“புத்தனாவது சுலபம்”- எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் பதினாறு கதைகள்.இலக்கிய வாசிப்பைத் தொடங்குவோர், சிறுகதைகளில் இருந்து தொடங்குவதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாவல்களை வாசிப்பதற்கும், கவிதைகளை புரிந்து கொள்வதற்கும் முதலில் அதிக உழைப்பு தேவைப்படும். இந்த புத்தகத்தின் முன்னுரையில் எஸ்.ரா, சிறுகதை என்பது நீந்திக்கொண்டிருக்கும் மீனை வரைவது போன்றது என்கிறார். ஜெ.மோ அவர்கள் மின்னலின் ஒளியில் உலகை ரசிப்பது போன்றது என்கிறார்.
எனக்கு கவிதைகளுக்கு அடுத்து சிறுகதைகளே பிடிக்கும். கவிதை என்று நினைத்தவுடன் கவிதையப் பற்றிய என் புரிதலை இங்கு பதிவு செய்யாமல் முன்னகர இயலவில்லை. கவிதை என்பது நாம் பார்க்கும் வானம் போன்றது. உண்மையில் வானம் என்று தனியாக எதுவுமில்லை. ஆனால் அங்கு எல்லாமும் இருக்கிறது.
இனி புத்தகத்திற்கு வருவோம்.
எஸ்.ரா அவர்களே குறிப்பிட்டபடி பெரும்பாலான கதைகளில் பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக இருக்கிறார்கள். இருக்கதான் வேண்டியிருக்கிறது. இன்னமும் சொல்லப் போனால் இதெல்லாம் போதாது. ஆசிட் ஊற்றப்படுவதும், அடுப்படியிலேயே முடங்கிக் கிடப்பதும் இன்றும் முற்றிலும் ஒழியவில்லை.
இரண்டு குமிழ்கள் என்கிற கதை ஒரு பெண் காவலாளி, மற்றும் பெண் கைதியைப் பற்றியதும் ஆகும்.
சமுதாயத்தில் இருவேறு நிலைகளில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் அபத்தங்களையும், அநியாயங்களையும் ஆசிரியர் அழகாக பதிவு செய்திருக்கிறார். எல்லா நிலைப் பெண்களூம் அபத்தங்களால் சூழப்பட்டவர்கள்தான் போலும். டயானா, இங்கிலாந்தின் முன்னாள் இளவரசியைப் பற்றி,” அவர் தங்கக் கூண்டிலிருக்கும் கிளி” என்று படித்தது நினைவுக்கு வருகிறது.
ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை, யட்சன் தனித்திருக்கிறான்,
சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது, சொந்தக்குரல், கோகிலாவாணியை யாருக்கும் நினைவிருக்காது ஆகிய கதைகள் மனத்தை பிசையச் செய்வன. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெண்கள் அடக்கு முறைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கதைகள்.
இதில் இரண்டு கதைகள் சிறுவர்களுக்கு கூறும் நீதிக்கதைகள் போல் உள்ளன. அவை பேசும் கற்கள், சிறுமீன். மேலும் ஒரு கதை எனக்கு பிடிக்கவில்லை. அக்கதையின் பெயர் சீட்டாட்டம். கவிதைகளில் வார்த்தைகளை வைத்து விளையாடுவதைப் போல் ஆசிரியர் சிறுகதையாய் விளையாடியிருக்கிறார்.
எல்லா நூற்றாண்டுகளிலும் மனிதர்கள் மூட நம்பிக்கைகளினால் பலரை கொன்று குவித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கதை- ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே. பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த விஞ்ஞானியை மதவாதிகள் உயிரோடு எரித்ததை மீள் உருவாக்க கதையாக தந்திருக்கிறார் ஆசிரியர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என்று இந்தியப் பெண் ஒருவரைக் கொன்ற நாடு அதன் பக்கத்து நாடாக இருக்கும்.
பெண் என்று எவருமில்லை என்கிற கதை புதுமைப்பித்தனின் கதை ஒன்றை நினைவூட்டுகிறது( பெயர் மறந்துவிட்டேன், மன்னிக்கவும்)
இரண்டு கதைகள் எனக்கு அதிகம் பிடித்தன். எதார்த்தத்தின் மிக அருகில் சென்றவைக்காக – இரண்டு குமிழ்கள் மற்றும் கதவைத் தட்டாதே அஷ்ரப்
எஸ்.ரா பல கதைகளில் அருகாமை என்கிற சொல்லை அருகில் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சி அளித்தது. அருகாமை என்றால் அருகில் இல்லாமை என்பது பொருள். பெரிய எழுத்தாளர்கள் கூட இந்த பிழையைச் செய்வது வருத்தமளிக்கிறது.
இந்தப் பதிவு புத்தக வாசிப்பைப் பற்றிய என் முதல் பதிவு
‘புத்தனாவது சுலபம்’- விலை ரூபாய் 150. உயிர்மை வெளியீடு. பிளிப் கார்ட்டில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment