கிப் போய்விடும் என்கிறான். பின் சிறுவனின் அம்மா கூப்பிட, அவளிடம் ஓடிச் செல்கிறான். அங்கு சாப்பிட இருக்கும் பலவற்றைப் பார்த்து ஆசைப் படுகிறான். தந்தை அவனிடம் அண்ணனைப் பார். நீ இப்படியெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது. அண்ணன் சிறுவயதில் கூட இப்படியெல்லாம் நடந்துகொண்டதில்லை என்று சொல்கிறார்.

இதுவரையிலும் அந்தச் சிறுவன் மீதும் அவன் அண்ணனின் மீதும் கதை செல்கிறது. "யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியைப் பொறுத்துக் கொண்டான்." இவ்வரிகள் அதற்கு சிறந்த உதாரணம். தனக்கும் பிடித்தமானவர்கள் உடன் இருக்கும் போது ஒரு சிறுவனுக்குள் இனம் புரியாத சந்தோசம் இருக்கும். கடலின் பங்கு என்பது இதுவரை இவ்வுறவை நமக்கு நனைத்துக்காட்டியதே.

பின் கதை இரண்டாம் பகுதிக்கு நகர்கிறது (என்  பகுப்பில் :) )

ஒரு நாள் தூங்கி எழுந்த சிறுவன் கடற்கரைக்கு போக வேன்டும் இன்றைக்கு என்று அவன் அம்மாவிடம் போய் சொல்கிறான். அம்மா அவனைத் திட்டுகிறாள். கடலுக்குலாம் போக முடியாது என்று சொல்கிறாள். காரணம் சுனாமி வந்து எல்லாம் இடமும் மூழ்கி இருக்கிறது என்று சிறுவன் தெரிந்துகொள்கிறான். சிறிது நேரத்தில் சிறுவனின் அண்ணன் வருகிறான். எப்போது பார்த்தாலும் இவனிடம் பாசமாக இருக்கும் அண்ணன் இன்றைக்கு முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்பது சிறுவனை வருத்தப்பட வைக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது எனேறு தெரியவருகிறது. சிறுவனிடம் அவன் அம்மா அண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்புகிறாள். அதை சாப்பிட மறுப்பவனை சாப்பிட வைக்கிறாள். அண்ணன் சிறுவனின் அம்மாவிடம் (சித்தி) நான் போகிறேன் என்கிறான். ஏதோ தப்பு நடந்துவிட்டது இனி  ஒழுங்காக இரு என்று சொல்பவளிடம் மீண்டும் நான் போகிறேன் என்று சொல்ல உன் அம்மா வரும் வரை இரு அல்லது உன் சித்தப்பா வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட்டேனும் போ என்கிறாள். சித்தப்பா அறைந்து ஒழுங்கா உங்கம்மா வந்தவுடன் போ என்று வரும் அவன் தாயிடம் அனுப்பி வைக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறிப்போகும்போது ஓடி வரும் நாயை கல்லால் அடிக்கிறான். தாய் அழுகையுடன் அவனை அணைத்துக்கொள்வதோடு கதை முடிகிறது.

முதல் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டாக இரண்டாம் பகுதி தனித்து இருக்கிறது. இப்படிப் போகப்போகிறது என்று நினைத்திருக்க சொல்லப்படாத பகுதிகளை அடக்கி ஒரு புதிர் தன்மையோடு நிறைந்திருக்கிறது இரண்டாம் பகுதி.  எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நமக்குப் புரிவது என்னவென்றால் அண்ணன் கதாப்பாத்திரம் ஏதோ ஒரு தவறைச் செய்துவிட அவனை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட விரும்புவனைக் கட்டாயப்படுத்தி அவன் தாயுடன் அனுப்பி வைக்கிறார்கள். இடை இடையே நாய்க்குட்டி, சிறுவனின் மன ஓட்டம் எல்லாம் வருகிறது. முதல் பகுதியை மறந்துவிட்டுப் படித்தால் மற்றவை நன்றாக வந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இறுதியில் எதற்காக நாயிடம் கோபம் கொள்கிறான் என்று புரியவில்லை. இவ்விடத்தில்தான் சுனில் கிருஷ்ணன் ஒரு பார்வையை முன் வைக்கிறார்.

