அதைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
*****
தனியாக
விட்டுச் செல்ல வேண்டாம் என்று
எவ்வளவோ கூறியும் கேட்காமல் தங்களைப் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு அழைத்துச்
சென்ற பழனிச்சாமியை, இன்றக்குத் திட்டித் தீர்த்துவிடுவது போல் ஆரம்பித்த அம்மா
அரை மணி நேரம் ஆகியும்
நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருப்பதை அச்சமும் வியப்பும் கலந்த பார்வையுடன் ஒதுங்கி
நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. பழனிச்சாமி அவள் அப்பாதான். ராஜாங்கத்தைத்தான்
தனியாக விட்டுப் போயிருந்தார்கள். லட்சுமியை
விட மூன்று வயது மூத்தவன் ராஜாங்கம்.
வீட்டின் மூத்த மகன். மொத்தப் பாசத்தையும் கொட்டி
வளர்க்கப்பட்ட 'ஆம்பள புள்ள'. அவனுக்குக்
கொடுக்கப்பட்ட பாசத்தின் மிச்ச மீதிகளை உண்டு
வளர்ந்து வந்தாள் லட்சுமி. இருந்தும்
அண்ணன் என்றாள் அவளுக்கு உயிர்.
பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்பது
இவள் விசயத்தில் குழந்தையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஆம்பள புள்ளையைத்தான் கொண்டாடுகிறார்கள்
என்பதை மிகச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டாளோ
என்னவோ அண்ணனின் நிழல் அவனை விட்டுப் பிரிந்தாலும்
அவள் பிரியாமல் உடன் இருந்தாள். "எனக்கு
ரெண்டும் பசங்கதான்" என்று அவள் அம்மா
சொல்லும் பொழுது சந்தோஷமே அடைந்தாள்.
இப்படி வீட்டின் இளவரசனாகவும், தன் ஹீரோவாகவும் இருந்த
அண்ணன் ஒரு நாள் புத்தி
சுவாதீனம் இல்லாமல் போனான் என்பதைத் தாங்கிக்
கொள்ளவே முடியாதவளாய் எல்லாக்
கடவுள்களையும் ஏன், ஏனென்று கேள்விகளால் தன் மனதிலிருந்து விரட்டியடித்துக்
கொண்டிருந்தாள் லட்சுமி.
*****
என்றைக்குமில்லாமல்
அன்று வீட்டுக்குச் சீக்கிரமே வந்தான். எல்லோரிடமும் நன்றாக பேசினான் என்றுதான்
நினைவு. சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றான். நன்றாகவும்
ஏன் வழக்கத்தை விட அதிகமாகவும் சாப்பிட்ட
மகனை உச்சி முகர்ந்தாள் ராஜாங்கத்தின்
அம்மா. வீட்டில் எல்லோரும் காரணமின்றி அன்று அதிக சந்தோஷமாக
இருப்பது போல் தோன்றியது லட்சுமிக்கு.
எனினும் சிரிப்பவர்களைப் பார்த்தால் தானும் சிரிக்கும் குழந்தைப்போல்
அவளும் சந்தோஷமாகவே அன்று தூங்கிப் போனாள்.
மறு நாள் எல்லோரும் எழுந்து
இரண்டு மணி நேரம் ஆகியும்
ராஜாங்கம் எழவில்லை. வீட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து
வந்தாலும் காலையில் அவன் தான் முதலில்
எழுந்திருப்பான். அதிகமாக சாப்பிட்டதால் தூங்குகிறான்
என்று நினைத்துக்கொண்டு
அவனை யாரும் எழுப்பவில்லை.
ஆனால் நேரம் ஆக ஆக
மனம் பொறுக்காமல் அம்மா கவலைப் படத்
தொடங்கினாள். லட்சுமியிடம், "அண்ணன எழுப்புடி. என்ன
இன்னைக்கு இவ்வள நேரம் தூங்குறான்.
