Sunday, October 5, 2014

பாட்டி

"பாட்டி.. பாட்டி நான் சொல்லிண்டே இருக்கேன். கேட்காம எங்க கிளம்பிட்ட." பாட்டி காய் கறி வாங்க போவதாய் சொல்லிக்கொண்டிருந்தாள். பையுடன் வாசலை நோக்கி தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கினாள்."குடு பாட்டி நான் வேணாபோய்ட்டு வரேன்." பையை வாங்கப் போன என் கையைத் தட்டி விட்டாள். பின் என் கையையே பிடித்துக்கொண்டு செருப்பைப் போட்டுக்கொண்டாள். "தாத்தா, பாரு தாத்தா நான் சொல்ல சொல்ல கேட்க்காம கடைக்கு போறா பாட்டி.” ஹாலில் உட்கார்ந்து தினமலர் படித்துக்கொண்டிருந்த தாத்தாவும் எதுவும் பதில் சொல்லவில்லை. பாட்டி அதற்குள் வெளி கேட்டைத் திறந்து சென்றுகொண்டிருந்தாள். நான் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வந்த அம்மா ஒரு நிமிடம் வெளியே போகும் பாட்டியையும், என்னையும், தாத்தாவையும் பார்த்து விட்டு மீண்டும் அடுப்படிக்குள்ளேயே சென்று விட்டாள். எல்லோரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நான் தான் அதிகமாக கவலைப் படுகிறேனோ என்று தோன்றியது. பாட்டிக்கு எழுபது வயது முடியப் போகிறது. நோய் நொடி எதுவுமில்லை என்றாலும் இடுப்பு எலும்பு தேய்ந்து போனதால் நடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தாள். இத்தனைக் காலம் வீட்டை விட்டு வெளியே அதிகம் சென்றதில்லை. எல்லாமே தாத்தாதான். ஆனால் சமீபகாலமாய் அவளிடம் மாற்றங்கள். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தாத்தா முன் நின்று அதிகம் அவள் பேசியதே இல்லை. கேட்டதுக்கு மட்டுமே பதில் சொல்வாள். அதிலும் சிரித்துப் பேசி ஒரு நாள் கூட பார்த்ததில்லை. இப்பொழுதெல்லாம் அவளே வலிய போய் பேசுகிறாள். டீவியில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கிறாள். யார் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் சத்தம் போட்டுச் சிரிக்கிறாள். அவள் மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. எனக்கு அவள் தனியே வெளியே செல்லத் தொடங்கிய பின்புதான் கவலை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் பாதை அரைக்கிலோ மீட்டர் இருக்கும். பழக்கடைக்கு வந்தவள் பாதி வழியில் தலைச் சுற்றல் ஏற்பட்டு ஒரு வீட்டு வாசலில் அப்படியே உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துவிட்டு "ஒன்னுமில்லடா. லேசா தலய சுத்திடுத்து. வா போலாம்" என்று சமாளித்துவிட்டாள். எனக்கு அன்றிலிருந்து அவளைத் தனியே வெளியே அனுப்ப பயம்.

நீண்ட நேரமாகியும் பாட்டியைக் காணாததால் எனக்கு பதட்டம் அதிகரித்தது. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். "வருவாடா. இங்க இருக்க கடைக்குதான போயிருக்கா" அம்மா.

" அதான்மா பயமாருக்கு. இங்க இருக்க கடைக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா?"

" நீ வேணா போய் பாத்துட்டுதான் வாயேன். இங்கேயே உக்காந்துண்டு ஏன் இப்படி புலம்பிண்ட்ருக்க"

அதுவும் சரிதான். சட்டையை போட்டுக்கொண்டு வாசலிற்கு போவதற்குள் பாட்டி வெளி கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள்.வலது கை முழுவதும் ஒரே மண். முட்டிக்காலிலும் மண் ஒட்டியிருந்தது.

