Saturday, May 30, 2015

கொலைகள்

கொலைகள்
ஆண்மையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
வீரமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
கடமையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
புனிதமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
செய்தியாக்கப்பட்டன
கொலைகள்
பழகிவிட்டன
இவ்வுலகில்
தரப்படும் முத்தங்களின் சத்தங்கள்
டுமீல் டுமீலென்று கேட்கின்றன
ஏதோவொரு நம்பிக்கையில்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட கட்டிடங்களில்
இந்தச் செடிகள்...

Thursday, May 28, 2015

மரம்....

மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த‌
அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
கடவுள்களின் ஆவிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன

எல்லா கடவுள்களின் பிணங்களையும்
உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
தணியாக் கோபத்துடன்
அலைந்து திரிந்துகொண்டிருந்தன‌
அந்த மரத்தின் வேர்கள்

இதில்
அவன் தவறு ஏதுமில்லையென்று
கூடி நின்ற கூட்டத்திடம்
அந்தக் கிளைக்காக‌
கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை

இறக்குகையில்
பிடி நழுவி
விழுந்த
அக்குழந்தைகளைப்
பிடிக்க ஓடியவனை
விரட்டிச் சென்றது
ஒரு நாய்

கடப்பாறைகள் இல்லையென‌
நிம்மதிப் பெருமூச்சுடன்
கலைந்து சென்றது கூட்டம்

பாவம்
பைத்தியம் பிடித்து
அங்கேயே கிடக்கிறது
மரம்....





Monday, May 25, 2015

    நீயும் நானும்
    பார்த்துக்கொண்டதில்லை
    நீயும் நானும்
    பேசிக்கொண்டதில்லை
    என்னை உனக்கும்...
    உன்னை எனக்கும்
    தெரியவே தெரியாது
    அதனாலென்ன‌
    நான் மலை
    நீ கடல்
    என்றென்றும்
    ஓடட்டும் நம்மிடையே
    காதல் நதி
    நைட் ஷிப்ட் :-
    அள்ளி அள்ளி
    பூசிக்கொண்ட‌
    அன்றைய வெயில் போலில்லை...
    இன்றைய வெயில்
    புகுந்த வீட்டிற்குப் போன
    பெண் போலுணர்கிறேன்
    இனி
    திரும்ப‌
    வழியில்லை
    வெயிலிடம்
    வெயிலில்லா வெயில்தான்
    இன்றைய இரவுகள்
    எனினும்
    இவை
    வெயிலில்லையே…
    ஒளிச்சாரல் அடிக்காத‌
    வீட்டின் கூரையில்
    தொங்கிக்கொண்டுப் பார்க்கிறேன்
    ஒரு பெரிய குடை
    விரியும் வரை
    காத்திருக்கிறேன்
    வாலில்லை
    எனவே நான்
    எலியில்லை
    வவ்வாலும் ஆந்தையுந்தானில்லை
    நான் வாழுமிடம்
    காடில்லை
    போவது
    வேட்டைக்குமில்லை
    யாரேனும்
    பகலினில் வாங்கி
    இரவினில் குடுங்கள்
    எங்களுக்கென‌
    ஒரு சுதந்திரம்
    எங்களுக்கும் சுதந்திரம்!
    உன்
    கன்னப் பூக்களைக் கிள்ளி
    என் கைகளில் தரும்
    ஒரு சொல்லைக்
    கவிதை யென்பேன்!
    ...
    உன்
    சின்ன இதழ்களை
    சொல்லி முடிக்கும்
    ஒரு சொல்லைக்
    கவிதை யென்பேன்!
    உன்
    நெற்றிப் பொட்டினில்
    திரண்டு நிற்க வல்ல
    ஒரு சொல்லைக்
    கவிதை யென்பேன்!
    உன்
    பறக்கும் விழிகளை
    பிடித்து நிறுத்தும்
    ஒரு சொல்லைக்
    கவிதை யென்பேன்!
    உன்
    அடர் புருவங்களில்
    நாளன்று
    தங்க வல்ல
    ஒரு சொல்லைக்
    கவிதை யென்பேன்!
    உன்
    காதுகள்
    அணிந்துகொள்ள
    தேர்ந்தெடுக்கும்
    ஒரு வார்த்தையைக்
    கவிதை யென்பேன்!
    உன்
    முகம் பார்த்தே பேசும்
    இதையா கவிதை யென்பேன்?!
    உன்
    நெஞ்சுக் குழியினில்
    விழுந்து எழ வல்ல
    ஒரு சொல்லையே
    கவிதை யென்பேன்!!
    நீ பறந்து போகும் வழியில்
    நான் இருக்கலாம்
    இல்லாமலும் போகலாம்
    என்றேனும் ...
    உன்னிலிருந்து
    உதிர்ந்து விழுந்த
    இறகுகள் தேடி
    நீ வந்தால்

