Monday, December 15, 2014

க‌ட‌ந்த‌ கால‌ம்

எழுதத் தொடங்கி
பின்
பாதியில் அழித்த‌
கவிதைகளிலிருந்து
ஒரு வார்த்தைத் தப்பித்து
ஒரு பெருமரமாய்
இன்று வளர்ந்து நிற்கிறது.
ஆசைகள்,
கோபங்கள்,
அனுதாபங்கள்,
தனிமை,
அச்சம்,
ஆற்றாமை,
இன்னும் பலவும்
கிளைத்திருக்கின்ற‌ன‌.
எல்லா கிளைக‌ளிலும்
ப‌ச்சை பசேலென இலைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பழங்கள்
அதில் தொங்கும் பறவைகள்…
இன்று
பார்க்க‌
அழகாய்த்தான் உள்ளது
என் க‌ட‌ந்த‌ கால‌ம்

முத்தம் தரும் காகம்

தினமும் காலை
பத்து மணிக்கு
எங்கள் வீட்டுக்கு
ஒரு காகம் வரும்
ஒவ்வொரு நாளும்
எங்கிருந்தோ
ஒரு முத்தத்தைப்
பறித்து வரும்
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தம்
தரும்
காக்கைத் தரும்
முத்தமென்பதால்
கழுவி
எடுத்து வைத்துக்கொள்வேன்
சோறு வைக்க மறந்த
ஒரு நாளில்
இரண்டு முத்தங்களைப்
போட்டுப் போயிருந்தது
மறுநாள்
அக்காக்கையைப் பின் தொடர்ந்து
சென்றேன்
மாய வனமொன்றில்
நுழைந்த
காக்கை
ஒரு பெண்ணாய் மாறியது
இதுவரை
இவ்வுலகம் பார்த்திராத
பேரழகி
எல்லோரிடமும்
காட்டி
பெருமைப்படத் துடித்தது மனம்
விரைந்து சென்று
எல்லோரையும்
அழைத்து வந்து
காட்டினேன்
யாருக்கும்
தெரியவில்லை
வீட்டிற்கு அழைத்துச் சென்று
முத்தங்களைக் காட்டினேன்
அவர்களுக்கு
எதுவும்
தெரியவில்லை
மீண்டும்
அவளிடம் ஓடிச்சென்று
“நான் உனக்கு சோறு வைப்பவன்
நீ எனக்குத் தினமும் முத்தம் தருவாய்” என்றேன்
அவள்
மாயமாய் மறைந்தாள்
அடுத்த நாள்
பத்து மணியாயிற்று
காக்கை வந்தது
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தமும் தந்தது
இதுவா
அவள்?
ஏனோ
அன்றைய முத்தத்தையும்
கழுவியே
எடுத்துக்கொண்டேன்…

முத்தங்கள் மூன்று

அவள்
கடைசியாகத் தந்த
முத்தத்தைத்
தொலைத்துவிட்டுத்
தேடிக்கொண்டிருந்தேன்
நேற்று பெய்த மழை
தேடித் தந்தது
இன்று
தொலைப்பதற்கு
ஒரு முத்தமும்
தேடித்தர
ஒரு மழையும்
வேண்டும்..
#
எவ்வளவு ஆழத்தில்
விழுந்தாலும்
என்னை
மீட்டெடுக்கும்
இதழ்களைத் தொலைத்துவிட்டேன்
இப்பொழுது
நான் எங்கிருக்கிறேன்…!
#
நாம் முத்தமிட்டுக் கொள்ளும்பொழுதெல்லாம்
தனிமையைய உணர்வதில்லை யென
சொல்லிச் செல்கிறது
மழை!

எப்படி எழுதினாலும்…!

நீட்டியோ
சுருக்கியோ
எப்படி எழுதினாலும்
ஒரு வேசியைப் பற்றியக்
கவிதையில்
பல ஆண்களின்
வியர்வை நெடியே
அடிக்கிறது!
மரபோ
புதுக்கவிதையோ
எப்படி
எழுதினாலும்
போலிச் சாமியார்களைப் பற்றியக்
கவிதை யொன்றில்
ஏமாளிகளே பளிச்சிடுகிறார்கள்!
போர்களைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதை
அர்த்தமற்றதாகவே வருகிறது
எப்படி எழுதினாலும்
ஒரு குடும்பத்தைப் பற்றியக்
கவிதையில்
குடும்பத் தலைவி
தலைப்பாக வருவதேயில்லை!
சாதிகளைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதையில்
சில வார்த்தைகளுக்கான
இட ஒதுக்கீடு
அவசியமாகிறது!
எங்கிருந்து எழுதினாலும்
மதங்களைப் பற்றிய
ஒரு கவிதை
தொலைந்து போய்விடுகிறது!

ஒருவருக்கு ஒரு வரி
என்றாலும்
வன்புணரப்பட்டவர்களைப் பற்றிய
ஒரு கவிதை
முடிவதேயில்லை!

தலைப்புகள் அர்த்தமற்றவை

எங்கேயும் இறங்குவதில்லை
ரயில்
அது
எங்கிருந்தால் என்ன?!

வீடு

ஓடுகள் போய்
மாடிகள் ஆயிற்று
ஓர் வீடாய் இருந்ததைப்
பல அறைகளாய்ப் பிரித்தாயிற்று
ஜன்னல்கள் எல்லாவற்றிலும்
கண்ணாடிகள் பொருத்தியாயிற்று
துளசி மாடத்தைப்
படம் பிடித்து மாட்டியாயிற்று
விதவிதமான வண்ணங்கள்
அடித்தாயிற்று
கிரக பிரவேசத்திற்கு
எல்லோரும் வந்துவிட்டார்கள்
வாசலில்
முரண்டு பிடிக்கும்
இந்தப்
பசுவிற்கு மட்டும்
இடித்துக் கட்டப்பட்ட வீட்டை
ஆசிர்வதிப்பதில்
அவ்வளவு ஆர்வமில்லை போலும்..

Phillip Hughes

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகில் பெரிய சோகத்தைத் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய நிகழ்வு. இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காலம் சுற்றும் வேகம் பன் மடங்காகிவிட்ட நிலையில் ஒவ்வொரு நிகழ்விற்கும், அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் ஆயுட்காலம் வெகு குறைவு. முன்னர் ஒரு பதிவில் நாளையோ நாளை மறு நாளோ மறந்து விடப் போகிற ஒரு மரணத்திற்கு என் கண்ணீர் அஞ்சலி என்று எழுதியிருந்தேன். இப்பொழுதும் அவ்வரிகளே நினைவிற்கு வருகின்றன.
பிலிப்பின் மரணம் மிகவும் துரதிருஷ்டவசாமனது. மிக இள வயதில் அவருக்கும் ஏற்பட்டிருக்கும் இம்முடிவு வேறு யாருக்கும் நிகழக்கூடாத ஒன்று. உலகின் பல பகுதி மக்களும் தங்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவருக்காக இரண்டு நிமிடங்கள் ஒன்றாய் செலவு செய்கிறார்கள். இதைப் போன்ற துக்ககரமான நிகழ்வுகளிலெல்லாம் நான் கவனிப்பது, வியப்பது இது ஒன்றே. இந்த ஒற்றுமை, மனித்தன்மை ஏன் மற்ற நேரங்களில் அதிகம் வெளிப்படுவதில்லை. ஏன் ஒரு பெருந்துயரில் ஒன்று சேரும் நாம் மற்ற நேரங்களில் சேருவதில்லை. ” நல்ல விசயத்துல கூட இருக்கறமோ இல்லையோ கஷ்டக் காலத்துல இருக்கனும்” என்று ஏன் சொல்லி வளர்க்கிறார்கள். இப்படி ஒன்று சேர ஒரு இழப்பு ஏற்படத்தான் வேண்டுமா?
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
அழ வைக்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
ஒன்றாகச் சேர்க்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரின்
நேரத்தை
தன் பக்கம் இழுக்கிறது
ஒரு மரணம்
எத்தனை நாடுகளின்
தலைப்புச் செய்தியாகிறது
ஒரு மரணந்தான்
எத்தனை அனுதாபங்களை
எத்தனை இரங்கல் செய்திகளைச்
சம்பாதிக்கிறது
இதுபோல்
ஒவ்வொரு மரணமும் நிகழ்ந்தால்?
ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் நிகழ்ந்தால்?
யாரும் பிரியாத‌
ஒரு மரணம் வேண்டும்
எதுவும் நிகழாத‌
மரணம் தினம் வேண்டும்
இம் மானிடர்
ஒன்றாய்ச் சேர‌
இம் மானிடர்
மானிடராய் வாழ‌
யாரும் சாகாத‌
நாள்
தினமும் வர வேண்டும்!!

