Sunday, March 29, 2015

பனித்துளி

    புற்களின்
    நுனிநாக்கு கூண்டுக்குள்
    சிறைப்பட்டுக் கிடக்கிறது
    நேற்றிரவு
    ரகசியமாய்...
    பெய்த மழை
    அவை
    பனித்துளிகளென
    எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....

காதற் கதைகள்

தோற்றுப்போன
என் காதலை
நான்
எப்போதோ
மறந்து போய்விட்டுருந்தேன்
என்பதை
அவன் காதலைப் பற்றி அவனும்
அவள் காதலைப் பற்றி அவளும்
சொல்ல
நினைவுக்கு வந்தது
அய்யோ என அலறியது மனம்
அவசர அவசரமாய்
ஒரு கதை எழுதுகிறேன்
கதை முழுவதும்
கண்ணீர் வடிக்கிறேன்
அவர்களிடம்
நான் கொட்டிய தண்ணீர்
குளமாயிற்று என்கிறேன்…

சற்றே வித்தியாசமாக…

அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி நடந்து வந்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி பேசினார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி சிரித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லாரும்
ஒரே மாதிரி காசு கேட்டார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் எல்லோரும்
ஒரே மாதிரி ஆசிர்வதித்தார்கள்
சற்று வித்தியாசமாக…
அவர்கள் போனபின்
அங்கிருந்த எல்லாவற்றின் அர்த்தமும்
சற்றே
மாறித்தான் போயிருந்தது…

பசியின் ருசி

“இது அப்படி ஒன்றும் சுவைக்கவில்லை,
இது அப்படி ஒன்றும் சூடாகவும்
இல்லை,
இது அரிய வகை உணவுமில்லை,
இதை தினமும் வேறு உண்கிறாய்,
பின்
எப்படி இப்படி ரசித்து உண்கிறாய்? “
என்று கேட்கும் நண்பனிடம்
நான்
பசியில் அலைந்த நாட்களைத்
தொட்டு உண்கிறேன் என்பதை
எப்படிச் சொல்ல…

Thursday, March 19, 2015

    என் எல்லா கதைகளையும்
    உன்னிடம் சொல்கிறேன்
    என் எல்லா கவிதைகளையும்
    உன்னிடம் சொல்கிறேன்
    என் எல்லா கனவுகளையும்...
    உன்னிடம் சொல்கிறேன்
    எல்லாம் ஒருநாள்
    தீர்ந்து போய்விடுகின்றன
    பின்
    எல்லாவற்றிர்க்கும்
    முற்றுப்புள்ளி வைக்கிறேன்
    ஒரு சிறிய இடைவெளியில்
    அப்புள்ளியிலிருந்து மை கசிகிறது
    ஒரு கோட்டைக் கிழிக்கிறது
    அக்கோட்டை
    இழுத்து இழுத்து
    உன் முகம் வரைகிறேன்
    அதைப் பார்த்து
    ஒரு கவிதை பாடுகிறேன்
    பின்
    அது பிறந்த கதையை
    உன்னிடம் கூறுகிறேன்

    காதலில்
    காற்புள்ளிக்கும்
    முற்றுப்புள்ளிக்கும்
    ஒரே வேலை....