    நிச்சயம்
    நானிருப்பேன்
    உயிரென்னும்
    கல்லை
    உடல் மேல் வைத்து
    அங்கேயே தானிருப்பேன்...
    வெளியே
    மழை பெய்கிறது
    நான்
    ஒரு கவிதைக்காக‌
    காத்திருக்கிறேன்...
    அல்லது
    உன்னிடமிருந்து
    ஒரு குறுஞ்செய்திக்காக
    அல்லது
    நனைந்துகொண்டிருக்கிறேன்
    அல்லது...

    உன்னிடமிருந்து
    குறுஞ்செய்தி வருகிறது
    எல்லாம்
    மாறுகிறது
    வெளியே
    மழை பெய்கிறது
    நான்
    ஒரு கவிதைக்காக‌
    காத்திருக்கிறேன்
    அல்லது
    உன்னிடமிருந்து
    ஒரு குறுஞ்செய்திக்காக
    அல்லது
    நனைந்துகொண்டிருக்கிறேன்
    அல்லது...
    என் நீள் கவிதையில்
    பல வார்த்தைகளைக் காணவில்லை
    அல்லது
    எழுதப்படவேயில்லை
    ...
    நம்பிக்கைகளால்
    நிரப்பப்பட்டிருக்கிறது
    என் கவிதை
    அல்லது
    அதுயென் நம்பிக்கை
    எல்லா வரிகளிலும்
    ஒரு வார்த்தை
    இடம் பெற்றிருக்கிறது
    அதுவும்
    கரிக்கிறது
    தண்டவளாமாகிப்போன வரிகளையும்
    என்னால்
    படித்து முடிக்க இயலாத
    நீ தந்த
    வரியையும் சேர்த்து
    எல்லாம் கரைந்து போன
    ஒரு மழை நாளில்
    நான் வாழத் தொடங்குகிறேன்
    அல்லது
    வாழ்ந்து முடிக்கிறேன்
    என் சாவிற்கு
    யாரும்
    உங்கள் குழந்தைகளைத்
    தூக்கி வராதீர்கள்
    என்று...
    எழுதி வைத்திருந்தான்
    தன் மரணத்தை
    நீட்ட நினைத்த
    ஒருவன்…

சொற்கள்


அந்தப் பாட்டி
 பேசிக்கொண்டே இருந்தாள்

காலையும் மாலையும்
 பேசுவாள்
பகலிலும்
 எழுந்து எழுந்து
 இரவிலும்
 பேசுவாள்


சொல்லும் பொருளும்
 முக்கியமல்ல அவளுக்கு
 சில சமயம்
 சொன்னதையே
 திரும்பத் திரும்ப சொல்வாள்

அந்தப் பாட்டி
 வயதாக வயதாக
 சத்தமாகப் பேசினாள்

ஒவ்வொரு சொல்லுக்கும்
 அதிக இடைவெளியின்றி
 பேசினாள்

எஞ்சியிருக்கும்
 சொற்களையும்
 பேசிவிட வேண்டுமென்பதுபோல்
 பேசினாள்

பேசினாள்
 பேசினாள்
 பேசினாள்...

அவளனுப்பிய/அனுப்பிக்கொண்டிருந்த
 சொற்கள்
 அவளிடம் திரும்பாத
 ஒரு நாளில்
 ஒருத்துளிக் கண்ணீரோடு
 அவள் பேச்சு நின்றது

இப்பொழுதுதெல்லாம்
 அவள் உயிருடன்
 இருப்பதை
 அவளைத் தொட்டுப் பார்த்து
 உறுதிசெய்து கொள்கிறோம்
 அவளும்
 அப்படித்தான்
 தெரிந்துகொள்கிறாள்

"பெரியாரும் பிராமணர்களும் - அபிலாஷ்"

பூணூலும், நாமமும் பிராமணர்கள் மட்டுந்தான் அணிகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது. பூணூல் அணியும் மற்ற சமூக மக்களிடம் நீங்கள் பூணூல் அணிய வேண்டாம் என்று ஏன் யாரும் இதுவரை சொல்லவில்லை. சிலை உடைப்பு நடத்திய தி.க வினர் பெரியாரின் சிலை அவமதிப்பு நடக்கும்பொழுது ஏன் சலசலப்பும் பதபதைப்பும் அடையவேண்டும். அது வெறும் சிலைதானே? பெரியார் இல்லையே? சரி இதைப் பெரியாரும் பிராமணர்களும் என்ற கட்டுரையில் ஏன் சேர்த்திருக்கிறீர்கள். என்ன சொல்கிறீர்கள்? இதைச் செய்தது பிராமணர்கள் என்கிறீர்களா?

இன்று பிராமணர்கள் அசைவம் உண்ண ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதிவிட்டு அவர்களில் "தொட்டால் தீட்டு" பார்க்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விதிவிலக்கு என்ற வார்த்தையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளீர்கள். ஏனென்றால் அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்ட யாரும் இன்னமும் தீட்டு பார்க்க மாட்டார்கள். பிராமணர்கள் அல்லாத மற்ற சமூக மக்களும் விரதம் இருக்கும் நாட்களில் 'சுத்தமாக' இருக்க வேண்டும் என்று மற்றவர்களிடமிருந்தோ கடையிலோ சாப்பிடமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இது பிராமணர்களைப் பற்றி மட்டுமேயான பதிவு என்பதால் அதைப் பற்றி எழுதவில்லையா? தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிக்கொள்பவர்கள் 'தொட்டால்' கொல்வேன் என்று சாதியக் கொலைகளை செய்பவர்களுக்கு மேல் இல்லையா?

சடங்குகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதால் பிராமணர்களுக்குள் புகைச்சல் இருக்கிறது சரி. ஆனால் அவர்கள் மட்டும்தான் சடங்குகள் செய்கிறார்களா? தமிழகத்தில் மற்ற சமூக மக்களிடம் இல்லையா? அவர்கள் மத்தியில் அந்த புகைச்சல் இல்லையென்றால் அவர்கள் மீது அந்த விமர்சனம் வைக்கப்படவில்லையென்றுதானே அர்த்தம். வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மத்தியில் புகைச்சல் ஏன் இல்லை? இருக்கிறது என்றால் ஏன் அதைப் பற்றி நீங்கள் எழுதவில்லை. மறுபடியும் இது பிராமணர்களைப் பற்றி மட்டுந்தான் எழுதப்பட்ட கட்டுரை என்பதாலா? தமிழகத்தின் பல முனீஷ்வரன், அய்யனார்,அம்மன் கோவில்களில் "பூசாரிகள்" பிராமணர்கள் அல்ல. அங்கு நடக்கும் சடங்குகள் எல்லாம் சடங்குகள் இல்லையா என்ன?
தமிழகத்தில் பிராமணர்கள் மீது காழ்ப்பும் வெறுப்பும் உருவாக்கப்பட்டு அது இன்றளவும் அணையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனென்றால் பெரியரால் மத்த சமூக மக்களிடமும் இருந்த/இருக்கும் சாதிய வெறியை, மூட நம்பிக்கைகளை களைய முடியவில்லையென்பதே உண்மை. அதை ஒரு சமூக மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி மறைத்துவருகிறார்கள்.
ஒவ்வொரு சமூக மக்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையை வாழ உரிமையுள்ளது. நீ என்னைப்போல் பேச வேண்டும், என்னைப்போல் உடையணிந்து கொள்ள வேண்டும், என்னைப் போல் எல்லோருக்கும் வீடு கொடுக்க வேண்டும் என்று சொல்வது அடக்குமுறை, ஜன நாயகம் அல்ல. "பந்து போயிண்டே இருக்கு" என்பது அவரையும் மீறி வந்த ஒன்று. நீங்கள் சொல்வது போல் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்த பேசியிருந்தால் ஒவ்வொரு வார்த்தையும் மாறியிருக்கும். நீங்களும் இந்த ஒற்றை வார்த்தையைப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். தொடர்ந்து கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுவதால் பிராமணப் பேச்சு வழக்கு பிராமணர்களுக்கு மத்தியிலேயே அழிந்து வருகிறது என்பதுதான் உண்மை.
பிராமணர்களின் சைவ உணவுப் பழக்கத்தை நீட்டி நீட்டி அது உலகையே அழிக்க வல்லது என்று நீட்டியிருக்கும் நீங்கள் தீட்டைக் கடைப்பிடிப்பது பற்றி தலித்துக்களுக்கு மத்திய சாதியினர்மீது புகார்கள் இருக்கலாம் என்று ஒற்றை வரியில் கடந்திருப்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

