Thursday, October 9, 2014

ஏனோ…

வெள்ளிக்கிழமைக‌ளில்
ஒலியும் ஒளியும் காண‌
காத்திருந்த‌ நாட்க‌ளை
நாட்குறிப்புக‌ளில்
தேடிக்கொண்டிருக்கும்பொழுது
கையில் சிக்கின,
என‌க்காய் காத்திருந்து
வ‌ந்த‌வுட‌ன் மேலே விழுந்து விளையாடும்
ம‌து என்னும் என் நாய்க்குட்டியுட‌னான‌ நாட்க‌ள்.
வேறெதுவும் கிடைத்துவிட‌க் கூடாதென
அவசரமாய் மூடி வைக்கிறேன்,ஏனோ
சில‌ க‌ருப்பு ப‌க்க‌ங்களுக்கு
இன்ன‌மும்
காவ‌ல் நிற்கிற‌து
ம‌து
**
சொர்கமோ நரகமோ
போய் விடலாமென்று
நடந்து சென்று கொண்டிருந்தேன்

பின்னால் வந்து மோதியது
ஒரு மிதி வண்டி

முன்பொரு நாள்
என் பிருட்டத்தில் வந்து
முட்டிய ஆட்டுக்குட்டியின்
நினைவு ஏனோ வர
சிரித்துக் கொண்டேன்

சிரிக்கத் தொடங்கிய
நொடியிலிருந்து
வெகு தொலைவில்
சொர்கமும்
நரகமும்…
**
அந்தப் படத்தைப்
பார்த்து
அந்த இருவரும்
காதலிக்கத் தொடங்கினர்

அந்தப் படத்தில்
வருபவர்களைப்போலவே
காதலித்தனர்

ஊடலும் கூடலும்
அப்படியே

அப்படத்தில்
திருமணம் நடந்த
அதே இடத்தில்
இவர்கள் திருமணமும்

அப்படம்
அத்துடன் முடிவடைந்தது

இப்பொழுது
இவர்களின்
முடிவில்
தொடங்க இருக்கிறது
அடுத்தப் படமொன்று

No comments:

Post a Comment