கடல் பாவத்தின் அடையாளம். சில நேரம் கரை தாண்டி வந்து நம்மை ஆட்கொண்டுவிடும்.

கடல் இக்கதையில் பாபத்தின் உருவகமாக எப்போது ஆகிறது. ஒரு வேளை இலக்கியத்தில் கடல் பாபத்தின் உருவகம் என்று நிறுவப்பட்டிருக்கிறது என்றால் (அவ்வகையில் கதையில் அது நிறுவப்பட தேவையில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்) சிறுவனும், அண்ணனும் கடற்கரையில் இருக்கும் மற்றவர்களும் ஏன் கால் நனைக்கிறார்கள். ஒரு எல்லை வரை போகலாமா பாவத்தில். நாம் தள்ளி நின்றால் அலை நம்மைத் தூக்கிச் செல்லாது என்று  தெரிந்துதான் சொல்கிறானா? அவ்வளவு தெளிவு இருக்கும் ஒருவன் தன்னை மீறிப் பாவத்தில் ஈடுபடும்போது அதை உணரும் தருணம்தான் முக்கியமல்லவா? இக்கதையில் எங்கு உணர்கிறான். காவல் நிலையத்திலா, அல்லது சித்தி, சித்தப்பாவின் செய்கைகளினாலா அல்லது அவன் தாயைப் பார்த்தபின்னரா?  நம்மை மீறி நடக்கும் விசயத்திற்குக் கூட பொறுப்பெடுத்து குற்றவுணர்வு அடைய பக்குவமான மனம் வேண்டும். அண்ணன் கதாப்பாத்திரம் அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு இங்கு வளரவில்லை. எனில் குற்றத்தை நினைத்து வருந்தும் சாதாரண ஒருத்தனாகத்தான் அவன் தெரிகிறான். எனில் இங்கு கடலிற்கு வேலையே இல்லை. 

ஒரு சிறுகதையில் கதாப்பாத்திரங்கள் பெருகப் பெருக அதன் நீளம், காலம் அதிகரிக்க நிர்பந்தம் உருவாகும். இக்கதையில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களும் வலுவான அறிமுகங்களோடு இருப்பதோடு சரி. அங்கேயே நின்று விடுகிறார்கள்.அதிலும் சிறுவன் பாதிக்குமேல் தேவையே இல்லை என்றாகிறான்.  நாய்க்குட்டி படம் போட்ட படத்தில் பைபிளின் வசனம் வருகிறது என்பதைத் தவிர நாய்க்குட்டி கடைசியில் ஓடி வருவதற்கும் அது கடவுளாவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கடலாவது ஆரம்பத்திலேயே வருகிறது. உருவகமாகிறது என்று வைத்துக்கொண்டால் கூட கடவுள் சட்டென்று உருவகம் கொண்டுவிடுகிறார் இறுதியில். அவரை நாம் ஏற்றுக்கொண்டால் கூட அண்ணன் கதாப்பாத்திரம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

சொல்லாமல் உணர்த்துவது நல்ல யுக்திதான் என்றாலும் இக்கதைக்கு கைகூடவில்லை. நிறைய விசயங்களை வாசகனிடமே விட்டுவிட்டதாக நினைக்கிறேன்.

கடவுள் எப்போதும் கூடவே வருவார் என்பது கடவுளைப் பற்றிய பழம்பெருமைகளுள் ஒன்றாகிவிட்டது.

இதுவரை விஷாலின் நான்கு கதைகள் படித்திருப்பேன். இக்கதையில் முன்னகர்ந்திருக்கிறார்.

படிக்கச் சொன்ன கார்த்திக்கிற்கும், எழுதக் காரணமாக இருந்த சுனில் கிருஷ்ணனிற்கும் நன்றி :) 

Monday, July 16, 2018

நிம்மதி!

நேற்று வாசித்த சிறுகதையில்
ஒரு கிழவன் செத்துப்போய்விட்டான்
அவன் பிணந்தான்
இரண்டு நாட்களாய்
தோளில் தூங்குகிறது
ஏனோ
நிம்மதி
அப்படி
ஒரு நிம்மதி!

Monday, July 2, 2018

ஒரு பழம்பாடல்...


சுருக்கங்கள் தோன்றுவது வயதின் அடையாளம். அச்சுருக்கங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நினைவுகளைத் தாங்கி நிற்கும் தடுப்பணைகள் போல் செயல்பட்டால் வலைக்குள் பறக்கும் பறவைபோல் நம் உடலுக்குள் உயிர் துடிக்கும்.. அப்படித்தான் தோன்றியது அக்கடிதங்களைப் பார்க்கும்பொழுது. அவை என் உயிரிலிருந்து பிரிக்க முடியாத படி கசங்கிச், சுருங்கிக் கிடக்கின்றன.திரும்பி படிக்கத் தேவையில்லாத படி ஒவ்வொரு வரியும் நினைவிலிருக்கிறது.  இருந்த போதும் கண்ணில் படும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் பிரித்துப் படிக்கத்தான் செய்கிறேன்.

அன்றிரவு நடந்த எதையும் யாரிடம் சொன்னாலும் காறி முகத்தில் துப்பிவிடுவர். அப்படி ஒரு இரவிற்காகத்தான் நான் காத்திருந்தேனா என்பதே என் உயிரை அறுக்கும் கேள்வி. அப்படித்தான் அவளும் சொல்லிச் சென்றாள். "நீ இதற்குத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தாய் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்பம் கிடைத்தபோது பயன்படுத்திக்கொண்டாய்" என்றாள். நீ தூக்கத்தில் இல்லை என்று நினைத்தேன்”, என்று சொன்னேன். ஆனால் அவள் கண்கள் திறக்கவில்லை என்பதை நான் உறுதிபடுத்திக்கொண்டேதான் இருந்தேன்.

கடிதம் ஒன்று:

நீ இல்லாமல் வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது.. நான் சாகத்தான் போகிறேன்..

கடிதம் இரண்டு:

சீக்கிரம் உன்னையும்... இவ்வுலகையும் விட்டுப் பிரியப் போகிறேன்...

கடிதம் மூன்று:

மன்னித்து விடு நிலா இன்னும் சாகாமல் இருப்பதற்கு

கடிதம் நான்கு:

….
….
….






கடிதம் ஐந்து:

அன்புள்ள நிலா,
நீ என்னை விட்டுப் போனால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உன்னிடம் சொல்லி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. அன்று நீ சிவப்பு நிறத் துப்பட்டா அணிந்திருந்தாய். எப்போதும் போல் நீ மூக்கில் அணிந்திருந்த வளையம் மின்னியது. வழக்கத்துக்கு மாறாக காதுகளிலும் வளையங்கள் தொங்கின. பெண்களுக்கு வேறு நகைகளைவிட எளிய வளையங்கள் மிக அழகாக இருக்கின்றன என்று அன்றும் உன்னிடம் சொன்னேன். அதை நீ கேட்டாயா என்றே இன்றும் சந்தேகமாக இருக்கிறது.  அதற்கு முன் பார்த்ததிலிருந்து கொஞ்சம் எடை கூடியிருந்தாய். உன்னிடம் கேட்க்கவில்லை. உனக்கு உன் எடைப் பற்றி சொன்னால் பிடிக்காது. ஆனாலும் நீ மிக மிக அழகாய் இருந்தாய் நிலா. அதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எப்படித் துடித்தேன் தெரியுமா? நீ சொன்னாய்.. காதில் சரியாக விழவில்லை... என்ன என்றேன்... ஒன்றுமில்லை என்று திரும்பிக் கொண்டாய். அதை நினைத்து நினைத்து ஓராயிரம் முறை அழுதுவிட்டேன். சற்று கவனமாய் இருந்திருர்ந்தால் நீ சொன்னது காதில் விழுந்திருக்குமே என்று..  நான் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேன்....
ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் இல்லை என்று சத்தியம் செய்கிறேன். ஒவ்வொரு நாளும் யோசித்ததுண்டு. எனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் தற்கொலை செய்து கொண்டார்கள் ... அவர்களில் யாரைப் போல் நானும் சாகலாம் என்று...
உன்னிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா... இல்லையென்றால் கேள்..எனக்கு ஒரு சித்தி இருந்தாள். என் தாயின் இளைய சகோதரி. என் தாயோடு பிறந்தவர்களில் அதிகம் படித்தவள் அவள்தான். அவள்தான் குடும்பத்திலேயே மிக அழகு. அவள் சிரித்தால் தெருவிற்கே கேட்க்கும். எனக்கு அவளைப் பிடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா.. அந்தக் காலத்திலேயே படித்து முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குப் போய்விட்டாள். கோபக்காரி. அவள் பல காலம் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. எனக்கு பதினைந்து வயதிருக்கும். ஒரு நாள் திடீரென்று வீட்டிற்கு ஒருவனைக் கூட்டி வந்தாள். அவனைக் காதலிப்பதாகவும், யார் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும், யார் திருமணத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒரு மாதத்தில் நடக்க வேண்டியது நடக்கும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அன்றே போய்விட்டாள். பின் அவள் ஏழு ஆண்டுகள் உயிரோடு இருந்தாள்.  அவள் நம்பிப் போனவளின் சொற்கள் அவளுக்கு கொள்ளி வைத்துவிட்டன.. சில நேரம் அவள் வழி போகலாமா என்று நினைப்பேன்...
சில ஆண்டுகளுக்கு முன்  நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரப் பெண் ஒருவர்... அவரும் அக்னிப் பிரவேசம் செய்தார். கணவன் ஏதோ சொல்லிவிட்டானாம்.
பள்ளியில் படிக்கும்போது ஒருவன். என்னோடு படித்தவந்தான். அவன் அப்பா ஏதோ சொல்லிவிட்டாராம். தூக்கு மாட்டிச் செத்துப்போனான்.
நீ கடைசியாக சொன்ன வார்த்தைகள் மட்டும் கேட்டிருந்தால் நானும் இன்னேரம் செத்துருப்பேன் நிலா..
பொய்யில்லை. போன வாரம் கூட ஒருவன் செத்தான். அவன் காதலித்த பெண் ஒரு நாள் திடீரென்று இனி நாம் பிரிந்துவிடலாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அவன் ஒரு வாரம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறான். ஒரு வார்த்தை கூட அதன் பின் அந்தப் பெண் பேசவில்லையாம்.  வீட்டில் தொங்கிவிட்டான். உனக்குத் தெரியுமா அன்று அவன் வீட்டில் அவன் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி எல்லோரும் இருந்திருக்கிறார்கள். நீ விரும்பினால் கடைசியாய் சொன்ன வார்த்தைகளைச் சொல்லலாம்....
இதுவரை சொன்னவர்களை விட ஒருத்தியின் மரணம் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் கண்ணில் நீர் வரவைக்கிறது. உன்னிடம் அவளைப் பற்றி சொன்னதில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் புதிதாய் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தார். இரண்டாவது திருமணம்.  முதல் மனைவியின் தங்கைதான். அவரின் மனைவி கேன்சர் வந்து இறந்தாள். அக்காவின் பிள்ளைகளைத் தன் பிள்ளைபோல் வளர்த்துவந்தாள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. அவளுக்கும் கேன்சர் என்றார்கள். சில வருடங்களிலேயே அவள் அக்காவிடம் போய்ச் சேர்ந்தாள். அவள் செத்த அன்று அவள் கணவன் அழுது அரற்றியது. பாவி.. விளையாட்டா சொன்னத மனசுக்குள்ளயே வச்சுருந்து பழி வாங்கிட்டியேடி..  ஒரு நாள் என்னைப் பிடிக்குமா அக்காவைப் பிடிக்குமா என்று கேட்டிருக்கிறாள். அக்கா என்று சொன்னவுடன் அன்றிலிருந்து வையிற்று வலிக்கு எடுத்துக்கொண்டிருந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளாமல் மறைத்திருக்கிறாள்…  ஒருவேளை இதைச் சொன்னால் நீ கடைசியாக சொன்னதைச் சொல்வாயா நிலா...
இப்போதும் சொல்கிறேன். நிச்சயம் என்றேனும் ஒரு நாள் செத்துப்போவேன் என்று நம்பிக்கையிருக்கிறது  நிலா. என் ஒரே பயமெல்லாம் எனக்கு மறதி அதிகமாகிக்கொண்டே வருவதுபோல் உணர்கிறேன். நீயும் நானும் சேர்ந்திருந்த ஏழு வருடங்களில் ஏறக்குறைய எல்லா விசயங்களும் நினைவிருக்கிறது. ஆனால் எல்லாவற்றின் மேலும் ஒரு மெல்லிய புகை படிய ஆரம்பித்திருக்கிறது. கடைசியாக பார்த்த அன்று நீ அணிந்திருந்த துப்பட்டாவின் உடையின் நிறம் நியாபகம் இருக்கிறது.  ஆனால் உன் சுரிதாரின் நிறம் நியாபகம் இல்லை. அதற்கு முன் நாம் சந்தித்தது நினைவிருக்கிறது ஆனால் எப்போது என்று நியாபகம் இல்லை. கடைசியாக உன்னைப் பார்த்த நாள் எது என்று குறித்து வைத்திருக்கலாம். ஆனால் அதுதான் கடைசி என்று எனக்கு எப்படித் தெரியும். பொய்யில்லை நிலா.. சத்தியமாய் என் நியாபக மறதி பற்றி உன்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  நான் உன்னிடம் இப்போது கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீ என்னிடம் கடைசியாக சொன்னது என்ன.. அவ்வார்த்தைகளை மட்டும் தா.. அதன் பலத்தில் என்னை இறுக்கிக்கொள்கிறேன். அதன் வெப்பத்தில் என்னைச் சுட்டுக்கொள்கிறேன். அதன் இறுக்கத்தில் என் மூச்சை அடைத்துக்கொள்கிறேன்..உன்னை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். .. இவ்வுதவியை மட்டும் செய்...
இப்படிக்கு,
நான்
கடைசியாய் ஒரு கடிதம் மீதமிருந்தது. அக்கடிதத்தை மட்டும் பிரிக்கவில்லை. அதில் ஒரே வரிதான் இருக்கிறது என்பது தெரியும். ஆனாலும் படிக்கத் தோன்றவில்லை. ஒவ்வொரு வார்த்தையும் விடுதலையயும், கோபத்தையும், அருவெருப்பையும், காதலையும், ஏக்கத்தையும் இன்னும் பல உணர்வுகளையும் ஒருங்கே தருவன.
ச்சி. ச்சீ... அன்று நடந்தது எல்லாம் எனக்குத் தெரிந்துதான் நடந்தது....