ஒரு ரகசியம்..

உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
கடலில் கொட்டினேன்
இப்பொழுது
இந்தக் கடலை
என்ன செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
மழையில் எறிந்தேன்
இப்பொழுது
இந்த மழையை
எப்படி போகச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம் அள்ளி
நெருப்பில் கொட்டினேன்
இனி
எப்படி
அதை
சுடச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
பறக்க விட்டேன்
விரட்டிச் செல்லும்
காற்றை
இனி
எப்படி
வீசச் செய்வது
உன் மீதிருக்கும்
காதலையெல்லாம்
சேர்த்து
ஒரு ரகசியம் செய்தேன்
இப்பொழுது
அதை ரகசியமாய்
உன்னிடம்
எப்படி சேர்ப்பது

நம்பிக்கையில்…

நாம் பிரியும் போதல்லாம்
குடுத்துக்கொள்ளும்
ஒற்றை முத்தத்தை
உன்னைப் பிரிந்த இடத்தில்
வைத்து விட்டு வந்திருக்கிறேன்
நீ
அங்கு வந்து சேர்வாய்

என்ற நம்பிக்கையில்…

மேதகு குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு

இப்பொழுதெல்லாம் குடிகாரர்கள் என்று தனியாக யாரும் இல்லையென்பதால் ஒருமையில் எல்லாம் அழைத்தால் அடிதான் விழும். சமீபமாக, இரட்டை நிலைப்பாடு அல்லது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைப்பாடு, இடத்திற்கு தகுந்தாற்போல் கொள்ளும் நிலைப்பாடு உடைய மனிதர்களைப் பற்றி அடிக்கடி கேட்கிறேன் அல்லது பார்க்கிறேன்.
‘மாத்தி மாத்தி பேசுறான் பாருடா பச்சோந்தி’ என்று பொதுவாக இவர்களை வசைப்பாடுவோம். சற்று யோசித்தால் ஒரே மாதிரி மன நிலையுடந்தான் ஒருவரால் அவர் வாழ் நாளெல்லாம் இருந்துவிட முடியுமா? அப்படி யாரேனும் இதற்கு முன்னர் இருந்துள்ளார்களா? போதி மரத்திற்கு முன் சித்தார்த்தன், பின் புத்தன், இல்லையா? திருடன் வால்மிகி ஆகிறார். காமுகன் அருணகிரி நாதர் ஆகிறார். இவர்களெல்லாம் இருவேறு நிலைப்பாடுடையவர்களாக வாழ்ந்து முடித்தவர்கள்தானே. இது தவறென்று சொல்ல முடியுமா? இயலாது. இவர்கள் ஒரே நேரத்தில் இரு விதமாக இருந்தவர்கள் இல்லை. ஒரு நேரத்திற்குப் பின் ஒரு நிலைப்பாடு எடுத்தவர்கள். சரி. இன்னொரு எடுத்துக்காட்டுப் பார்க்கலாம். ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்தது. ஒரு ஊரில் இருந்த மக்கள் எல்லோரும்/ பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுகின்றனர். மாற வேண்டிய சமூகச் சூழல். இதில் குறிப்பிடத் தகுந்த விசயம் என்னவென்றால் மதம் மாறிய யாரும் அவர்கள் குடும்ப உறிப்பினர்களைக் கட்டாயப் படுத்தவில்லை. விரும்பாதவர்களை அவர்கள் மதத்திலியே இருக்க அனுமதிக்கிறார்கள். அடுத்த தலைமுறை வருகிறது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வரும்பொழுது ஒரே குடும்பத்தில் இருவேறு மதங்கள் இருப்பது பிரச்சனை ஆகிறது. அப்பொழுது ஒரு குடும்பத்தலைவர் தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் மதத்திற்கே திரும்புகிறார். இக்காரியத்தை மத அடிப்படைவாதிகள் தவிர யாரேனும் தவறென்று கூறுவார்களா?
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரி இருப்பது தவறு போல் தோன்றினாலும் அனேகமாக நாம் எல்லோருமே அவ்வாறுதான் இருக்கிறோம். நம்மில் எத்தனைப் பேர் நம் அலுவலக மேலதிகாரர்களை ஒரே மாதிரியான மரியாதையுடன் அழைக்கிறோம். எத்தனைப் பேர் நேரில் பார்க்கும் பொழுது வயதில் மூத்தவரை அண்ணா என்று அழைத்துவிட்டு அவர் தலை மறைவில் ஒருமையில் ஆரம்பிக்கிறோம். ஆக எதுதான் சரி? எதுதான் தவறு?
வாழ்க்கை போராட்டமாகி விட்ட காலங்களில் சரிக்கும் தவறிர்க்கும் அதிக வித்யாசமில்லை.இருப்பினும் ஏட்டில் ஒரு விதி எழுதுவதற்காக: இதுதான் சரி, இது தவறு, என்பதற்காகப் பார்த்தால் ஒருவர் தன் வாழ்க்கை விழுமியங்களை மறந்து அல்லது அப்படி ஒன்றே இல்லாமல் வாழ்ந்தால் அது தவறெனக் கொள்ளலாம். குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கையின்பால் கூறும் வாக்கியம். அவர்கள் நிச்சயம் காலையில் மாறிவிடுவார்கள் என்பது இங்கு நம்பிக்கை. அலுவலக மேலதிகார்களை மரியாதையின்றி அழைத்தாலும் அங்கு நம்பிக்கைக்கு எந்த குறையுமில்லை. ஆக ஒருவர் தன் மேலுள்ள நம்பிக்கையை இழக்கும் வண்ணம் மாறுவாராயின்/ மாறிக்கொண்டே இருப்பாராயின் அது தவறாகிறது. மற்றபடி எனக்கு “சொல்லும் ஒன்றுதான், செயலும் ஒன்றுதான்” என்று கூறுவதல்லாம் என்னளவில் இன்னொரு பஞ்ச் டயலாக் மட்டுமே.

இனி ஒரு விதி செய்வோம்

நம் நாட்டில் எழுத்தப்பட்ட சட்டங்களை விட, எழுதப்படாத சட்டங்களே நாட்டை ஆள்கின்றன என்று நீதிபதி ஒருவர் சொன்னதாகப் படித்தது நியாபகம் வருகிறது. எழுதப்படாத சட்டங்களுக்கு கலாச்சாரம், பண்பாடு என்று பெயர் இருக்கலாம். கலாச்சாரம் பற்றி பேசுவது எறும்புப் புற்றுக்குள் கையை விடுவது போன்றது. நிமிடத்திற்குள் கை முழுவதும் ஆயிரம் எறும்புகள் அப்பியிருக்கும்.
கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்களுக்கு அர்த்தம், விளக்கம், ” நாம பசி அடங்கி சாப்படற இட்லி அடுத்தவங்களோடது” என்ற ரீதியில் தருவது ஆபத்தானது. அத்தகைய ஒற்றை வரி அர்த்தங்களைக் கற்றதனால்தான் இன்று பலக் கலாச்சாரப் பிரச்சனைகள் வருகின்றன. மனித இனம் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து இச் சொற்களுக்கான அர்த்தம் எடுக்கப்பட வேண்டும்.
என் புரிதல்: ஒன்றாக வாழத் தொடங்கிய ஒரு குழுவின் வாழ்க்கை முறை, அவை சார்ந்தவைகள், நம்பிக்கைகள், இவற்றிலிருந்த பொதுவானவையின் தொகுப்பே கலாச்சாரமாகிறது. பின் அடுத்த தலைமுறைகளை அவை வழி நடத்துகின்றன. இவ்வாறு கூறும்பொழுதே ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பண்பாடு இருக்கும் என்பது புரியும். அமெரிக்காவில் ஒரு செயல் சரியென பார்க்கப்படுவதும், இந்தியாவில் தவறென அதே செயல் பார்க்கப்படுவதும் அதனால்தான்.
பண்பாட்டின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் மறுக்கப்படும் தனிமனித உரிமைகளைப் பற்றி பேசவே இதை எழுதத் தொடங்கினேன். தனி மனித உரிமை என்றால் என்ன. அடுத்தவர் மூக்கைத் தொடத வரை என் சுதந்திரம் உள்ளது என்ற சுதந்திரத்திற்கான அர்த்தத்தைப் பொறுத்திப் பார்க்கலாம் .ஆனால் நடைமுறையில் இந்த விளக்கம் அர்த்தமற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
எல்லாவற்றையும் சரி அல்லது தவறு என்று பார்ப்பதின் விளைவாக எழுகிறது பிரச்சனை. அதிலும் இது சரி, இது தவறு என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை வைத்துக்கொண்டு இவற்றைச் செய்வதுதான் மிகப்பெரியப் பிரச்சனை. இவை வீட்டிலேயே தொடங்கி விடுகிறது. சரிக்கும், தவறிர்க்குமான வித்யாசங்களை உணரச் செய்வதற்குப் பதில் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிறோம். அத்தகையக் கற்பிதங்கள் எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. பகல் என்றால் வெளிச்சம், இரவென்றால் வெளிச்சமின்னை என்று சொல்லும்பொழுதே இங்கு பகலென்றால் இன்னொரு இடத்தில் இரவு, இங்கு இரவென்றால் இன்னொரு இடத்தில் அதுவே பகல் என்று சொன்னோமேயானால் எல்லோரும் ஒன்றாக மேற்கொள்ளும் பயணமல்ல வாழ்க்கை என்று புரியவரும்.
வாழ்க்கை. எங்கிருந்து வருகிறோம் எங்கு போகிறோம் என்பதே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் விளக்கப்படும்பொழுது நம் நம்பிக்கைகளின் பெயரால் மற்றவரின் வாழ்க்கையில் குறுக்கிடுவது அறிவார்ந்த செயலாகாது.
தனிமனித உரிமை என்று சொல்லிக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாமா என்று கேட்பது தனி விவாதம். தனிமனித உரிமை என்ற ஒன்று இருக்கிறது என்பதே இங்கு பலருக்குத் தெரியாத நிலையில், முதலில் அடிப்படைகளைச் சரி செய்து கொள்வோம்.
நம் வாழ்க்கையை மட்டும் நாம் வாழவேண்டுமென்று இனி ஒரு விதி செய்வொம்.

Monday, November 10, 2014

…ல்லை

எனக்குப் பிடித்த விசயங்களைக்
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது
***

எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை

க‌ட‌ந்த‌ கால‌ம்

எழுதத் தொடங்கி
பின்
பாதியில் அழித்த‌
கவிதைகளிலிருந்து
ஒரு வார்த்தைத் தப்பித்து
ஒரு பெருமரமாய்
இன்று வளர்ந்து நிற்கிறது.
ஆசைகள்,
கோபங்கள்,
அனுதாபங்கள்,
தனிமை,
அச்சம்,
ஆற்றாமை,
இன்னும் பலவும்
கிளைத்திருக்கின்ற‌ன‌.
எல்லா கிளைக‌ளிலும்
ப‌ச்சை பசேலென இலைகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பழங்கள்
அதில் தொங்கும் பறவைகள்…
இன்று
பார்க்க‌
அழகாய்த்தான் உள்ளது
என் க‌ட‌ந்த‌ கால‌ம்

முத்தம் தரும் காகம்

தினமும் காலை
பத்து மணிக்கு
எங்கள் வீட்டுக்கு
ஒரு காகம் வரும்

ஒவ்வொரு நாளும்
எங்கிருந்தோ
ஒரு முத்தத்தைப்
பறித்து வரும்

ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தம்
தரும்

காக்கைத் தரும்
முத்தமென்பதால்
கழுவி
எடுத்து வைத்துக்கொள்வேன்

சோறு வைக்க மறந்த
ஒரு நாளில்
இரண்டு முத்தங்களைப்
போட்டுப் போயிருந்தது

மறுநாள்
அக்காக்கையைப் பின் தொடர்ந்து
சென்றேன்

மாய வனமொன்றில்
நுழைந்த
காக்கை
ஒரு பெண்ணாய் மாறியது

இதுவரை
இவ்வுலகம் பார்த்திராத
பேரழகி

எல்லோரிடமும்
காட்டி
பெருமைப்படத் துடித்தது மனம்

விரைந்து சென்று
எல்லோரையும்
அழைத்து வந்து
காட்டினேன்

யாருக்கும்
தெரியவில்லை

வீட்டிற்கு அழைத்துச் சென்று
முத்தங்களைக் காட்டினேன்
அவர்களுக்கு
எதுவும்
தெரியவில்லை

மீண்டும்
அவளிடம் ஓடிச்சென்று
"நான் உனக்கு சோறு வைப்பவன்
நீ எனக்குத் தினமும் முத்தம் தருவாய்" என்றேன்

அவள்
மாயமாய் மறைந்தாள்

அடுத்த நாள்
பத்து மணியாயிற்று

காக்கை வந்தது
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு முத்தமும் தந்தது

இதுவா
அவள்?

ஏனோ
அன்றைய முத்தத்தையும்
கழுவியே
எடுத்துக்கொண்டேன்

Tuesday, October 28, 2014

முத்தம்

நான் ஒளித்து ஒளித்து
வைத்திருக்கும் பொருள்களுள்
மிகவும் விலை உயர்ந்தது
‘முத்தமிடவேண்டும்’என்ற ஆசை

முத‌ன் முத‌லாய்
பார்த்த‌ சினிமாவில்
வ‌ந்த‌ முத்த‌மொன்று
ச்சீ.. ச்சீ என்று க‌ண்ணை மூடிக்கொண்ட‌வுட‌ன்
என‌க்குத் தெரியாம‌ல்
என் ச‌ட்டைப் பையில்
வ‌ந்து ஒளிந்துகொண்ட‌தாக‌ நியாப‌க‌ம்

பின்பு அதை
முழுக்கைச் சட்டையை
மடித்து விட்டுக்கொள்ளத் தொடங்கிய
ஒரு நாளில்
தற்செயலாய்க் கண்டுபிடித்தேன்

நன்றாகவே வளர்ந்திருந்தது,
நெற்றியிலிருந்து கன்னங்களுக்கும்
கன்னங்களிலிருந்து இதழ்களுக்கும்