"என்ன பாட்டி விழுந்துட்டியா"

"ஒன்னுமில்லடா கண்ணா. கல்லு தட்டி விட்றுத்து. பெருசா அடிலாம் இல்லே. மழ பெஞ்ச ஈர மண்றதனால மேலெல்லாம் மண்ணாயிடுத்து. மத்தபடி எதுவுமில்லே"

"இதுக்குத்தான் சொன்னேன். தனியா வெளிய போகதா போகாதன்னு. ஏன் பாட்டி இப்படி பன்ற" கோபம் தலைக்கு ஏற கத்தத் தொடங்கினேன்.அதற்குள்ளாக அம்ம வந்து பாட்டியிடம் காய்கறிப் பையை வாங்கி வைத்து, மண்ணையெலலாம் துடைத்துவிட்டு வேறு புடவை மாற்றி ஹாலில் இருக்கும்  சேரில் உட்கார வைத்தாள்."ஒன்னுமில்லடா. நீ பயப்படாத" என்று பாட்டி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மா பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை.  பாட்டியை ஹாலில் விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள். தாத்தாவோ அந்த தினமலர் பேப்பரிலிருந்து தலையை வெளியே எடுக்கவேயில்லை.

"நான் இங்க ஒருத்தன் கத்திண்டிருக்கேன். உங்க யார் காதுலயும் விழலையா. பாட்டி கீழ விழுந்து எழுந்து வந்துருக்கா. யாருமே கண்டுக்காம உங்க வேலய பாத்துண்ட்ருக்கேள்"

"டேய். சும்மா கத்திண்டே கிடக்காத. உன் பிரண்ட பாக்கனும்ன்னு சொன்னல்ல. போய் பாரு போ" உள்ளிருந்து அம்மாவின் குரல். எனக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஏன் யாருமே கொஞ்சம் கூட அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தாத்தா ஏன் இப்படி இருக்கிறார். தன் வாழ்க்கை முழுவதும் அவரே கதியெனக் கிடந்த ஜீவனைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது. எனக்கு தாத்தாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சுய நலத்தின் மொத்த உருவமாகத் தெரிந்தார்.

"பாட்டி, கைகால் எதுவும் வலிக்கிறதா? நான் மாத்திர வாங்கிண்டு வரவா"

"அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான் நன்னா இருக்கேன். நீ போய்ட்டு வா" என்று சொல்லி விட்டு  டீவியைப் பார்க்கத் தொடங்கினாள். எனக்குத்தான் மனம் கேட்கவே இல்லை. யோசித்துக்கொண்டே வெளியே கிளம்பி வந்தேன்.

வழி நெடுகும் மனதில் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. பாட்டி என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். பாட்டிக்கும் என் மீது அதிக பாசம் உண்டு. தாத்தாவும், பாட்டியும் கடந்த ஒரு வருடமாகத்தான் எங்களுடன் தங்கி இருக்கிறார்கள். அதற்கு முன் மாமவுடன் மதுரையில் இருந்தார்கள். சின்ன வயதில் மாமா வீட்டில் தங்கி ஒரு வருடம் படித்தேன். அப்பொழுதிருந்துதான் எனக்குப் பாட்டியைப் பிடிக்கத் தொடங்கியது. பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.

அன்றைக்குப் பிறகு பாட்டி இரண்டு முறை விழுந்து எழுந்துவிட்டாள். இரண்டாவது முறை நல்ல அடி. இன்னும் கொஞ்சம் பலமாக அடி பட்டிருந்தாலும் போய் சேர்ந்திருப்பாள். வீட்டிலிருப்பவர்கள் அப்பொழுதுதான் கவலைப் படுவதாகத் தெரிந்தது. தாத்தா அவள் வெளியே போகும்போதெல்லாம் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளத் தொடங்கினார். திரும்பி வரும் வரை அவர் மிகவும் கவலையோடு இருப்பார். பாட்டி இரண்டாவது முறை அடி பட்டு வந்ததும் எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. நான் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டி வெளியே போவதைத் தடுத்தார்கள். அதையும் மீறி சில நாட்கள் அவள் வெளியே செல்வதுண்டு.

