விஷாலின்
கதை கேட்ட வரை யாருக்குமே புரியவில்லை. சரி கதை அவ்வளவுதான் என்று ஒதுக்க நினைத்த
நேரத்தில் சுனில் கிருஷ்ணன் கதையைப் புரிந்துகொள்ள ஒரு பார்வையை முன் வைத்தார்.
சுவாரசியமாகத்தான் இருந்தது. சற்று விரிவாக எனக்குப் பட்டதை எழுதலாம் என்று தோன்றியது,.
கதையை
இரண்டு பாகங்களாக பிரித்துக்கொள்கிறேன். முதல் பகுதியில் ஒரு குடும்பம்
கடற்கரைக்குச் செல்கிறது. இரண்டாம் பகுதியில் குடும்பத்திலிருக்கும் ஒரு ஆண் ஒரு
காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு இறுதியில் வீட்டை விட்டு
வெளியேறுகிறான்.
முதல்
பகுதியைப் பார்ப்போம்.
ஒரு
சிறுவன் தன் குடும்பத்தோடு கடற்கரைக்குச் செல்கிறான்.
அம்மா, அப்பா
மற்றும் அண்ணன் (பெரியம்மா மகன்) உடன். அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு கால்
நனைத்து விளையாடுகிறான். சற்று முன்னால் போக விரும்பவனிடம் போகக் கூடாது அலை வந்து
தூக்கிப் போய்விடும் என்று அண்ணன் சொல்ல, சிறுவன்
சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் மனதில் இருக்கும் கேள்வியைப் புரிந்துகொண்டு
பெரியவர்கள் ஒரு எல்லை வரை போகலாம் என்கிறான். மீண்டும் இலையேல் அலை வந்து
தூக்கிப் போய்விடும் என்கிறான். பின் சிறுவனின் அம்மா கூப்பிட, அவளிடம் ஓடிச் செல்கிறான். அங்கு சாப்பிட இருக்கும் பலவற்றைப்
பார்த்து ஆசைப் படுகிறான். தந்தை அவனிடம் அண்ணனைப் பார். நீ இப்படியெல்லாம் அடம்
பிடிக்கக்கூடாது. அண்ணன் சிறுவயதில் கூட இப்படியெல்லாம் நடந்துகொண்டதில்லை என்று
சொல்கிறார்.
இதுவரையிலும் அந்தச் சிறுவன் மீதும்
அவன் அண்ணனின் மீதும் கதை செல்கிறது. "யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே
இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால்
அச்சிறுவலியைப் பொறுத்துக் கொண்டான்." இவ்வரிகள் அதற்கு சிறந்த உதாரணம்.
தனக்கும் பிடித்தமானவர்கள் உடன் இருக்கும் போது ஒரு சிறுவனுக்குள் இனம் புரியாத
சந்தோசம் இருக்கும். கடலின் பங்கு என்பது இதுவரை இவ்வுறவை நமக்கு
நனைத்துக்காட்டியதே.
பின் கதை இரண்டாம் பகுதிக்கு நகர்கிறது
(என் பகுப்பில் :) )
ஒரு நாள் தூங்கி எழுந்த சிறுவன்
கடற்கரைக்கு போக வேன்டும் இன்றைக்கு என்று அவன் அம்மாவிடம் போய் சொல்கிறான். அம்மா
அவனைத் திட்டுகிறாள். கடலுக்குலாம் போக முடியாது என்று சொல்கிறாள். காரணம் சுனாமி
வந்து எல்லாம் இடமும் மூழ்கி இருக்கிறது என்று சிறுவன் தெரிந்துகொள்கிறான். சிறிது
நேரத்தில் சிறுவனின் அண்ணன் வருகிறான். எப்போது பார்த்தாலும் இவனிடம் பாசமாக
இருக்கும் அண்ணன் இன்றைக்கு முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்பது சிறுவனை
வருத்தப்பட வைக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது எனேறு தெரியவருகிறது. சிறுவனிடம்
அவன் அம்மா அண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்புகிறாள். அதை சாப்பிட மறுப்பவனை
சாப்பிட வைக்கிறாள். அண்ணன் சிறுவனின் அம்மாவிடம் (சித்தி) நான் போகிறேன்
என்கிறான். ஏதோ தப்பு நடந்துவிட்டது இனி
ஒழுங்காக இரு என்று சொல்பவளிடம் மீண்டும் நான் போகிறேன் என்று சொல்ல உன்
அம்மா வரும் வரை இரு அல்லது உன் சித்தப்பா வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட்டேனும் போ
என்கிறாள். சித்தப்பா அறைந்து ஒழுங்கா உங்கம்மா வந்தவுடன் போ என்று வரும் அவன்
தாயிடம் அனுப்பி வைக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறிப்போகும்போது ஓடி வரும் நாயை
கல்லால் அடிக்கிறான். தாய் அழுகையுடன் அவனை அணைத்துக்கொள்வதோடு கதை முடிகிறது.