அதை,
தனி அறைகள்
இல்லாத வீட்டில்
கவிதைகளில்
ஒளித்து வைக்கத் தொடங்கினேன்

முதற் காதல் நாட்களில்
என் தோட்டமெங்கும் பூத்த‌
ஒரே பூவது

இதழ்களால் எழுதப்போகும்
என் முதல்
காதல் கவிதைக்கான‌
தலைப்பை
தந்துகொண்டிருக்கும்
இம் மழைக்கு
நன்றி

“கடல்புரத்தில்”

குட்ரீட்ஸ் ரேட்டிங்: 5 நட்சத்திரங்கள் ( நண்பர்கள் எல்லா இடத்திலும் இருப்பதால் ஒரே மாதிரியே எல்லா இடத்திலும் சொல்ல வேண்டியிருக்கிறது{குட்ரீட்ஸ் தளத்தில் நண்பர்களாக இல்லாதவர்களுக்கு தனியாக ஒரு பதிவு எழுதி வேறு ரேட்டிங் தருகிறேன்}) :)
ஏன் 5 நட்சத்திரங்கள் என்று கேட்டால் குடுக்க வேண்டும் என்று தோன்றியது குடுத்தேன். என் ரேட்டிங் என் உரிமை :)
ஏற்கனவே உன் ரிவ்யூல‌ content இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அதுக்காக சில வரிகள்:
ஆசிரியர் :வண்ணநிலவன்
பதிப்பகம் : நற்றினை
விலை : 90
பிடித்த விசயங்கள் : 112 பக்கங்கள் மட்டுமே இருப்பது :)
வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விடை ஒன்று எழுதவே இயலாது. நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கே, நம்ம வாழ்க்கைல நடந்தது மாதிரியே இதுலயும் வருதே என்று என்ன கூறினாலும் யாருடைய வாழ்க்கையும் இன்னொருவரது வாழ்க்கைப்போல் இருக்கவே முடியாது. ஒருவருக்கு யதார்த்தம் என்பது இன்னொருவருக்கு ஆச்சர்யமூட்டும்; ஒருவருக்கு அருவருப்பூட்டும் ; ஒருவருக்கு பயமூட்டும் ; ஒருவருக்கு யதார்த்தமாகவும் தெரியலாம். இவ்வாறு வெவ்வேறு எண்ணங்களைத்தரும் காட்சிகள் நிறைந்துள்ளதால் கடல்புரத்தில் என்னிடம் அதிகம் மணம் வீசுகிறது.
உதாரணத்திற்கு பிலோமி தன் தாய் பழகி வந்த வாத்தியாருடன் நாவலின் கடைசியில் பழகத்தொடங்குகிறாள். இருவரையுமே ஊர் தப்பாகப் பேசுகிறது. இதில் எது எதார்த்தம், எது அருவருப்பூட்டும், எது வியப்பூட்டும், எது பயமூட்டும் விசயமாகப் பார்க்கிறோம் என்பது படிப்பவர் மன நிலையைப் பொறுத்தது. எனக்கு எல்லாமே இருப்பதாகத் தோன்றுகிறது.ஊர் தப்பாகப் பேசுவது யதார்த்தம். பிலோமியின் வாழ்க்கைச் சூழலில் இருந்து வேறு ஒரு சூழலில் வாத்தியார் இருக்கிறார் என்று நினைத்தால் அவருடன் பழகுவதும் யதார்த்தம். தன் தாய் ஒருவருடன் பழகியிருக்கிறார்,அந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீது ஒரு மதிப்பு வந்து அவருடன் பழகுவது இயல்பு என்று நினைத்தால் அதுவும் யதார்த்தமே. இவ்வாறு ஒவ்வொரு எண்ணத்தையும் ஏற்றிப் பார்க்கலாம்.
பழகியப் பெண்ணை எல்லாம் முடிந்தவுடன் விட்டுச்செல்லும் ஒருவன், தாய் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவளின் பிரிவை நினைத்து வருந்தும் மகள், மனைவி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவள் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத கணவன், பணத்திற்காக வீட்டிற்கு வரும் பையன்,சபல எண்ணங்களுடன் இருக்கும் பக்கத்து வீட்டு ஆண், தொழிலில் பணத்தால் வரும் ஏற்றத்தாழ்வு, துரோகம் செய்யும் வேலைக்காரன், சொந்தவீட்டைப் பிரிய(ஊரையும்) முடியாமல் மனம் பிறழும் பெரியவர் ( இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1977. பல ஆண்டுகள் கழித்து வந்த ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பெரியவர் உயிரையே விட்டுவிடுவார்) என நமக்குத் தெரிந்த நிறையபேர் கடல்புரத்தில் இருக்கிறார்கள். நம்மால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளைத் தரும் மனிதர்களும் இருக்கிறார்கள்
எனக்கு இந்த ஊர் பிடித்திருந்தது. அடுத்தப் பயண அனுபவங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

புல்வெளிதேச‌ம்

புற்களின் மீது
நடப்பதுபோல்
சுகம் தருகிறது
தற்கொலை செய்துகொள்ளவேண்டும்
என்ற எண்ணம்

ஒவ்வொரு புல்லின்மீதும்
ஒரு துளிக் கண்ணீரை
வைக்க‌
அழகாய் இருக்கிறது
ம‌ர‌ண‌த்தின் வாச‌ல்

புற்க‌ளால்
பின்ன‌ப்ப‌ட்ட‌ கயிற்றில்
தூக்கிட்டுக் கொள்ள‌வேண்டும்

ஒவ்வொரு மரணத்திற்கும்
ஒரு நிறமுண்டு
புல்லின் நிறம்
எனது

த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள்
எப்பொழுதும் அழ‌கான‌வை
அது
எல்லா ம‌னித‌ர்க‌ளும்
ஒரு முறையேனும்
போய்வ‌ரும் புல்வெளிதேச‌ம்!


…ல்லை

எனக்குப் பிடித்த விசயங்களைக்
கவிதையாக்க முடிவெடுத்தேன்.
எனக்கு என்ன பிடிக்குமென்று
அதிகம் தெரிந்ததில்லையென்பதால்
பிடிக்காதவற்றை எழுதத் தொடங்கினேன்.
வீட்டிலிருந்து தெருவிற்கு வருவதற்குள்
ஒரு இருபது தேறியது.
தெருவிலிருந்து ரோட்டிற்குள்,
தெருவையும் ரோட்டையும் சேர்த்து
ஒரு இருபது.
ரோட்டில் தொடங்கியது
என் பிடிக்காத உலகம்.
இந்தப்
பிடிக்காத உலகத்தில்
யாரையும் பிடிக்கவில்லை
எதுவும் பிடிக்கவில்லை
என எழுதி முடிக்கையில்
எனக்குப் பிடித்த ஒன்றும்
பிடிக்காமல் போனது

*~*

எல்லாம் தெரிகிறது
எதுவும் தெரியவில்லை
எல்லாம் புரிகிறது
எதுவும் புரியவில்லை
எல்லாம் நடக்கிறது
எதுவும் நடக்கவில்லை
எல்லா நாட்களும்
இப்படித்தான் விடிகிறது
இப்படி விடிவதில்லை

Tuesday, October 14, 2014

இம்மார்டல் ஸ்னேக்

என் அறையில்
சுற்றிக்கொண்டிருக்கிறது
பதிமூன்று வயது
பாம்பொன்று

தினமும் இரவில்
என்னை விழுங்கப் பார்க்கிறது

ஒவ்வொருமுறையும்
"இதெல்லாம் சகஞம்"
என்று கூறி தப்பித்து வருகிறேன்

ஆன்மிகத்தில்
இசையில்
இலக்கியத்தில்
விளையாட்டில்
தத்துவத்தில்
ஏதோ ஒன்றில்
தொலைந்தால் சரி
என்று பார்க்கிறேன்

ம்ஹும்...

