Sunday, October 5, 2014

நீதிக் கவிதை!

நீள் கவிதையொன்றை எழுதி
நீல நிற ஆற்றைக்
கடந்து கொண்டிருந்தேன்
“ஆறு” – இங்கு குறியீடாக வருகிறது
யாருமே பாத்திராத ஒன்றுக்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று சண்டையிட்டுகொண்டிருந்த இருவர்
என் கவிதையைப் பிடுங்கி
குறியீட்டில் எறிந்தனர்
தவறி விழும் பொருட்களை
எடுத்துக் கொடுக்கும் தேவதையிடம்
வேண்டினேன் வேண்டினேன் வேண்டிக்கொண்டேயிருந்தேன்
ஆதர்சனம் என்று
யாரையோ சொல்லிக்கொண்டு
தர்சனம் கொடுத்தாள் தேவதை
நான் முத்தமிட்டால்
இந்த ஆறே கரைந்து போகும்
மரியாதயாய் எடுத்துத் தா என்றேன்
புரியவில்லை என்றாள்
அதைத்தான் எடுத்துத் தா என்றேன்
புரிந்து கொண்டாள்
மூன்றெழுத்தில் முடியும் கவிதையொன்றை
எடுத்து வந்தாள்
அய்யோ
இது இல்லையென்றேன்
அதையே
முன்று வரியாக்கித் தந்தாள்
இருக்கலாம் என்றேன்
‘பரமபிதா, சாத்தானே, முலை, வேசி,
கொலை, கொடூர பயங்கரம்’
நிறைந்த ஒன்றைத் தந்தாள்
பார்க்க அப்படித்தான் தோன்றுகிறதென்றேன்
ஒரே எழுத்தில் முடியும்
ஒன்பது வரிகளைக் கொண்ட ஒன்றையும்
மூன்று மூன்றுப் புள்ளிகளுக்கிடையில்
சில வார்த்தைகள் கொண்ட ஒன்றையும்
எடுத்து வந்தாள்
நிச்சயமாய் சொல்வதற்கில்லை என்றேன்
சோர்ந்து போனவளாய்
கொட்டாவி விட்டாள்
ஆஹா அருமை என்றேன்
‘போடா மயிறு’ என்றாள்
கவிதை, கவிதை
எனக் கத்தினேன்

நீதி:
யாரறிவார்
எது
என்ன என்பதை
எனவே
“உனக்கான கவிதையை
நீயே எழுதிக்கொள்”

No comments:

Post a Comment