"தாத்தா.." பாட்டியின் வருகைக்காக வாசற் திண்ணையில் போய் உட்கார்ந்திருந்தவரின் முன்னால் போய் நின்றேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர், "சொல்லுடா" என்றார்.

"தாத்தா. நானும் பாத்துண்டேதான் இருக்கேன். இங்க நடக்கற எதுவும் சரியா படல."

"பாட்டியப் பத்திப் பேசறயா?"

"ஆமா.வேற எதப் பத்திப் பேசப் போறேன்" தாத்தா சிரித்தார். எனக்கு அது மேலும் எரிச்சலூட்டியது. "இதத்தான் என்னால தாங்கிக்க முடியல. உனக்கு பாட்டி மேல கொஞ்சம் கூட பாசம் கிடையாதா. அவ ஒவ்வொருதடவயும் வெளில போய்ட்டு வரதுக்குள்ள நான் என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயந்துண்ட்ருக்கேன். நீ என்னடான்னா சிரிக்கற"

தாத்தா என்னை ஒரு நொடி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். சட்டையை மாட்டிகொண்டு வந்து, "வா போலாம்" என்றார்.

"எங்க?"

"பாட்டி கோவிலுக்குப் போயிருக்கா. வா போய் பாத்துக் கூட்டிண்டு வரலாம்" சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். எனக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் முழுவதையும் சுத்தி வந்தும் பாட்டியைக் காணவில்லை. கோவிலின் பின்னால் ஒரு பூங்கா இருந்தது. ஒரு வேளை அங்கு போயிருப்பாளோ என்ற சந்தேகத்தில் போய்ப் பார்த்தோம். பாட்டி அங்குதான் இருந்தாள். மர நிழலிலிருந்த பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.

"வா தாத்தா போய் கூட்டிண்டு வரலாம். அங்க என்ன செய்றா தனியா உக்காந்துண்டு?"

"இருடா. அவசரப்படாத. கொஞ்ச நேரம் அமைதியா அவ என்ன பன்றான்னு பாரு"

ஒன்றும் புரியாதவனாய் அமைதியானேன்.

பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேறெதுவுமே செய்யவில்லை. அரை மணி நேரம்  அங்கு போகிற வருபவர்களை பார்த்து கொண்டு இருந்ததோடு சரி. பின் எழுந்து ஆத்திற்கு கிளம்பி நடக்கத் தொடங்கினாள்.

தாத்தாவைப் பார்த்தேன்.

"கண்ணா.. உங்க பாட்டி ஏன் இப்படி வெளில வெளில் போறதுல இவ்வளவு அடமா இருக்கான்னு தான கேட்டுண்டே இருக்க. எனக்கு தெரிலடா. அவ இப்படிலாம் இருந்ததில்லதான். போன வருசம் அவளுக்கு ஒரு தடவ ஸ்ட்ரோக் வந்தது. மைல்டான ஸ்ட்ரோக்தான்.."

"என்ன தாத்தா சொல்ற"