நான் துப்பிய எச்சிலில்
பிறந்த பாம்பென்பதால்
இதுவரை
நானும் சாகவில்லை
அப்பாம்பும் சாகவில்லை

Saturday, October 11, 2014

"நான் உனக்கு மட்டுந்தான்"
என்று நீ கூறிய இடத்தில்
என் ஆசைகள்
இன்று
ஆயிரம் விழுதுகள் விட்டு
வளர்ந்து நிற்கின்றன‌
நான்
அந்த வார்த்தைகளுடந்தான்
வாழ்ந்து வருகிறேன்

உன்னோடு
எல்லாமும் போய்விட்டன...
இந்த உயிர் மட்டும்
அந்த வார்த்தைகளுக்கிடையில்
எங்கோ
ஒளிந்து கொண்டுவிட்டது

ஒரு முறை
நான் தொட்ட
உன் கன்னத்தைப்
பிரதி எடுத்து
அதையும்
எட்டாத உயரத்தில்
வைத்துவிட்டுப்
போய்விட்டாய்

உன் திருமணத்திற்கு
உன் வார்த்தைகளை
அனுப்பி வைத்திருந்தேன்
பத்திரமாய் திரும்பி வந்து
இன்னமும்
கதை கதையாய்
சொல்லிக்கொண்டிருக்கின்றன‌

உன்னைப் பிரிந்தாலும்
உன் வார்த்தைகளைப் பிரிய மனமில்லை
எனக்கு வாய்க்கரிசி போடப்போகிறவர்களிடம்
அவற்றைக் குடுத்து
சேர்த்துப் போடச் சொல்ல வேண்டும்



Friday, October 10, 2014

அன்புள்ள அக்காவிற்கு,

அன்புள்ள அக்காவிற்கு,

வாழ்க்கை சில பாடங்களை நமக்குத் திரும்ப திரும்பக் கற்றுக்கொடுக்கிறது, அல்லது நாம் திரும்ப திரும்பப் படிக்கிறோம்.கிளையிலிருந்து உதிர்ந்த இலை கடலில் விழுந்தால் என்ன? கரையில் விழுந்தால் என்ன? சிலவற்றைப் பேசாமல் இருந்திருக்கலாம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.

மரணம் எல்லாவற்றையும் நேர் படுத்திவிடுகிறது, சமன் படுத்திவிடுகிறது என்று எங்கோ படித்ததாய் நியாபகம். என்னளவில் தீராத அன்பும் அவ்வாறே. உடனடி எதிர்வினைகள் அடங்கிய பின் அமைதியான, ஆழமான ஒரு கடலைக் கொண்டிருக்கும் அது.

தோள் சாய்ந்து நீ அழும்போது, வழிந்தோடும் உன் கண்ணீரின் கனம் தாங்காமல்தான் புலம்புகின்றேன். உன் தோட்டத்தில் பூக்கும் பூக்களுக்கு தனி வாசம் உண்டு, அதை மனிதர்களின் சந்தையில் விற்காதே என்றுதான் கூறுகின்றேன்.

அழும் குழந்தையால் வார்தைகளை செரிக்கவே முடிவதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அரவணைப்புகளில் ஒளிந்திருக்கிறது சமாதானம் செய்யும் மந்திரம். ஆம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.

சில பிரிவுகள், எதுவுமே எழுதப்படக்கூடாத/தேவைப்படாத ஒரு வெற்றிடத்தை விட்டுத்தான் செல்கின்றன‌ என்பது புரிகிறது. ஏன் எப்பொழுதுமே அழுதுகொண்டிருக்கிறாய் என்று சிலரிடம் கேட்பது ஏன் உனக்கு வண்ணங்களே தெரிவதில்லை என்று குருடனிடம் கேட்பதைப் போன்று அபத்தமானது. என்றாலும் எல்லா தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் ஏதோ ஒரு கணத்தில் நடந்துதான் விடுகின்றன.

மனுஷ்யபுத்திரனிடம் இந்தக் கவிதையை சத்தியமாக நான் எழுதச்சொல்லவில்லை. அவரும் எழுதாமல் விட்டிருக்கப்படவேண்டிய, அதிலும் குறிப்பாக இன்று எழுதிருக்கவே கூடாத ஒன்றை எழுதியிருக்கிறார்.
உன்னைவிட்டுப் போகும்போது
 ……………………………………………………….

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத
 ஒரு விடுதலையை அளிக்கிறாய்
 பதட்டமடையாமல்
 அவருக்கு நீ விடைகொடு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 உன்னுடைய நிழல் இல்லாமல்
 அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
 அனுமதிக்கிறாய்

 எந்தக் குற்ற உணர்ச்சியையும்
 ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு

 ஒருவர்
 உன்னைவிட்டுப் போகும்போது
 உன்னுடைய பழக்கங்கள் மாறுவதுபோலவே
 அவரது பழக்கங்களும் மாறிவிடுகின்றன

 போகும்போது அவருக்கு நீ
 எதையும் மறுக்காதே

 ஒருவர்
 உன்னைவிட்டுப் போகும்போது
 ஒரு சுவருக்கு அந்தப் பக்கமாய்
 போவதாகவே அவர் உணர்கிறார்

 நீ அவருக்கு
 நல்வாழ்த்துகளைத் தெரிவி

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 எதையோ
 கொஞ்சம் இழக்கிறாய்

 அவரும் எதையோ
 கொஞ்சம் இழந்துதான் போகிறார்
 என்பதால் நீ துக்கமடைய வேண்டியதில்லை

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 நீ இனி அவருக்குத் தர ஒன்றுமே
 இல்லை என்பதால்தான் போகிறார்

 நீ அவருக்கு
 உன்னிடம் இருப்பதிலேயே
 சிறந்த ஒன்றை அப்போது
 பரிசளித்துவிடு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 இனி எப்போதும் திரும்பவே மாட்டார்
 என்றுதான் நினைக்கிறாய்

 அந்தக் கணத்தின் அன்பை
 அந்தக் கணத்தின் வெறுப்பை
 அவருக்கு முழுமையாகக் காட்டு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 அவர் வெளிச்சத்தை நோக்கிப் போவதாக
 ஒரு கணம் உணர்கிறார்

 நீ அப்போது
 ஒரு காதல் கவிதையை
 எழுதாமலிரு

நாளை என்பது நிச்சயம் மற்றுமொரு நாளே. நம்பிக்கைகளே அதன் நிறம் மாற்றித் தர வல்லவை. நாளை உன் கண்ணீரின் கன‌மேனும் குறையும் என்ற நம்பிக்கையில் எழுதப்படாமல் விட்டிருக்கப்படவேண்டிய இக்கடிதம் முடிவடைகிறது.

