Wednesday, September 3, 2014

நினைவலைகள்

மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள் இருக்கும், சரியாக நினைவிலில்லை. தலைக் குளித்துவிட்டு முதன்முறையாக நானே தலைத்துவட்டிக்கொண்டு அம்மாவிடம் போய், ” அம்மா நானே தோட்டின்டேன்” என்றேன்.சிரித்துக் கொண்டே”Very Good” என்றாள். பெருமிதம் தாளவில்லை. அடுத்து ஒவ்வொரு முறைத் தலைக் குளிக்கும் பொழுதும் அந்த Very Goodக்காக போய் நின்றேன். ஆனால் ஏனா அதன் பிறகு அவள் V.Good தரவேயில்லை. முகத்தில் மீசை அரும்பத் தொடங்கும் வரை என் எல்லா நாட்களும் அம்மாவிடம் சொல்லிவிட்டே தொடங்கியது; அம்மாவிடம் சொல்லிவிட்டே முடிந்தது. பள்ளிகளில் (ஆம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் பொழுது நான்காவது பள்ளி) சேர்த்தது முதல், தாவங்கட்டை உடைந்து ஏழு தையல் போட பக்கத்து ஊருக்குத் தூக்கிக்கொண்டது ஓடியது தொடங்கி எல்லாமே அம்மாதான். அம்மாதான் புத்தகங்களை அறிமுகப்படுத்தினாள்.சாண்டில்யனையும், கல்கியையும் அறிமுகப் படுத்தினாள். வேஷ்டிக் கட்ட கற்றுக் கொடுத்ததும் அவள்தான். தமிழ் டீச்சர் அடித்து கையில் ரத்தம் வந்ததும் பள்ளியில் வந்து சண்டைப் போட்டதும் அவளே. அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சைக்கிளில் கால் எட்டிய திருநாள் அன்று அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று இரண்டு கைகளையும் விட்டு ஓட்டிக்கொண்டு போய் வீட்டின் முன் நிறுத்தி்னேன். கும்பிட போன தெய்வம் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். ” அம்மா, இங்க பாரேன். எனக்கு கால் எட்றது” என்றேன். ” த்து.. இவ்வளவுதானா” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். எனக்கு பெருத்த ஏமாற்றம். அதன்பிறகு நான் அம்மாவிடம் சொல்லும் விசயங்கள் குறைந்துக்கொண்டே வரத்தொடங்கின.
“போய்ட்டு வரேன்ம்மா” என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது கண் கலங்க கையசைத்து வழி அனுப்பும் அம்மாவைப் பார்க்கும் பொழுது காலம் fast forwardல் காணொளியாய் வந்து போனது.
மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு கிளம்புகிறேன். திருச்சியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மணப்பாறை. ஆறு முப்பதுக்கு திருச்சியிலிருந்து கிளம்பும் பல்லவன் எக்ஸ்பிரஸிற்கு காலை நான்கு முப்பதிற்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கும் பொழுது எங்கள் தெரு ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருந்ததது. அதிகாலை இரண்டு மணிக்கே கூவி என்னை எழுப்பிவிட்ட சேவல் வீட்டின்முன் கட்டப்பட்டிருந்த ஆட்டுக் குடும்பத்துடன் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தது. ” உனக்கு கோழியே கிடைக்காது போ ” என்று அதற்கு ஒரு சாபம் கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
தெருமுனையில் எதையோ தேடிக் கொண்டிருந்த நாய் ஒன்று தலையைத்தூக்கிப் பார்த்தது. வீட்டை விட்டு வெளியே போகும்பொழுது ‘ போறேன்னு செல்லக்கூடாது, போய்ட்டு வரேன்னு சொல்லனும்’ என்பார்கள். நானோ அந்த நாயிடம் நான் போறேன் திரும்பி வரமாட்டேன் என்று ரகசிய ப்ரேயர் செய்துவிட்டு முன் நகர்ந்தேன். தெருவைத் தாண்டியவுடன் ஒருவர் ஒரு கையால் பல் தேய்துக்கொண்டே ஒரு கையில் மான் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். மானா? அட.. இல்லை அது நாய்தான். ஆனால் மிக விநோதமாக இருந்தது. அதற்கு முன் அப்படி ஒரு நாயைப் பார்த்ததேயில்லை. அதன் முகம் மான் மற்றும் ஆடுகளின் முகங்கள் போல் முன் நீண்டிருந்தது. அதன் கால்கள் கங்காருவின் கால்கள் போல் இருந்தன. காதுகள் இரண்டும் தலைக்குமேல் பக்கத்து பக்கத்தில் இருந்தன. என்ன ஜந்துவோ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டு தெரு தாண்டியவுடன் தவளைகள் கத்தும் சத்தும் கேட்கத் தொடங்கியது. தெரு விளக்குகள் எரியவில்லை. பயத்தில் கத்துகின்றனவா? இரவுப் பூதம் எப்படி இதன் இடைவிடாத சத்தத்தைச் சகித்துக்கொள்கிறது. சட்டென்று கண் முன்னே பூமராங் போல் ஒரு பறவை பறந்து போனது. அதன் சிறகசைவு இரவு கண் சிமிட்டுவதுபோலிருந்தது. அடுத்த சந்தில் சிவன் கோயில். நான்கு வருடங்கள் விடாது சென்ற கோவில். இக்கோவில் பாண்டியர்காலத்து கோவில் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். உறுதியாகத் தெரியவில்லையெனினும் அம்மா சொல்லிவிட்டதால் அது பாண்டியர் காலத்துக் கோவில்தான். அம்மா புதிதாக எந்த விசயத்தைப் படித்தாலும், தெரிந்துகொண்டாலும் எங்களிடம் சொல்லும்பொழுது ஒரு குழந்தையின் குதூகலத்துடன், கண்கள் விரிய, குரலில் அதிக சந்தோஷத்தை வெளிப்படுத்தியவாறு சொல்வாள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதை ரசிப்பதற்காகவே அவள் சொல்வதை மறுத்து எதுவும் சொல்ல மாட்டேன். “கண்ணா, உனக்குத் தெரியுமா? நம்ம சிவன் கோவில் பாண்டியர் காலத்தச் சேர்ந்ததாமா. தூண்கள்ள மீன் சின்னம் இருக்கு”. அம்மாவிடம் இதனால்தான் எல்லாக் குழந்தைகளும் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன போலும்.
வேப்பிலை மாரியம்மன் கோவிலருகே திருச்சி பேருந்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மணப்பாறை கடந்த ஐந்தாண்டுகளில் நிறையவே மாறியிருக்கிறது. ட்ராபிக் போலிஸ், ரயில்வே மேம்பாலம், சி.பி.எஸ்.சி பள்ளிகள், பதினொன்றாவது படிக்கும் தன் பையனை பிரசவம் பார்க்க வைத்த டாகடர், பத்தாவது படிக்கும் பையன் தன் கிளாஸ் டீச்சர் வீட்டிற்குச் சென்று,நீங்க என்ன லவ் பண்றேன்னு சொன்னாத்தான் போவேன் என்று அடம்பிடித்த சம்பவம்- மணப்பாறையின் புது வரவுகள். நீண்ட கால அடையாளங்கள் – முறுக்கு மற்றும் மாட்டுச் சந்தை.
கட்டிடங்களிலும் வாகனங்களிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றம் மக்களின் மனங்களில் நிகழ்ந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நான் ஊருக்கு வரும் பொழுது குழாய் ஸ்பீக்கரில் ஒருவர் இவ்வாறு அனௌன்ஸ் பன்னிக்கொண்டிருந்தார்:” அன்பான காட்டுப்பட்டி வாழ் பெருங்குடி மக்களே, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறவுள்ளது. எனவே தாங்கள் குடும்பத்துடன் வந்து விழாவைச் சிறப்பித்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறோம்” அடப்பாவி இவ்வளவு நேரம் நல்லாத்தான பேசுன கடைசில வந்து ஏன்டா கேட்டுக்கொள்ளப்படுகிறோம்? சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் போனால் அம்மாவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இந்த ஊர் இப்படித்தான் இருந்தது என்பதற்கு அடையாளமாய் இன்னும் இங்கே இறந்த காலத்தின் மிச்சங்களாய் நிறைய இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் கோவில் விசேஷங்களில் போடப்படும் நாடகங்கள்.
வீட்டிற்குச் சென்ற மறுநாள் இரவு காளியம்மன் கோவிலில் நாடகம். என்ன நாடகமென்று தெரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட் அணியினர் பேனர்களில் வரவேற்றனர். நாடக மேடையருகே மைக் செட் போடப்பட்டிருந்தது. “… மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம். நேற்று நடைப்பெற்ற அன்னதானத்தில் சிறப்பாக உழைத்த தென்றல் பாய்ஸ் அணியினரை விழாக் கமிட்டியினர் சார்பாக மனமாரப் பாராட்டுகிறோம். மீண்டும் மீண்டும்… “ நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். ” இங்க பாருங்கடா சொல்லச் சொன்னீங்க சொல்லிட்டோம். அப்பறம் வந்து அடிக்கலாம் கூடாது ” என்று சொல்வதுபோலிருந்தது. ‘கேட்டுக்கொள்ளப்படுகிறோம்’ அடுத்து அரை மணிநேரம் யாரையோ விழா மேடைக்கு அழைத்துக்கொண்டேயிருந்தார். சிறிய கோவில் என்பதால் மக்கள் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். பாய் விரித்து போர்வைக்குள் தங்களை ஒளித்துக்கொண்டு நாடகம் தொடங்குவதற்காக காத்திருந்தனர். நினைவுகள் இருபது வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றன.
அப்பொழுது M.கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்தோம். அங்கு நடக்கும் திருவிழாக்களில் மூன்று நாடகங்கள் தொடர்ந்து மூன்று இரவுகள் நடக்கும். அப்படி ஒரு நாடகத்தை முன்னால் உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எமதர்ம ராஜா எமலோகத்தில் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் காட்சி. ஆட்கள் பற்றாக்குறையால் முன்னால் உட்கார்ந்திருந்த சிறுவர்களை மேடையேற்றி விட்டனர். எமன் என்னை எண்ணைச் சட்டியில் போட்டு வருக்கச் சொன்னார். அம்மாவிடம் நான் நாடகத்தில நடிச்சேன்..நாடகத்தில் நடிச்சேனென்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.
நினைவுகளில் மூழ்கியவனாய் திருச்சி வந்து சேர்ந்த பொழுது மணி ஆறு. உங்கள் கடை பொங்கலை விட பெருமாள் கோவில் பிராசதம் அதிகமாக இருக்கும் என்று கண்டு கொள்ளாத டிபன் சாப்பிட்ட கடைக்காரனிடம் சொல்லிவிட்டு இரண்டாவது பிளார்ட்பாரமில் நின்று கொண்டிருந்த பல்லவனில் அரை டவுசர் வெள்ளக்காரனோடு ஏறி இதை எழுத ஆரம்பிக்கையில் மணி ஆறு நாப்பது. :)

No comments:

Post a Comment