கானகன்
லக்ஷ்மி சரவணகுமார் அவர்கள் எழுதிய நாவல். ஆசிரியரின் பெயரை இந்நாவலுக்கு முன் கேள்விப் பட்டிருந்தாலும், அவரின் படைப்புகளை படிப்பது இதுவே முதல் முறை. அகநாழிகை பதிப்பகத்தில் நடந்த கானகன் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தேன். அதுவே இப்புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவ்வளவு காலம் கழித்துப் படிக்கவும் காரணம். ஆம். மூத்த எழுத்தாளர் சாரு அவர்கள் படு பயங்கரமாக அறிமுகப் படுத்தி வைத்தார். சாருவின் மதிப்புரைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்ட காரணத்தால் மனதில் எழுந்த முன் முடிவுகளை ஒத்தி வைக்க சற்று கால தாமதமாகிவிட்டது.
இந்நாவலுக்கு குட் ரீட்ஸ் தளத்தில் நான் நான்கு நட்சத்திரங்கள் குடுத்துள்ளேன் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
கதையை மிகக் குறுகிய காலக்கட்டத்திற்குள் எழுதி முடித்ததாகவும், இன்னும் கூட எழுதப்படாமல் சிலவை விட்டுப் போயிருக்கலாம் என்று ஆசிரியர் அறிமுகக் கூட்டத்தில் சொன்னார். பின்பு நாவலைப் பற்றி எழுதப்பட்ட/பேசப்பட்ட விமர்சனங்களில் முடிவு மிகவும் நாடகத்தனமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. அதையே நானும் கூறுகிறேன். எனக்கும் அவ்வாறே தோன்றியது.இவை எல்லாவற்றையும் தவிர்த்து என்னால் இந்த நாவலை ரசிக்க முடிந்தது.
கதையின் கரு (ஒன்லைன்) வாசி, தங்கப்பன்(அப்பா, மகன்) உறவுச் சிக்கல் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கதை முழுவதும் வாசிக்கையில் தோன்றிய எண்ணங்கள், படித்து முடித்த பின்பும் எஞ்சி நிற்பவை: மனிதர்கள் காட்டு வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் பழங்குடியினர் மற்றும் காட்டு உயிரினகங்கள் துரத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.
இன்னும் சற்று யோசித்தால் : கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல் வேட்டயாடி, தன் வேட்டை மிருகங்களுக்கே பலியாவான். ஆனால் நாவல் முழுவதும் திரும்பத் திரும்ப காட்டிற்கும், காட்டு உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு,அவையின் அழிவு அழிவைத் தரும் என்று சொல்லப்படுவதால் முதலில் கூறிய எண்ணமே எஞ்சி நிற்கிறது.
சில மனதிற்கு ஒட்டாத வரிகள்:
பேருந்து நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிச் சென்றது...
செத்த குரங்குகள் நிம்மத்யாய் கிடந்தன...
புலி குன்று போல் கிடந்தது( புலியின் பிரம்மாண்ட உருவை இவ்வரி கண் முன் நிறுத்தவில்லை,அதற்கு முன்புள்ள வரிகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது )
இந் நாவல் காட்டும் மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கை முறை ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்கு தடையற்ற, தொய்வற்ற ஓட்டம் இந்நாவலின் பலம். மனிதன் ஒரு கரையான் என்பதும், ஆபத்து காலங்களில் தன் நலனுக்காக எதையும் இழக்கவோ/அழிக்கவோ துணிவான் என்பதை ஆழமாக பதிவு செய்கிறது. (ஜெ.மோ வின்தளத்தில் ஒரு வாசகர் இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்: தன் மகனுடன் வெளியில் சென்ற அவர் ஆபத்தொன்றில் தன் மகனை விட்டு விட்டு தான் தப்பிக்க நினைத்ததாய் போகும் அக்கடிதம். ஒரு ஆணின் குணம் என்று அக்கடிதம் அலசப்பட்டிருக்கும். இங்கு அக்கடிதத்தை நினைவு கூறுகிறேன்)
மலைச்சொல் பதிப்பகம்
விலை: ரூபாய் 200
No comments:
Post a Comment