மின் கம்பம் ஒன்றில்
ஒரு காகம்
ஒரு வடையுன் நின்றிருந்தது
இல்லை உட்காந்திருந்தது
அதுவுமில்லை..
தெரியவில்லை..
கீழே ஒரு நாய்
நின்றிருந்தது
ஆம்
அது நரி இல்லை
காகத்திடம் வடையைப்
பெற்று செல்லவே
நாய் நின்றிருந்தது
ஆம்
அது நரி போலில்லை
கண் சுழல
கதை சொல்லத் தொடங்கியது
காகம்
இது
கதையல்ல
நிஜம்
ஆம் நாயே
நான் ஒரு பாட்டியிடம் தான்
இந்த வடையைச் சுட்டேன்
பாக்கெட் செய்யப்படவில்லையல்லவா
பாட்டி மரத்தடியில் தான்
வடை சுட்டாள்
ஆம் நாயே
அங்கு மரம் இருந்தது
மரம் என்றால் மரங்கள்
மரங்கள் என்றால் பறவைகள்
பறவைகள் என்றால் பூக்கள்
பூக்கள் என்றால் வசந்தம்
வசந்தம் என்றால் மழை
மழை என்றால் மாதம் மும்மாரி
தண்ணீர்
ஆற்று நீர்
ஊற்று நீர்
ஆஹா.. ஆஹா…
வாய் பிளந்த காகத்தின்
வடைக் கீழே விழுந்தது
மட நாய்க்கு
ஒரு கேள்வி முளைத்தது
“காக்கையே
எல்லாம் இருந்த இடத்திலும்
ஏன் நீ திருடி வந்தாய்”
ஆம் நாயே
ஏனென்றால்
அங்கு எல்லாமும் இருந்தது
காக்கை திருடும்
கள்ள நரி
சூது செய்யும்
புலி கொல்லும்
புரவிகளோடும்
பகலினில் சூரியன்
இரவினில் நிலவு
காலையில் வெளி போகும்
எல்லா உயிரும்
மாலை
வீடு திரும்பும்
அஃதே உலகம்
அதுவே வாழ்க்கை
என்று நாய்க்குரைத்துவிட்டு
காகம் பறந்து போனது
நாயும்
அவ்விடம் தேடி
ஓடிப் போனது
No comments:
Post a Comment