ஒரு நீண்ட பெருமூச்சோடு கைகளில் இருந்த கடிதங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின் ஒவ்வொன்றாய் கிழித்தேன்...

காதல், காதல், காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல், சாதல், சாதல்.என்பது ஒரு பழம்பாடல்....


Tuesday, October 25, 2016

சாத்தானின் குழந்தைகள்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது குழந்தைகளுக்கு
சீனித் தண்ணியில்
கடவுளின் ரத்தத்தைக்
கலந்து கொடுக்கிறோம்

கடவுளின்
சதையைப் பிய்த்து தின்று
ஞானம் பெறுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது
பிதாவின் ராஜ்ஜியத்தில்
அவரின் வீடுகளை
இடித்துத் தள்ளி
தெருவில் தள்ளுகிறோம்
பின்னர் சிறைப்பிடித்து
சிலுவையில் ஏற்றுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

ரத்தம் குடிக்கும் நாம்
தூமை தீட்டென்கிறோம்
கொலை செய்த நாளை
புனிதமாக்குகிறோம்

நாம்
சாத்தானின் குழந்தைகள்

நமக்கு
அது
விலக்கப்பட்ட கனி என்று
நன்றாகத் தெரியும்

அதை
உண்டதுதான்
இதுவரை
நாம் தீட்டியதிலேயே
ஆகப் பெரிய‌
சதித்திட்டம்

சாத்தனிற்கு
தோத்திரம்

ஆமென்!