தலயத் தொட்டுப் பாரு காய்ச்ச.. கீய்ச்ச
அடிக்குதான்னு" என்று நச்சரிக்கத் தொடங்கினாள்.
ஆரம்பத்தில் "விடும்மா... தூங்கட்டும். எப்பவும் என் புள்ள ஒழுங்காவே
தூங்கறதில்லன்னு புலம்புவ. இப்ப தூங்கறவன எழுப்பு
எழுப்புன்ற" என்று சொன்னாலும் விடிந்து
நான்கு மணி நேரம் ஆகியும்
தூங்கும் ராஜாங்கத்தைப் பார்த்து கவலைப் படத் தொடங்கினாள்.
"அண்ணே..
அண்ணே.. எழுந்திரிண்ணே.. மணிப் பத்தாக போவுது.
எழுந்துரிச்சு சாப்டாவது தூங்குணே "
ராஜங்கம்
அசையவில்லை. பாறையென கட்டிலில் கிடந்தான். லட்சுமி எழுப்பியும் எழுந்திருக்காத மகனைப்
பார்த்துக்கொண்டிருந்த அம்மா, அதற்கு மேலும்
பொறுக்க மாட்டாதவளாய் அவளும் வந்து எழுப்பத்
தொடங்கினாள்.
ஒருக்களித்துப்
படுத்திருந்தவனின் தோளைப் பிடித்து திருப்பினாள்.
கசங்கிய நிலையில் ஒரு காகிதம் கிடந்தது. லட்சுமி
அவள் அம்மாவைப் பார்த்தாள். அவளுக்கும் பயம் தான் என்பது
கண்களிலேயே தெரிந்தது. லட்சுமிதான்
அக்காகிதத்தைக் கையில் எடுத்தாள்.
"என்னடி அது.." அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவளாய்
விழித்துக் கொண்டிருந்தவளை " படிடி.. என்ன எழுதிருக்குன்னு"
என்று கத்தினாள் ராஜாங்கத்தின் அம்மா.
"யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. யாருக்குச் சொன்னால் புரியும் என்றும் தெரியவில்லை. இன்று ஒரு பெண் குழந்தையைக் கண்டேன். ஐந்து வயது இருந்தாலே அதிகம். பேருந்து நிறுத்தத்தில் தன்னச் சுற்றி நிற்கும் கூட்டத்தைக் கண்டு மிரளவோ, வேடிகைப் பார்க்கவோ, ஒரு பொருட்டாகவோ கூடக் கருதியதாகத் தெரியவில்லை... தனக்கு நேர்ந்தது நாளை உனக்கும் நேரலாம் என்பது போலவோ இல்லை உன்னால்தான் நான் இன்று தெருவில் ஆடிக் கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் நீ இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். என்பது போலவோ தன் அம்மாவின்
மடியில் இருக்கும் தங்கையை ஒரு நொடிப் பார்த்து விட்டு அம்மா விட்டெறிந்த வளையத்தை
எடுத்துக்கொண்டு கூட்டத்தின் நடுவில் போய் நின்றது. கையில் வைத்திருந்த தட்டை அதன் அம்மா தட்டத் தட்ட அதற்கு ஏற்றார் போல் உடலை இருமுறை அசைத்துவிட்டு
வைத்திருந்த வளையத்துக்குள் தன் உடலைச் செலுத்தி வெளி வந்தது. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை
போல், கடமையைச் செய்யும் ஒரு போர் வீரன் போல் வேறு எண்ணங்கள் ஏதுமற்றவளாய் அக்குழந்தை தெரிந்தாள்.
முகத்தில் ஏதுமில்லை: சிரிப்போ, ஆசைகளோ, ஆச்சர்யங்களோ
ஏதுமில்லை. எவ்வாறு
ஐந்து வயதினும் குறைந்த ஒரு குழந்தையால் இவ்வாறு இருக்க முடியும். ஏன் அவளைப் பார்த்துக்
கொண்டிருக்கும் உலகிடமிருந்து அவளுக்குக் கேட்டுப் பெற ஒன்றுமில்லை. சுற்றிலும் நிற்கும்
மாமிச மலைகளை எப்படி அவளால் எளிதாக உதாசீனப் படுத்தி விட்டுப் போக முடிகிறது.
மனம் கிடந்து துடித்ததுஅதைவிடக் கொடுமையாய்
கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்து,"அங்க பாரு அந்த பாப்பா
எப்படி ஆடுதுன்னு.." என்று வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர்
ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அட ஆண்டவா எப்படி இவர்களால் சிரிக்க முடிகிறது.
இந்த உலகில் எதையுமே நான் பெரிதாக நினைத்ததில்லை. எந்த ஒரு விசயத்திற்கும் பெரிய மதிப்பில்லை
என்னிடம். நான் மதிப்பது, ரசிப்பது எல்லாமே மனிதர்களின் சிரிப்பைத்தான். சிரிப்புதான்
மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது என்று நம்பினேன். அதனினும் ஆகச் சிறந்த தத்துவம் வேறில்லை
என்று நினைத்திருந்தேன். ஆனால்
இன்று ஒரு வேளை உணவிற்காக ஒரு குழந்தை குழந்தையாக இல்லாமல் தெருவில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறது.
அதைப் பார்த்து இவர்களுக்கு எப்படி சிரிப்பு வருகிறது. எவ்வாறு சிரிக்கிறார்கள். நெஞ்சே
வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்த ஒன்று என் வாழ்விற்கும் மறக்க
முடியாதது. வளையத்திலிருந்து வெளி வந்த அந்தக் குழந்தை தட்டைத் தூக்கிக் கொண்டு கூட்டதிலிருக்கும்
எல்லாரிடமும் சென்றது. ஒருவர் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வேட்டியயோ, சேலையையோ
தொட்டது. காசு போடவில்லை என்று தெரிந்தால் சிறிதும் கவலையின்றி அடுத்தவரிடம் போனது.
ஒரு பெண்மனி கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்.
அவளிடம் போன குழந்தை ஒரு நொடி அந்தப் பெட்டியைப் பார்த்துவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து
ஆட்டிப் பார்த்தது. பின் தன் தட்டில் சேர்ந்திருந்தக் காசை அதன் அம்மாவிடம் குடுக்கச்
சென்றுவிட்டது. என்னால் அதற்கு மேல் அங்கு நிக்க முடியவில்லை. அதுவரை அப்பெண் குழந்தை
குழந்தை தானா என்று கேட்டுக் கொண்டிருந்த என்
மனம் அவள் குழந்தையாய் மாறிய ஒரு நிமிடம் துடி துடிதுப் போனது. ஓடிச் சென்று அக்குழந்தையை அள்ளிக் கொள்ள வேண்டும்;
போதும், நீ ஆடி உன் அம்மாவின் வயிற்றை, உன் அப்பனென்று ஒருவன் இருந்தால் அவன் வயிற்றை
நிரப்பியது போதும், தன் குழந்தையை தெருவில் தனியாக நிற்கக் கூட விடாத இந்த சமுதாயம்
உன்னை ஆட விட்டு வேடிக்கைப் பார்த்ததுச் சிரித்தது போதும் என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது.
என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.