விடியல்

எல்லாம் முடிந்துவிட்டது
 அல்லது
 எதுவுமே நடக்கவில்லை
 என்ற பாவனையுடந்தான்
 ஒவ்வொரு நாளும்
 விடிகிறது
***

இந்தப் பகலில் ஏறி
 அக்கரையில் இருக்கும்
 என் தம்பியைப்
 பார்க்கச் செல்லவேண்டும்

இரவில்
 திரும்பிவிடலாம்
***

துகிலுறிக்கிறார்கள்
 இல்லை
 துணியைச் சுற்றிவிடுகிறார்கள்
 ஆண்கள்
 எப்பொழுதும்
 பெண்களுக்காய்
 அடுப்பங்கரையிலே
 ஒரு உலகைச் சமைக்கிறார்கள்
***

ஒளியாலும்
 இருளாலும்
 மூடப்பட்டிருக்கும்
 உலகின் ஆழத்தில்
 ஓடுவது
 ஒன்றே

Thursday, October 9, 2014

மழைக் குறிப்புகள்…

என்
வாழ்க்கைப் புத்தகத்தின்
கருப்பு பக்கங்களை
ஒவ்வொரு முறையும்
அழித்துத் தருகிறது
இந்த
மழை
*
உதிரும்போது
மலரும் பூ
மழை
*
இடியுடன் கூடய மழை
காதலர்களுக்கென‌
ப்ரத்யேகமானது
*
தொட்டாச் சிணுங்கிகள்
பாவமென‌
குடைக்கு வெளியே
பெய்கிறது
மழை
*
இக்காலைப் பொழுதில்
அடுத்த மழையில்
சந்திப்போமென‌
பிரிந்து செல்கின்றன‌
பறவைகள்
*
நானில்லா நேரத்தில்
வந்து போன‌
மழையை
ரகசியமாய்
படம் பிடித்து வைத்திருக்கும்
என் அறையின்
மின் விசிறியை
ஓடவிட்டு
கனவில்
நனையப் போகிறேன்

மழை
பெய்யட்டும்…!

ஏனோ…

வெள்ளிக்கிழமைக‌ளில்
ஒலியும் ஒளியும் காண‌
காத்திருந்த‌ நாட்க‌ளை
நாட்குறிப்புக‌ளில்
தேடிக்கொண்டிருக்கும்பொழுது
கையில் சிக்கின,
என‌க்காய் காத்திருந்து
வ‌ந்த‌வுட‌ன் மேலே விழுந்து விளையாடும்
ம‌து என்னும் என் நாய்க்குட்டியுட‌னான‌ நாட்க‌ள்.
வேறெதுவும் கிடைத்துவிட‌க் கூடாதென
அவசரமாய் மூடி வைக்கிறேன்,ஏனோ
சில‌ க‌ருப்பு ப‌க்க‌ங்களுக்கு
இன்ன‌மும்
காவ‌ல் நிற்கிற‌து
ம‌து
**
சொர்கமோ நரகமோ
போய் விடலாமென்று
நடந்து சென்று கொண்டிருந்தேன்

பின்னால் வந்து மோதியது
ஒரு மிதி வண்டி

முன்பொரு நாள்
என் பிருட்டத்தில் வந்து
முட்டிய ஆட்டுக்குட்டியின்
நினைவு ஏனோ வர
சிரித்துக் கொண்டேன்

சிரிக்கத் தொடங்கிய
நொடியிலிருந்து
வெகு தொலைவில்
சொர்கமும்
நரகமும்…
**
அந்தப் படத்தைப்
பார்த்து
அந்த இருவரும்
காதலிக்கத் தொடங்கினர்

அந்தப் படத்தில்
வருபவர்களைப்போலவே
காதலித்தனர்

ஊடலும் கூடலும்
அப்படியே

அப்படத்தில்
திருமணம் நடந்த
அதே இடத்தில்
இவர்கள் திருமணமும்

அப்படம்
அத்துடன் முடிவடைந்தது

இப்பொழுது
இவர்களின்
முடிவில்
தொடங்க இருக்கிறது
அடுத்தப் படமொன்று

Sunday, October 5, 2014

பாட்டி

"பாட்டி.. பாட்டி நான் சொல்லிண்டே இருக்கேன். கேட்காம எங்க கிளம்பிட்ட." பாட்டி காய் கறி வாங்க போவதாய் சொல்லிக்கொண்டிருந்தாள். பையுடன் வாசலை நோக்கி தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கினாள்."குடு பாட்டி நான் வேணாபோய்ட்டு வரேன்." பையை வாங்கப் போன என் கையைத் தட்டி விட்டாள். பின் என் கையையே பிடித்துக்கொண்டு செருப்பைப் போட்டுக்கொண்டாள். "தாத்தா, பாரு தாத்தா நான் சொல்ல சொல்ல கேட்க்காம கடைக்கு போறா பாட்டி.” ஹாலில் உட்கார்ந்து தினமலர் படித்துக்கொண்டிருந்த தாத்தாவும் எதுவும் பதில் சொல்லவில்லை. பாட்டி அதற்குள் வெளி கேட்டைத் திறந்து சென்றுகொண்டிருந்தாள். நான் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அடுப்படியிலிருந்து ஹாலுக்கு வந்த அம்மா ஒரு நிமிடம் வெளியே போகும் பாட்டியையும், என்னையும், தாத்தாவையும் பார்த்து விட்டு மீண்டும் அடுப்படிக்குள்ளேயே சென்று விட்டாள். எல்லோரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளாமல் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. நான் தான் அதிகமாக கவலைப் படுகிறேனோ என்று தோன்றியது. பாட்டிக்கு எழுபது வயது முடியப் போகிறது. நோய் நொடி எதுவுமில்லை என்றாலும் இடுப்பு எலும்பு தேய்ந்து போனதால் நடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தாள். இத்தனைக் காலம் வீட்டை விட்டு வெளியே அதிகம் சென்றதில்லை. எல்லாமே தாத்தாதான். ஆனால் சமீபகாலமாய் அவளிடம் மாற்றங்கள். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தாத்தா முன் நின்று அதிகம் அவள் பேசியதே இல்லை. கேட்டதுக்கு மட்டுமே பதில் சொல்வாள். அதிலும் சிரித்துப் பேசி ஒரு நாள் கூட பார்த்ததில்லை. இப்பொழுதெல்லாம் அவளே வலிய போய் பேசுகிறாள். டீவியில் வரும் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கிறாள். யார் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் சத்தம் போட்டுச் சிரிக்கிறாள். அவள் மற்றவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. எனக்கு அவள் தனியே வெளியே செல்லத் தொடங்கிய பின்புதான் கவலை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் பாதை அரைக்கிலோ மீட்டர் இருக்கும். பழக்கடைக்கு வந்தவள் பாதி வழியில் தலைச் சுற்றல் ஏற்பட்டு ஒரு வீட்டு வாசலில் அப்படியே உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துவிட்டு "ஒன்னுமில்லடா. லேசா தலய சுத்திடுத்து. வா போலாம்" என்று சமாளித்துவிட்டாள். எனக்கு அன்றிலிருந்து அவளைத் தனியே வெளியே அனுப்ப பயம்.

நீண்ட நேரமாகியும் பாட்டியைக் காணாததால் எனக்கு பதட்டம் அதிகரித்தது. வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். "வருவாடா. இங்க இருக்க கடைக்குதான போயிருக்கா" அம்மா.

" அதான்மா பயமாருக்கு. இங்க இருக்க கடைக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா?"

" நீ வேணா போய் பாத்துட்டுதான் வாயேன். இங்கேயே உக்காந்துண்டு ஏன் இப்படி புலம்பிண்ட்ருக்க"

அதுவும் சரிதான். சட்டையை போட்டுக்கொண்டு வாசலிற்கு போவதற்குள் பாட்டி வெளி கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள்.வலது கை முழுவதும் ஒரே மண். முட்டிக்காலிலும் மண் ஒட்டியிருந்தது.