Thursday, October 13, 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு - 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர் பாப் டைலன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இளையராஜா ஒரு மேடையில் இசையுடன் சேரும்போதுதான் பாடல் வரிகள் உயிர் பெறுகின்றன என்பதைப் பாடல் வரிகளை மட்டும் தனியாகச் சொல்லிக்காட்டுவார் (சொல்லிக்காட்டும்போதே மொக்கையா இருக்குல்ல என்பதுபோல் இருக்கும் அவர் சொல்லும் தொனி) பின் தன் ட்யூனோடு சேர்த்துப் பாடிக்காட்டுவார்.. இப்ப எப்படி இருக்கு என்று அவர் கேட்க்கும்போது கூட்டம் கைத்தட்டும்.

என்னைப் பொறுத்தவரை பாடல்கள் என்றால் அதில் பாடல் வரிகள்தான் முக்கியம் அல்லது இரண்டுமே முக்கியம். தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு கலாச்சாரம் தொடங்கியபின் எத்தனையோ குத்துப்பாட்டுக்கள் வந்திருக்கின்றன. அவற்றில் எத்தனைப் பாடல்கள் காலத்தால் அழியாமல் நிற்கின்றன. அதே சமயம், இன்றும் நாம் செந்தமிழ் தேன் மொழியாளை ரசிக்கிறோமே.... அதற்கு வரிகள்தான் முக்கிய காரணம் இல்லையா..

சரி விசயத்திற்கு வருவோம். பாப் டைலனின் பாடல்கள் இவ்வளவு பிரசத்தி என்றால் அவர் வரிகளுக்கு இசை அமைத்தவர்களுக்கு விருதில் பங்கில்லையா? ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக தேசிய விருது கொடுக்கப்பெற்றபோது பரத்வாஜ் அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்.

பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பது தெரியாது. விக்கிபீடியாவில் இசையைப் பற்றி எதுவும் போடவில்லை என்பதால் அதைப் பிறர்தான் செய்வர் என்று யூகிக்கிறேன்.

டைலனிற்கு கொடுக்கப்பட்டதற்கு ஆதரித்து எதிர்த்தும் எழுதப்பட்டிருந்த பதிவுகளில் அவரின் பல பாடல்கள் பொயட்ரிதான் என்றும் அவர் காலம் முழுவதும் போர்களுக்கு எதிராக பாடியவர் என்றும் ஆதிரிப்போர் குறிப்பிடுகின்றனர். எதிர்ப்போர் அவர் பாடல்கள் எப்படி இலக்கியத்திற்குள் வருகின்றன என்று கேட்க்கின்றர்.

எனக்கு இசை என்பது மன அமைதி கொள்ள வைப்பது மட்டுமே. பாடல்கள் என்றால் அதோடு வார்த்தைகள் சேர வேண்டும். இவ்வளவுதான் என் இசை ரசனை. இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதன் கதவுகளை திறக்க காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருக்கிறேன். நிலமை இப்படியிருக்க இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஒரு பாடகர்/பாடலாசிரியருக்கு கொடுக்கிறார்கள் என்றால் என்னத்தைத்தான் புரிந்துகொள்வது :(

சில அடிப்படைக் கேள்விகள்:

*போர்களுக்கு எதிராக பாடினார் என்றால் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் ஏன் இலக்கியத்திற்கு கொடுக்க வேண்டும்.

* அவர் பாடல்களில் இருப்பது கவித்துவமான வரிகளா? அல்லது அவை கவிதைகளா?

* விக்கிபீடியாவில் அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று போட்டிருக்கிறார்கள். ஆர்ட் லிட்ரேச்சர்க்குள் வருகிறதா?