முதல் பகுதியிலிருந்து முற்றிலும்
துண்டாக இரண்டாம் பகுதி தனித்து இருக்கிறது. இப்படிப் போகப்போகிறது என்று
நினைத்திருக்க சொல்லப்படாத பகுதிகளை அடக்கி ஒரு புதிர் தன்மையோடு
நிறைந்திருக்கிறது இரண்டாம் பகுதி.
எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நமக்குப் புரிவது என்னவென்றால் அண்ணன்
கதாப்பாத்திரம் ஏதோ ஒரு தவறைச் செய்துவிட அவனை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து
வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட
விரும்புவனைக் கட்டாயப்படுத்தி அவன் தாயுடன் அனுப்பி வைக்கிறார்கள். இடை இடையே
நாய்க்குட்டி, சிறுவனின் மன ஓட்டம் எல்லாம் வருகிறது.
முதல் பகுதியை மறந்துவிட்டுப் படித்தால் மற்றவை நன்றாக வந்திருப்பதாகவே
தோன்றுகிறது. ஆனால் இறுதியில் எதற்காக நாயிடம் கோபம் கொள்கிறான் என்று
புரியவில்லை. இவ்விடத்தில்தான் சுனில் கிருஷ்ணன் ஒரு பார்வையை முன் வைக்கிறார்.
கடல் பாவத்தின் அடையாளம். சில நேரம்
கரை தாண்டி வந்து நம்மை ஆட்கொண்டுவிடும்.
கடல் இக்கதையில் பாபத்தின் உருவகமாக
எப்போது ஆகிறது. ஒரு வேளை இலக்கியத்தில் கடல் பாபத்தின் உருவகம் என்று
நிறுவப்பட்டிருக்கிறது என்றால் (அவ்வகையில் கதையில் அது நிறுவப்பட தேவையில்லை
என்று எடுத்துக்கொள்ளலாம்) சிறுவனும், அண்ணனும் கடற்கரையில்
இருக்கும் மற்றவர்களும் ஏன் கால் நனைக்கிறார்கள். ஒரு எல்லை வரை போகலாமா
பாவத்தில். நாம் தள்ளி நின்றால் அலை நம்மைத் தூக்கிச் செல்லாது என்று தெரிந்துதான் சொல்கிறானா? அவ்வளவு தெளிவு இருக்கும் ஒருவன் தன்னை மீறிப் பாவத்தில்
ஈடுபடும்போது அதை உணரும் தருணம்தான் முக்கியமல்லவா? இக்கதையில்
எங்கு உணர்கிறான். காவல் நிலையத்திலா, அல்லது சித்தி,
சித்தப்பாவின் செய்கைகளினாலா அல்லது அவன் தாயைப் பார்த்தபின்னரா? நம்மை மீறி நடக்கும் விசயத்திற்குக்
கூட பொறுப்பெடுத்து குற்றவுணர்வு அடைய பக்குவமான மனம் வேண்டும். அண்ணன் கதாப்பாத்திரம்
அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு இங்கு வளரவில்லை. எனில் குற்றத்தை நினைத்து
வருந்தும் சாதாரண ஒருத்தனாகத்தான் அவன் தெரிகிறான். எனில் இங்கு கடலிற்கு வேலையே
இல்லை.
ஒரு சிறுகதையில் கதாப்பாத்திரங்கள்
பெருகப் பெருக அதன் நீளம், காலம் அதிகரிக்க நிர்பந்தம் உருவாகும்.
இக்கதையில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களும் வலுவான அறிமுகங்களோடு இருப்பதோடு
சரி. அங்கேயே நின்று விடுகிறார்கள்.அதிலும் சிறுவன் பாதிக்குமேல் தேவையே இல்லை
என்றாகிறான். நாய்க்குட்டி படம் போட்ட
படத்தில் பைபிளின் வசனம் வருகிறது என்பதைத் தவிர நாய்க்குட்டி கடைசியில் ஓடி
வருவதற்கும் அது கடவுளாவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கடலாவது ஆரம்பத்திலேயே
வருகிறது. உருவகமாகிறது என்று வைத்துக்கொண்டால் கூட கடவுள் சட்டென்று உருவகம்
கொண்டுவிடுகிறார் இறுதியில். அவரை நாம் ஏற்றுக்கொண்டால் கூட அண்ணன் கதாப்பாத்திரம்
ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
சொல்லாமல் உணர்த்துவது நல்ல யுக்திதான்
என்றாலும் இக்கதைக்கு கைகூடவில்லை. நிறைய விசயங்களை வாசகனிடமே விட்டுவிட்டதாக
நினைக்கிறேன்.
கடவுள் எப்போதும் கூடவே வருவார் என்பது
கடவுளைப் பற்றிய பழம்பெருமைகளுள் ஒன்றாகிவிட்டது.
இதுவரை விஷாலின் நான்கு கதைகள்
படித்திருப்பேன். இக்கதையில் முன்னகர்ந்திருக்கிறார்.
படிக்கச் சொன்ன கார்த்திக்கிற்கும்,
எழுதக் காரணமாக இருந்த சுனில் கிருஷ்ணனிற்கும் நன்றி :)