"என்ன பாட்டி விழுந்துட்டியா"

"ஒன்னுமில்லடா கண்ணா. கல்லு தட்டி விட்றுத்து. பெருசா அடிலாம் இல்லே. மழ பெஞ்ச ஈர மண்றதனால மேலெல்லாம் மண்ணாயிடுத்து. மத்தபடி எதுவுமில்லே"

"இதுக்குத்தான் சொன்னேன். தனியா வெளிய போகதா போகாதன்னு. ஏன் பாட்டி இப்படி பன்ற" கோபம் தலைக்கு ஏற கத்தத் தொடங்கினேன்.அதற்குள்ளாக அம்ம வந்து பாட்டியிடம் காய்கறிப் பையை வாங்கி வைத்து, மண்ணையெலலாம் துடைத்துவிட்டு வேறு புடவை மாற்றி ஹாலில் இருக்கும்  சேரில் உட்கார வைத்தாள்."ஒன்னுமில்லடா. நீ பயப்படாத" என்று பாட்டி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள். அம்மா பெரிதாக ரியாக்ட் பண்ணவில்லை.  பாட்டியை ஹாலில் விட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டாள். தாத்தாவோ அந்த தினமலர் பேப்பரிலிருந்து தலையை வெளியே எடுக்கவேயில்லை.

"நான் இங்க ஒருத்தன் கத்திண்டிருக்கேன். உங்க யார் காதுலயும் விழலையா. பாட்டி கீழ விழுந்து எழுந்து வந்துருக்கா. யாருமே கண்டுக்காம உங்க வேலய பாத்துண்ட்ருக்கேள்"

"டேய். சும்மா கத்திண்டே கிடக்காத. உன் பிரண்ட பாக்கனும்ன்னு சொன்னல்ல. போய் பாரு போ" உள்ளிருந்து அம்மாவின் குரல். எனக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஏன் யாருமே கொஞ்சம் கூட அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தாத்தா ஏன் இப்படி இருக்கிறார். தன் வாழ்க்கை முழுவதும் அவரே கதியெனக் கிடந்த ஜீவனைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இவரால் எப்படி இருக்க முடிகிறது. எனக்கு தாத்தாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சுய நலத்தின் மொத்த உருவமாகத் தெரிந்தார்.

"பாட்டி, கைகால் எதுவும் வலிக்கிறதா? நான் மாத்திர வாங்கிண்டு வரவா"

"அதெல்லாம் ஒன்னுமில்லடா. நான் நன்னா இருக்கேன். நீ போய்ட்டு வா" என்று சொல்லி விட்டு  டீவியைப் பார்க்கத் தொடங்கினாள். எனக்குத்தான் மனம் கேட்கவே இல்லை. யோசித்துக்கொண்டே வெளியே கிளம்பி வந்தேன்.

வழி நெடுகும் மனதில் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. பாட்டி என்றால் எனக்கு அவ்வளவு பிரியம். பாட்டிக்கும் என் மீது அதிக பாசம் உண்டு. தாத்தாவும், பாட்டியும் கடந்த ஒரு வருடமாகத்தான் எங்களுடன் தங்கி இருக்கிறார்கள். அதற்கு முன் மாமவுடன் மதுரையில் இருந்தார்கள். சின்ன வயதில் மாமா வீட்டில் தங்கி ஒரு வருடம் படித்தேன். அப்பொழுதிருந்துதான் எனக்குப் பாட்டியைப் பிடிக்கத் தொடங்கியது. பல எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.

அன்றைக்குப் பிறகு பாட்டி இரண்டு முறை விழுந்து எழுந்துவிட்டாள். இரண்டாவது முறை நல்ல அடி. இன்னும் கொஞ்சம் பலமாக அடி பட்டிருந்தாலும் போய் சேர்ந்திருப்பாள். வீட்டிலிருப்பவர்கள் அப்பொழுதுதான் கவலைப் படுவதாகத் தெரிந்தது. தாத்தா அவள் வெளியே போகும்போதெல்லாம் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளத் தொடங்கினார். திரும்பி வரும் வரை அவர் மிகவும் கவலையோடு இருப்பார். பாட்டி இரண்டாவது முறை அடி பட்டு வந்ததும் எனக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. நான் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிட்டேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக பாட்டி வெளியே போவதைத் தடுத்தார்கள். அதையும் மீறி சில நாட்கள் அவள் வெளியே செல்வதுண்டு.

"தாத்தா.." பாட்டியின் வருகைக்காக வாசற் திண்ணையில் போய் உட்கார்ந்திருந்தவரின் முன்னால் போய் நின்றேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர், "சொல்லுடா" என்றார்.

"தாத்தா. நானும் பாத்துண்டேதான் இருக்கேன். இங்க நடக்கற எதுவும் சரியா படல."

"பாட்டியப் பத்திப் பேசறயா?"

"ஆமா.வேற எதப் பத்திப் பேசப் போறேன்" தாத்தா சிரித்தார். எனக்கு அது மேலும் எரிச்சலூட்டியது. "இதத்தான் என்னால தாங்கிக்க முடியல. உனக்கு பாட்டி மேல கொஞ்சம் கூட பாசம் கிடையாதா. அவ ஒவ்வொருதடவயும் வெளில போய்ட்டு வரதுக்குள்ள நான் என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு பயந்துண்ட்ருக்கேன். நீ என்னடான்னா சிரிக்கற"

தாத்தா என்னை ஒரு நொடி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே போனார். சட்டையை மாட்டிகொண்டு வந்து, "வா போலாம்" என்றார்.

"எங்க?"

"பாட்டி கோவிலுக்குப் போயிருக்கா. வா போய் பாத்துக் கூட்டிண்டு வரலாம்" சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். எனக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் முழுவதையும் சுத்தி வந்தும் பாட்டியைக் காணவில்லை. கோவிலின் பின்னால் ஒரு பூங்கா இருந்தது. ஒரு வேளை அங்கு போயிருப்பாளோ என்ற சந்தேகத்தில் போய்ப் பார்த்தோம். பாட்டி அங்குதான் இருந்தாள். மர நிழலிலிருந்த பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்திருந்தாள்.

"வா தாத்தா போய் கூட்டிண்டு வரலாம். அங்க என்ன செய்றா தனியா உக்காந்துண்டு?"

"இருடா. அவசரப்படாத. கொஞ்ச நேரம் அமைதியா அவ என்ன பன்றான்னு பாரு"

ஒன்றும் புரியாதவனாய் அமைதியானேன்.

பாட்டி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேறெதுவுமே செய்யவில்லை. அரை மணி நேரம்  அங்கு போகிற வருபவர்களை பார்த்து கொண்டு இருந்ததோடு சரி. பின் எழுந்து ஆத்திற்கு கிளம்பி நடக்கத் தொடங்கினாள்.

தாத்தாவைப் பார்த்தேன்.

"கண்ணா.. உங்க பாட்டி ஏன் இப்படி வெளில வெளில் போறதுல இவ்வளவு அடமா இருக்கான்னு தான கேட்டுண்டே இருக்க. எனக்கு தெரிலடா. அவ இப்படிலாம் இருந்ததில்லதான். போன வருசம் அவளுக்கு ஒரு தடவ ஸ்ட்ரோக் வந்தது. மைல்டான ஸ்ட்ரோக்தான்.."