வந்துவிட்டேன். வரும் பொழுதெல்லாம் அந்தக் குழந்தையின் நினைவாகவே இருந்தது. இன்னும்
எத்தனைக் காலத்திற்கு அதன் வாழ்க்கை இப்படி
இருக்கும். இன்னும் ஐந்து வருடங்கள், ஆறு வருடங்களில் இவள் பெரிய மனுசியாகிவிட்டாள்
என்பார்கள். காலத்திற்கும் சுமக்க வேண்டிய பாரங்கள் இரண்டைக் காலம் இவள் மார்பில் ஏற்றிவிடும். தங்கத்தில் செய்த விலங்கை அவள் கழுத்திலும், காதிலும் மாட்டிவிடலாம். சேலைச் சிறைக்குள் மறைத்து, மறைத்து அவள் உடலைச் சுமப்பாள். ஆனால் அப்பொழுதும் ஆடிக்கொண்டேதான்
இருப்பாள். அப்பொழுதும் இந்த மனித மிருகங்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும். என்னால்
அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.. எனக்கு
தீடீரென்று எல்லாம் மறக்க ஆரம்பிப்பது போல் இருக்கிறது. கண் முன்னேயே எல்லாவற்றின் பெயரும் அழியத்
தொடங்குகிறது. என் தலைக்கு மேல் நிழல் ஒன்று சுற்றிக்கொண்டே இருக்கிறது. எதன் மேல்
நான் படுத்திருக்கிறேன்... படுத்திருக்கிறேன்.. படுத்திருக்கிறேனென்றால்.. அம்மா..
அம்மா எங்கே... .."
அக்கடிததில் அதற்கு மேல் ஒரே
கோடு கோடாக இருந்தது. வார்த்தைகள்
என்று ஏதுமில்லை. படித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு தலை சுற்றியது. லட்சுமியின்
அம்மாவுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அவள்
வாய் விட்டு அழத்தொடங்கினாள். " டேய் ராஜா
என்னடா இது.. எழுந்திரிடா.. எழுந்திரிடா
என்னடா எழுதி வச்சுருக்கா" என்று
அவன் மேல் விழாதக் குறையாய்
அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த பழனிச்சாமியும்
அப்பொழுது வந்து சேர்ந்தார். எல்லோருமாக
சேர்ந்து ராஜாங்கத்தைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். டாக்டர் அவனைப் பரிசோதித்துவிட்டு
அவனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை எனவும் மன நலம்
பாதிக்கப் பட்டிருப்பது போல் தோன்றுவதாகவும் அவரே
ஒரு மருத்துவரை
பரிந்துரைத்து அவரிடம் அழைத்துப் போகும்படியும்
கூறினார்.
மன நல மருத்துவர் அவனைப் பரிசோதித்தார். அவன்
எழுதியிருந்தக் கடிதத்தைப் படித்தார். "இவனுக்கு ஏற்பட்டிருப்பது பெர்சனாலிட்டி டிஸார்டர்" எனவும் அப்படி என்றால்
என்னவெனவும் விளக்கினார். ஆழ் மனதில் இருந்து
கொண்டே இருக்கும் விசயங்கள் திடீரென்று ஒரு நாள் வெளிப்படத்
தொடங்கும். மனம் பிறழும் என்றார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்
மகன் பைத்தியமாய்ட்டானா என்று ராஜாங்கத்தின் அம்மா
திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.
அன்றிலிருந்து
ராஜாங்கத்தைத் தனியாக விடுவதேயில்லை யாரும்.
தூக்கத்தி லேயே உயிர் போனால்
அது நல்ல சாவு என்பார்கள்.
அப்படித்தான் போக வேண்டும் என்று
விரும்புவார்கள். அதுபோல் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது
அவன் மனம்.
*****
வீட்டிற்குள்
நுழைந்தவர்களுக்கு அதிர்ச்சி. ராஜாங்கம் படுத்திருந்த கட்டில் சரிந்து கிடந்தது.
அவன் மலம் கழித்திருந்தான். அவன்
மூத்திரம் அவன் தலையருகே வந்துவிட்டிருந்தது.
பதறிப் போய் லட்சுமி அவனை
நகர்த்தினாள். லட்சுமியின் அம்மா தண்ணீர்க் கொண்டு
வர ஓடினாள். பழனிச்சாமிக்கு ராஜங்கத்தின் கோலத்தைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
*****
No comments:
Post a Comment