உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது கவிதைகள் கூறுங்கள் என்று நண்பர்கள் கேட்கும் பொழுது எனக்கு எதைச் சொல்வது இல்லை எவற்றைச் சொலவது என்று தெரியாமல் கஷ்டப் படுவேன். இதற்கு முக்கியக் காரணம் என் ஞாபக சக்தி. என்னால் ஒரு விசயத்தை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவே முடிவதில்லை. நான் எழுதியவற்றில் கூட என்னால் ஒன்றிரண்டைத் தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.பல வருடம் பழகிய நண்பர்களையெல்லாம் ஒரு சில ஆண்டுகள் பார்க்கவில்லை என்றால் யார் நீங்கள் என்று கேட்ட அனுபவமெல்லாம் உண்டு. இதனாலேயே இப்படி யாராவது கேட்டால் “அப்படி ஒன்னு ரெண்டுலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று சொல்லி சமாளிப்பேன். ஆனால் நகுலனின் இக்கவிதை என்றைக்கும் என் நினைவை விட்டு அகலும் என்று தோன்றவில்லை.
“எனக்கு யாருமில்லை நான் கூட” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.
இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,
ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது போலிருந்தது.
தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.
என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment