Sunday, June 22, 2014

“பிணத்திடம் வேறு என்ன பதில் இருக்கும்…”

(இந்தக் கதையில் வரும் கதை சொல்லியின் சில கருத்துக்கள் யார் மனதையும் புன்படுத்துவதற்கல்ல. சரி, தவறு எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை. முரண் பட்ட கருத்துக்கள் கதை சொல்லி சொன்னான் என்றால் அது அவன் தனிப்பட்ட அபிப்பிராயம் என்றே எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி)

செல்பேசியில் ஒன்பது மணி ஆயிற்று என்று அலாரம் அடித்தது. அரை மணி நேரம் எதைப் பற்றியும் சிந்திக்கக்கூடாது என்று அலாரம் செட் செய்துவிட்டு நடக்கத் தொடங்கினேன். அதுபோல் எதைப் பற்றியும் சிந்திக்காமல்தான் நடந்தேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு வேறு எதுவும் நினைவிலில்லை. அரை மணி நேரம் முடிந்துவிட்டது என்று மூளைக்கு புரிந்தவுடன் தேக்கி வைத்திருந்த அணை நீரைத் திறந்துவிட்டது போல் என் நினைவுகளைத் திறந்துவிட்டு விட்டது. கால்கள் அதற்கு மேல் நடக்க முடியாது, வீட்டிற்கு திருப்பு என்னை என்று கட்டளை இடுவது போல் இருந்தது. இப்பொழுது எனக்கு உடனே வீட்டிற்கு போக வேண்டும். வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஓடத் தொடங்கினேன். வரும் பொழுது எதை எல்லாம் கவனித்தேனோ அதையெல்லாம் திரும்பும்பொழுதும் கவனித்தேன். ஆனால் நினைவில் தான் எதுவுமில்லை. ஏதேதோ எண்ணங்கள்….

நேராக என் அறைக்குச் சென்று டியூப் லைட்டைப் போட்டு, விரித்தே கிடந்த பாயில் விழுந்தேன். மூச்சு திணறுவது போல் இருந்தது. அப்படியே சற்று நேரம் போயிற்று. எழுந்து பீரோவில் இருக்கும் ஆள் உயரக் கண்ணாடி முன் நின்றேன். மொத்த மன பாரத்தையும் ஒரு சொட்டு கண்ணீராய் வைத்திருந்தது வலக் கண். அதற்கு மேல் வெளிச்சம் பிடிக்கவில்லை. வெளிச்சம் என் தனிமையை எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது. லைட்டை அனைத்துவிட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். மெழுகுவர்த்தி மனதில் மேலும் பல நினைவுகளை ஏற்றிவிட்டது. கடுப்பில் மெழுகுவர்த்தியை அனைத்துவிட்டு மீண்டும் பாயில் விழுந்தேன். மெழுகுவர்த்தி புகை சற்று நேரம் சுற்றி சுற்றி வந்துதது. பிறகு அதுவும் என்னை விட்டு எங்கோ போய்விட்டது.

                                                   *****

மூன்று மணி நேரத்திற்கு முன்பு:

அவளை எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் சந்தித்தேன். ராஜி. என் காதலி. மூன்று மணி நேரத்திற்கு முன்பு வரை. எப்பொழுதும் போல் தான் இந்த நாளும் விடிந்தது. ஆனால் எப்பொழுதும் போல் முடியவில்லை. ராஜி வந்ததிலிருந்து அரை மணி நேரம் எதுவுமே பேசாமல் இருந்தாள்.(இப்பொழுது புரிகிறது நான் ஏன் அரை மணி நேரம் டைம் செட் பண்ணிக்கொண்டு நடந்தேன் என்று) பிறகு இனி உனக்கும் எனக்கும் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். ஏன் எதற்கு என்று எதுவுமே சொல்லவில்லை. இரண்டு மணி நேரம் அங்கேயே திக்பிரமைப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தேன். பின்பு வீட்டை நோக்கி நடக்கலானேன், எதிரில் வருபவர்களிடம் வழிக் கேட்டுக்கொண்டே. கடைசியாக ஒருவர் வழி சொல்லிவிட்டு, வீட்டிலியே விடுவதாக சொல்லிவிட்டு, வீட்டிலும் வந்து விட்டார். போகும் பொழுது ” டேய், ஆனாலும் ஒவரா தாண்டா ஆக்டு குடுக்குற” என்று சொல்லிவிட்டு போனார். என் நண்பர்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டென்.