தொடர்ந்து தமிழகத்தில்,மக்களை பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதவர்கள் என்று இரட்டைப்படுத்திவரும் முற்போக்காளர்கள்தான் நம் சாபக்கேடுகள். ஏனென்றால் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான சாதிகளை இரண்டாகப் பிரிப்பதன்மூலம் சாதியக் கொடுமைகளை மறைமுகமாக வளர்த்துதான் வருகிறார்கள். சாதியக் கொடுமைகள் என்பதை பிராமணர்கள் மூலம் இன்று தமிழகம் அனுபவித்து வரவில்லை. சாதிய அடுக்குளில் கடைசியில் இருக்கும் மக்களின் மீது மற்ற மொத்த சமூகமும் ஏறி உட்கார்ந்திருக்கிறது என்பதை ஒற்றை வரிகளில் கடந்து போக முடியாது.

"பிராமணர்கள் இந்துமதத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கவும், தம்மை பொதுசமூகத்துடன் ஒன்றிணைக்கவும் மதத்தை ஒரு கண்ணாடி கோப்பையை போல் பற்ற கற்க வேண்டும். " இதைவிட வேடிக்கையான வரி இருக்க முடியாது.  இந்து மதத்தை ஆரோகியமாக வைத்திருக்க பிராமணர்களுக்கு அறிவுரைக் கூறுவது கேலிக்கூத்து. பிராமணர்கள் மட்டுந்தான் இந்துமதமா? நீஙகள், எண்ணிக்கை அளவில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்திடம் அவர்களின் மதத்தைக் காக்க அறிவுரை கூறுகிறீர்கள் என்றால் அந்தச் சிறுபான்மை சமூகத்திடந்தான் ஒட்டுமொத்த அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இவ்வளவுகாலம் நடந்த போராட்டங்கள் பயனளிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. அல்லது மற்ற சமூக மக்களின் இடங்களை நீங்கள் இன்னமும் தரவில்லை என்பதைக் காட்டுகிறது.
மற்ற சமூக மக்களின் குறைகளை ஏன் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்பது அபத்தமல்ல. ஒன்று, இங்கு ஜனநாயகம் இல்லை அல்லது உங்களுக்குத் தைரியம் இல்லை. ஏனென்றால் சமூகம் என்பது, அது எதுவயப்பட்டிருந்தாலும், ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்ததுதான். எங்கு குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
அடித்து உடைக்காமல் எதையும் வளர்க்க முடியாது என்பது உண்மையல்ல. தீவிரவாதம். :) அகிம்சை மூலம் சுதந்திரமடைந்த நாட்டில் ஒரு எழுத்தாளர்/ ஒருஆசிரியர் இப்படிக் கூறுவது அது அடைந்திருக்கும் அவல நிலையைக் காட்டுகிறது.