* இந்தியாவில் இருந்து எப்பொழுது ஒருவர் வாங்கப் போகிறார். :)

Sunday, October 2, 2016

தற்கொலை

தற்கொலை செய்துகொள்வது
என்று முடிவெடுத்தப் பின்
வழக்கமான வழிகளில்
நான் போக விரும்பவில்லை
தூக்கிட்டுக்கொள்வதோ
ஓடும் ரயிலின் முன் பாய்வதோ
எல்லோரும் செய்வது
நிச்சயமாய்
தீவைத்துக்கொள்ளக்கூடாது
மின்சார வயர்களை
எப்படிக் கடிப்பதென்று தெரியாது
ஆற்றில் குதிப்பதென்பது
வழக்கொழிந்துபோன முறை
ஒன்று செய்யலாம்
குறியை அறுத்துவிட்டு
அங்கு ஓர் கோட்டைக் கிழித்துக்கொண்டு
தெருவில் இறங்கி
நடந்து செல்லலாம்
மற்றவற்றை
வேட்டை
மிருகங்கள் பார்த்துக்கொள்ளும்...

Saturday, September 24, 2016

வெக்கை - பூமணி

அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது வாங்குகிறார் பூமணி என்று படித்தபொழுதுதான் அவரின் முதல் அறிமுகம். புத்தகக்கண்காட்சியில் நாவலின் அளவைப் பார்த்து நிச்சயம் படிக்க மாட்டோமென்று அளவில் சிறியதான வெக்கை வாங்கி வைத்திருந்தேன்.
பதினைந்து வயது சிறுவன் ஒரு கொலை செய்கிறான். அதன்பின் தந்தையுடன் ஏழு நாட்களுக்குத் தலைமறைவாய்ச் சுற்றித்திரிந்து விட்டு நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதுதான் நாவல்.
சிறுகதை வாசிப்பது என்பது திருப்பதியில் லட்டு வாங்குவதைப் போன்றது. நேரத்தை வசமாக்கிவிட்டால் லட்டு நிச்சயம் கிடைக்கும். கவிதை வாசிப்பது என்பது ஒரு கண நேரமே தோன்றும் அற்புத ஜோதியைப் பார்ப்பது போன்றது. பார்த்துவிட்டால் நாம் புண்ணியம் செய்தவராவோம். இல்லையென்றால் நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்ற உணர்வோடு வீடு திரும்ப வேண்டியதுதான்நாவலில் இந்தச் சிக்கல்கள் இல்லை. அவைகள் பல அறைகள் நிறைந்த அரண்மனைகள். குறைந்தபட்ச்சம் உள் நுழைவதற்கும், வெளியேறுவதற்குமேனும் இரண்டு கதவுகள் திறக்கும்.
வெக்கை கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையின் வாயிலாக பல கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது. ஒரு பதினைந்து வயது சிறுவனின் மனதில் கொலை செய்யும் எண்ணம் எவ்வாறு எழுகிறது என்பதில் தொடங்கி வாழ்க்கை ஏன் பச்சோந்தியைப் போல் இடத்திற்கு இடம், மனிதருக்கு மனிதர் நிறம் மாறுகிறது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல நாவல் என்பது தனி நபர்களின் கதைகளாகத் தொடங்கி அது ஒட்டுமொத்த மனிதத்தின் கதையாக மாற வேண்டும் என்று சொல்லுவார்கள். அவ்வகையில் வெக்கை ஒரு சிறந்த நாவல்.
வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ விசயங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. சிதம்பரமும் அவன் அய்யாவும் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது நான் எங்கோ பார்த்தவர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என் சிறு வயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் முன் விரோதத்தால் ஒருவரின் காதைக் கடித்து துப்பிவிட்டார் என்று கேள்விப்பட்டதுதான் என் நினைவில் இருக்கும் முதல் வன்முறைச் சம்பவம். பிறகு சாதிப் பிரச்சனையில் நடக்கும் கொலைகள், திருவிழாவில் சண்டை என அவ்வப் பொழுது தெரிந்த இடங்களிலிருந்து அல்லது தெரிந்த மனிதர்களின் வன்முறைச் சம்பவங்களைக் கேள்விப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் நான் யோசிப்பது ஆத்திரத்தில் செய்துவிட்டு கண நேரத்தில் வாழ்க்கையத் தொலைத்துவிடுகிறார்களே என்பதுதான். அதே வேளையில் ஒரு திட்டமிட்டக் கொலை நடக்கும்பொழுது அதன் பின்னால் இருக்கும் கொலை வெறிதான் கண்ணுக்குத் தெரியும். திட்டமிட்டு கொலை செய்பவர்கள் ஆபத்தான மன நிலை உடையவர்கள் என்றே நினைத்துவந்தேன். பதினைந்து வயது சிறுவன் கொலை செய்கிறான், அவனே குண்டு தயாரித்து தன்னைத் துரத்தி வருபவர்கள் மீது வீசுகிறான் என்றாலும் நாம் பார்ப்பது இங்கு வேறு. பழிவாங்குதலில் இருக்கும் நியாயம். அந்த நியாயமும் glorify செய்யப்படவில்லை என்பதுதான் இங்கு சிறப்பு.
குடும்பமே அலைக்கழிப்பிற்கு ஆளான பின்னரும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதும், ஒன்றாக கைகோர்த்து எதிர்வரும் துன்பத்தை எதிர்கொள்வதும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிவதும், வாசிக்கையில் ஒரு துளிக் கண்ணீரையேனும் நிச்சயம் கோரும். அனேக நேரங்களில் நாம் அதிகம் காண்பது  தனிக்குடும்பத்தில் இருக்கும் ஒருவரின் தனியறையில் நடக்கும் கதைகளைத்தான். அவ்வாறிருக்க இவ்வளவு அந்நியோன்யமான ஒரு குடும்பம் மனதிற்கு நெருக்கமாவது இயல்பு. ஒருவர் கூட ஒரு இடத்தில் கூட மற்றவர் மீது கோபமாக பேசாத மனதிர்களாய் வெக்கையில் வரும் ,மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாசம் மிக  மிகஇயல்பானதாய் இருக்கிறது. Romanticise செய்யப்படவில்லை. படித்து முடித்தவுடன் இயல்புவாதம் என்றால் என்னவென்று புரிகிறது.