                                                   *****

எவ்வளவு நேரம் விழித்திருந்தேன் என்று தெரியவில்லை. எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கனவு: ஆழ்துளாய்க் கிணற்றில் விழுந்து விடுகிறேன். மூச்சு விட இயலவில்லை. கண் திறக்க இயலவில்லை. முழுவதுமாய் கீழே விழுந்திருந்தாலேனும் உயிர் பிரிந்திருக்கும். பாதியில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேரம் இங்கிருப்பேன் என்று தெரியாது. நான் இங்கிருப்பேன் என்று யாருக்கும் தெரியாது. எப்படிச் சொல்வது. இந்தக் கிணறு இங்கு எப்படி வந்ததென்றே தெரியாதென்று……

கடவுள் எங்கிருக்கிறார் என்று கேட்கும் பொழுதெல்லாம் மேலே என்று ஆகாயத்தைக் காட்டுபவர்க ளைப் பார்த்து சிரித்திருக்கிறேன். கடவுள் என்னைத் தாங்குபவர். என் சுக, துக்கங்களைத் தாங்குபவர். என் சரி, தவறுகளைத் தாங்குபவர். அவருக்குள் எனக்கு இடமளித்துள்ளார். என்றால் கடவுள் இந்த மண்ணில் அல்லவா இருக்க வேண்டும், என்று வாதிடுவேன். ஆனால் இப்பொழுது அவர்கள் கூரியதுதான் சரியோ!”

தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன். மூச்சு திணறியது உண்மைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக என் அறையில் இருந்தேன். கிராண்ட் கேன்யானில் முடமாக தனித்திருப்பதற்கு ஆழ் துளாய்க் கிணற்றிலியே இருக்கலாம். சாவு அருகில் இருப்பது தனிமையின் துயரைத் தாங்கும் கடைசி உந்துதலைத் தரும். எனக்கு அந்த அறை முழுவதும் நூறு யானைகளின் கருவிழிகளால் மட்டும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. காதலி என்னை விட்டு பிரிந்து விட்டாள். என்னை விட்டு பிரிந்து விட்டாள்.யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் ஏன் என்னை விட்டு போனாள் என்று சொல்வார்கள். யாரிடம் சொன்னால் இனி நான் என்ன செய்வது என்று சொல்வார்கள். இல்லை யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால்,” போறா,விடு.. ஒன்னு போனா இன்னொன்னு..” என்று உளறுவார்கள். செருப்பால் அடிக்க வேண்டும். உயிர் ஒன்று போனால் போனது தான். மீண்டும் மீண்டும் முளைப்பதற்கு அது மயிறில்லை.என்னை யாராலும் இந்தக் குழியிலிருந்து மேலே தூக்க முடியாது.

ஒரு முறை என் தோழி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “Love is not life. Even after you lose everything you had in your life,one thing would be left with you and that is Life” என்றேன். “ Yes, but remember onething love is what makes your life complete” என்றார். உண்மை தான். Now i feel incomplete.

” என் உயிர் என்னை விட்டு போய் விட்டது என்றேன்..
என்னைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்
என்னிடம் வந்து சிலர் பேசினார்கள்
சிலர் திட்டினர்கள்
சிலர் ‘திருத்தினார்கள்’
சிலர், எனக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கிறேன் என்றார்கள்
என் தாய் தந்தை அழுது புலம்பினர்
எல்லோரும் என்னிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டனர்
எல்லாவற்றிர்க்கும் மெளனமாகவே இருந்தேன்
பிணத்திடம் வேறு என்ன பதில் இருக்கும்…”


 மீண்டும் தூங்கிப் போனேன். எப்படி தூக்கம் வருகிறது என்று கேட்கிறீர்களா?. அதுவும் தெரியவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் புரியவில்லை.     
      
                                                 *****

காலத்திற்கு எந்த கருணையும் யார் மீதும் இருப்பதில்லை. உடைகளை மாற்றிக் கொண்டு அதன் வேலைக்கு எப்பொழுதும் வந்து விடுகிறது. என் மொத்த எடையயும் இதயம் சுமப்பது போல் எனக்கும் மறு நாள் விடிந்தது

No comments:

Post a Comment