"ஆமாட உனக்கு இதெல்லாம் தெரிய வேணாம்ன்னு நினச்சோம். அப்ப உனக்கு எக்ஸாம் டைம். ஒன்னு பயப்பட வேணாம்ன்னு டாக்டர் சொன்னார். ஆனா இன்னொரு தடவ வந்தா ரிஸ்க்ன்னு சொல்லிட்டார். முடிஞ்ச வர அவளுக்கு அதிகம் டென்சன் குடுக்காம பாத்துக்கோங்கோன்னு சொன்னார். அதுல இருந்து உங்க மாமவும், மாமியும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. பேசாம டீவி மட்டும் பாத்துண்டு இருங்கோன்னு சொல்லிட்டா. கொஞ்ச நாள் ஆக ஆக உன் பாட்டிகிட்ட சேஞ்சஸ். என்னய வெளில கூட்டிண்டு போங்கோ, நான் எவ்வளவு நாழி சும்மாவே உக்காந்துண்டு இருக்கறதுன்னு புலம்ப ஆரம்பிச்சா. கோவிலுக்கு கூட்டிண்டு போனோம். அப்பறம் ஒரு நாள் தனியாவே கிளம்புனா. இருடி நானும் வரேன்னு சொன்னதுக்கு வேண்டாம் வராதீங்கோ நான் மட்டும் போய்க்கிறேன்னு சொன்னா. என்னடி இது புதுசா தனியா போறேன்னு சொல்லிண்ட்ருக்கன்னு கேட்டதுக்கு பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டா. அன்னைல இருந்து இப்படித்தான். எங்க போனாலும் தனியாவே போகனும்னு விரும்புறா. இங்க வந்தாலாச்சும் ஏதாவது மாற்றம் வரதான்னு பாக்கலாம்ன்னுதான் இங்க கூட்டிண்டு வந்தேன். நன்னாதான் இருந்தா. கொஞ்ச நாள் முன்னாடி மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போய்ட்டு வந்தோமோல்யோ அதுக்கப்பறம் உங்கம்மாவும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. மறுபடியும் இப்படி ஆயிட்டா. இந்த தடவ ரொம்ப சீரியஸா ரியாக்ட் பன்ன ஆரம்பிச்சுட்டா. டாக்டர்ஸ் அவள அவ போக்குல விடறதுதான் நல்லதுன்னு சொல்லிட்டா.

"தாத்தா எதவாது ஆயிடுத்துன்னா என்ன பன்றது. கத்துனாலும் பரவால்லன்னு உள்ளயே இருக்க வைக்க வேண்டியதுதான. லாஸ்ட் டைம் நான் கோபமா பேசுனதுக்கப்பறம் இப்போ குறச்சுருக்காளே"

"கண்ணா. போகாம இருக்காதான். ஆனா போகனும்ன்னு தோண்றது போலயே அவளுக்கு. இல்லன்னா ஏன் இப்படி வந்து அரை மணி நேரம் உக்கார போறா. இது இன்னைக்கு நேத்து வந்த எண்ணமா இருக்காதுடா கண்ணா. அவ வாழ்க்கை பூரா அவ அடி மனசுல இருந்துருக்கும். அடுப்படியத் தவிர வாசலுக்குத்தான் அதிகப் பட்சம் போயிருக்கா. அத தாண்டுனதில்ல. எல்லாம் இப்ப வெளில வரது."

நான் மனம் சாந்தி அடையாதவனாக இருந்தேன்.

"எனக்கு உன் பயம் புரியறது. வாழ்க்கைல எல்லாத்துக்கும் மரணம் ஒரு நாள் நிச்சயமா வரத்தாண்டா போறது. வீட்டுக்குள்ளயே இருந்துட்டா சாகாமயே இருக்கப் போறமா என்ன. இத்தன நாள் அவள வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சுட்டோம்ன்னு தோன்றதுடா. வெளி உலகத்த அவ பாக்கவே இல்ல. நாலு மனுசா முகம் பாக்கட்டும். கொஞ்சம் காத்தாட நடந்தாவே மனசு லேசாகும். அதான் அவள போக விடறது. ஆப்டர் ஆல் திஸ் லைப் ஹேஸ் நோ மீனிங் அட் தி எண்ட்." சொல்லிவிட்டு தாத்தா நோக்கி தொடங்கினார்.

எனக்கு தாத்தாவின் வேதாந்தங்கள் ஒன்றும் புரியவில்லை. எழுபது வயது பாட்டியைத் தனியாக விடுவதில் என்ன தத்துவம் இருக்கிறது. வயதானவர்களையும், குழந்தைகளையும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.இருந்தாலும் “பாட்டி வெளி உலகம் பார்க்க விரும்புகிறா. ஏற்கனவே ஒரு முறை நான் சொன்னதைக் கேட்டுள்ளா. இனி நான் வந்து உன்ன வெளில கூட்டிண்டு போறேன். நீயா தனியா போகதன்னு சொன்னா கேட்பா” என்று நினைத்துக்கொண்டே தாத்தாவைப் பின் தொடர்ந்தேன்.

No comments:

Post a Comment