வெக்கை வாசித்து முடித்தப் பின் அம்மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. உடனேயே அது என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது.வாழ்க்கை என்றால் என்ன என்று என்னைக் கேட்டுக்கொண்டால் அதற்கு சொல்லும் பதிலை நான் எங்கிருந்து பெறுகிறேன். அந்தப் பதில் எனக்குச் சொல்லப்பட்டதாய் இருக்குமா? அல்லது இதை எடுத்துக்கொள் என்று என் முன்னால் வைக்கப்பட்டதாய் இருக்குமா? அல்லது நானாய் உருவாக்கிக்கொண்டதாய் இருக்குமா? சிதம்பரத்திற்கு வாழ்க்கை என்றால் என்ன? அவன் அய்யாவிற்கு, அவன் அம்மாவிற்கு, மாமா, அத்தை, சின்னையா, சித்தி இவர்களுக்கு? உலகம் பல்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்களால் ஆனதுதான் என்றாலும் கடைசியில் எல்லோருமே ஒரு பிடிச் சாம்பலாய்ப் போகப்போகிறோம் என்கையில் வாழ்க்கையென்றால் என்னவென்ற கேள்விக்கு  ஆகச் சிறந்த பதிலென்று ஒன்று இருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முன்பொருமுறை நானும் என் மாமா மகனும் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு ஆபத்தான விளையாட்டுகளில், சாகசங்களில் உயிரிழப்பவர்களைப் பற்றித் திரும்பியது. நான் அவர்கள் செய்வது முட்டாள்தனம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை அற்ப விசயங்களில் ஈடுபட்டு வீணாய் விடக்கூடாது என்றேன்.அற்ப விசயங்கள் என்று யார் முடிவு செய்வது. அந்தரத்தில் கயற்றில் நடப்பவனுக்கு அதில் நடப்பதும் தவறி விழுந்து இறப்பதும்தான் வாழ்க்கை. அவன் உயரத்தில் நின்று பார்க்கையில் நாம்தான் அவனுக்கு அற்பமாய்த் தெரிவோம் என்றான். சுயமாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளும் அதே வேளையில் அதிகம் வாய்ப்புகள் இல்லாத எளிய மக்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் கொள்வதும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். 

காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூபாய் 140