அந்தப் பாட்டி
பேசிக்கொண்டே இருந்தாள்
காலையும் மாலையும்
பேசுவாள்
பகலிலும்
எழுந்து எழுந்து
இரவிலும்
பேசுவாள்
சொல்லும் பொருளும்
முக்கியமல்ல அவளுக்கு
சில சமயம்
சொன்னதையே
திரும்பத் திரும்ப சொல்வாள்
அந்தப் பாட்டி
வயதாக வயதாக
சத்தமாகப் பேசினாள்
ஒவ்வொரு சொல்லுக்கும்
அதிக இடைவெளியின்றி
பேசினாள்
எஞ்சியிருக்கும்
சொற்களையும்
பேசிவிட வேண்டுமென்பதுபோல்
பேசினாள்
பேசினாள்
பேசினாள்
பேசினாள்...
அவளனுப்பிய/அனுப்பிக்கொண்டிருந்த
சொற்கள்
அவளிடம் திரும்பாத
ஒரு நாளில்
ஒருத்துளிக் கண்ணீரோடு
அவள் பேச்சு நின்றது
இப்பொழுதுதெல்லாம்
அவள் உயிருடன்
இருப்பதை
அவளைத் தொட்டுப் பார்த்து
உறுதிசெய்து கொள்கிறோம்
அவளும்
அப்படித்தான்
தெரிந்துகொள்கிறாள்
No comments:
Post a Comment