Monday, May 25, 2015

சொற்கள்


அந்தப் பாட்டி
 பேசிக்கொண்டே இருந்தாள்

காலையும் மாலையும்
 பேசுவாள்
பகலிலும்
 எழுந்து எழுந்து
 இரவிலும்
 பேசுவாள்


சொல்லும் பொருளும்
 முக்கியமல்ல அவளுக்கு
 சில சமயம்
 சொன்னதையே
 திரும்பத் திரும்ப சொல்வாள்

அந்தப் பாட்டி
 வயதாக வயதாக
 சத்தமாகப் பேசினாள்

ஒவ்வொரு சொல்லுக்கும்
 அதிக இடைவெளியின்றி
 பேசினாள்

எஞ்சியிருக்கும்
 சொற்களையும்
 பேசிவிட வேண்டுமென்பதுபோல்
 பேசினாள்

பேசினாள்
 பேசினாள்
 பேசினாள்...

அவளனுப்பிய/அனுப்பிக்கொண்டிருந்த
 சொற்கள்
 அவளிடம் திரும்பாத
 ஒரு நாளில்
 ஒருத்துளிக் கண்ணீரோடு
 அவள் பேச்சு நின்றது

இப்பொழுதுதெல்லாம்
 அவள் உயிருடன்
 இருப்பதை
 அவளைத் தொட்டுப் பார்த்து
 உறுதிசெய்து கொள்கிறோம்
 அவளும்
 அப்படித்தான்
 தெரிந்துகொள்கிறாள்

No comments:

Post a Comment