"என்ன தாத்தா சொல்ற"

"ஆமாட உனக்கு இதெல்லாம் தெரிய வேணாம்ன்னு நினச்சோம். அப்ப உனக்கு எக்ஸாம் டைம். ஒன்னு பயப்பட வேணாம்ன்னு டாக்டர் சொன்னார். ஆனா இன்னொரு தடவ வந்தா ரிஸ்க்ன்னு சொல்லிட்டார். முடிஞ்ச வர அவளுக்கு அதிகம் டென்சன் குடுக்காம பாத்துக்கோங்கோன்னு சொன்னார். அதுல இருந்து உங்க மாமவும், மாமியும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. பேசாம டீவி மட்டும் பாத்துண்டு இருங்கோன்னு சொல்லிட்டா. கொஞ்ச நாள் ஆக ஆக உன் பாட்டிகிட்ட சேஞ்சஸ். என்னய வெளில கூட்டிண்டு போங்கோ, நான் எவ்வளவு நாழி சும்மாவே உக்காந்துண்டு இருக்கறதுன்னு புலம்ப ஆரம்பிச்சா. கோவிலுக்கு கூட்டிண்டு போனோம். அப்பறம் ஒரு நாள் தனியாவே கிளம்புனா. இருடி நானும் வரேன்னு சொன்னதுக்கு வேண்டாம் வராதீங்கோ நான் மட்டும் போய்க்கிறேன்னு சொன்னா. என்னடி இது புதுசா தனியா போறேன்னு சொல்லிண்ட்ருக்கன்னு கேட்டதுக்கு பயங்கரமா கத்த ஆரம்பிச்சுட்டா. அன்னைல இருந்து இப்படித்தான். எங்க போனாலும் தனியாவே போகனும்னு விரும்புறா. இங்க வந்தாலாச்சும் ஏதாவது மாற்றம் வரதான்னு பாக்கலாம்ன்னுதான் இங்க கூட்டிண்டு வந்தேன். நன்னாதான் இருந்தா. கொஞ்ச நாள் முன்னாடி மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு ஹாஸ்பிடல் கூட்டிண்டு போய்ட்டு வந்தோமோல்யோ அதுக்கப்பறம் உங்கம்மாவும் அவள ஒரு வேல செய்ய விடறதில்ல. மறுபடியும் இப்படி ஆயிட்டா. இந்த தடவ ரொம்ப சீரியஸா ரியாக்ட் பன்ன ஆரம்பிச்சுட்டா. டாக்டர்ஸ் அவள அவ போக்குல விடறதுதான் நல்லதுன்னு சொல்லிட்டா.

"தாத்தா எதவாது ஆயிடுத்துன்னா என்ன பன்றது. கத்துனாலும் பரவால்லன்னு உள்ளயே இருக்க வைக்க வேண்டியதுதான. லாஸ்ட் டைம் நான் கோபமா பேசுனதுக்கப்பறம் இப்போ குறச்சுருக்காளே"

"கண்ணா. போகாம இருக்காதான். ஆனா போகனும்ன்னு தோண்றது போலயே அவளுக்கு. இல்லன்னா ஏன் இப்படி வந்து அரை மணி நேரம் உக்கார போறா. இது இன்னைக்கு நேத்து வந்த எண்ணமா இருக்காதுடா கண்ணா. அவ வாழ்க்கை பூரா அவ அடி மனசுல இருந்துருக்கும். அடுப்படியத் தவிர வாசலுக்குத்தான் அதிகப் பட்சம் போயிருக்கா. அத தாண்டுனதில்ல. எல்லாம் இப்ப வெளில வரது."

நான் மனம் சாந்தி அடையாதவனாக இருந்தேன்.

"எனக்கு உன் பயம் புரியறது. வாழ்க்கைல எல்லாத்துக்கும் மரணம் ஒரு நாள் நிச்சயமா வரத்தாண்டா போறது. வீட்டுக்குள்ளயே இருந்துட்டா சாகாமயே இருக்கப் போறமா என்ன. இத்தன நாள் அவள வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சுட்டோம்ன்னு தோன்றதுடா. வெளி உலகத்த அவ பாக்கவே இல்ல. நாலு மனுசா முகம் பாக்கட்டும். கொஞ்சம் காத்தாட நடந்தாவே மனசு லேசாகும். அதான் அவள போக விடறது. ஆப்டர் ஆல் திஸ் லைப் ஹேஸ் நோ மீனிங் அட் தி எண்ட்." சொல்லிவிட்டு தாத்தா நோக்கி தொடங்கினார்.

எனக்கு தாத்தாவின் வேதாந்தங்கள் ஒன்றும் புரியவில்லை. எழுபது வயது பாட்டியைத் தனியாக விடுவதில் என்ன தத்துவம் இருக்கிறது. வயதானவர்களையும், குழந்தைகளையும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.இருந்தாலும் “பாட்டி வெளி உலகம் பார்க்க விரும்புகிறா. ஏற்கனவே ஒரு முறை நான் சொன்னதைக் கேட்டுள்ளா. இனி நான் வந்து உன்ன வெளில கூட்டிண்டு போறேன். நீயா தனியா போகதன்னு சொன்னா கேட்பா” என்று நினைத்துக்கொண்டே தாத்தாவைப் பின் தொடர்ந்தேன்.

வாடகை வீடு

    மென்று துப்பப்பட்ட
    முருங்கைக்காயாய் கிடக்கிறது
    நாங்கள் குடியிருந்த
    வாடகை வீடு...
    சில நினைவுகள்
    ஆணியடிக்கப்படாமல்
    ஒரு பூனையைப் போல்
    அங்கேயே
    இன்னும்
    சுத்திக்கொண்டிருக்கின்றன
    தவற விட்டு வந்த
    குளியலறை ரகசியங்களை
    யாரிடமும்
    சொல்லாமலிருக்க வேண்டும்
    அந்த வீடு
    பேரழகெல்லாம் இல்லை
    எனினும்
    திரும்பி ஒருமுறை
    பார்க்காமல்
    அவ்வீட்டைக்
    கடந்து செல்ல
    முடிந்ததேயில்லை
    சில மாதங்களையோ
    சில வருடங்களையோ
    காசுக்கேற்றவாரு
    பிடித்து நன்றாக
    சமைத்துத் தருகின்றன
    வாடகை வீடுகள்
    வாடகை வீடுகளின்
    பயணங்களில்
    நாம் அவைகளின்
    ரயில் சிநேகிதங்கள்


தண்ணீர்

இரண்டாயிரத்தின் பிற்பாதியில் எங்கள் ஊரில் மாதக் கணக்கில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. லாரி தண்ணீரும் கிடைக்காத நிலையில், ஊருக்கே தண்ணீர் தந்த கிணற்றை நினைத்துப் பார்க்கிறேன்.  வாய்க்கால் வரப்புகளைத் தாண்டி, ஒரு சிறு குன்றின் அருகில் இருந்த அக்கிணற்று நீருக்காக, சைக்கிளில், டி.வி.எஸ் எக்சலில் குடங்களை வைத்துக் கொண்டு ஊரே செல்லும் காட்சி கண் முன் தோன்றி மறைகிறது. ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய். :)
புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.
கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :)
சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.

உன் பெயர்

உன்னைப் பற்றி பாடப் போகும்
கவிதையொன்றுக்காக‌
வார்த்தைகளுக்கு
நேர்முகத் தேர்வு நடத்தினேன்
முற்றுப் புள்ளிக்கு
இடமளிக்காமல்
வந்து விழுந்த வார்த்தைகளில்
கழித்தது போக‌
மீதமிருப்பவை
எல்லா மொழிகளிலும்
உன் பெயர் மட்டுமே!

“தெரியவில்லை”

நானும் நண்பரும்
ஒரு பயணத்திலிருந்தோம்
நண்பர் என்றா சொன்னேன்?
ம்…
உற்சாகமான பயணமென்று
சொல்வதற்கில்லை
ஆனால் அதுதான் வழி
என்று சொல்லியிருந்தார்கள்
நீண்ட நெடுஞ்சாலையொன்றின்
ஓரத்தில்
“என்னை முத்தமிட்டுக்கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த அட்டையைப்
பிடித்துக் கொண்டு
ஒரு பெண் நின்றிருந்தாள்
அவளைப் பார்க்காமல்
வந்து விடுங்கள்
“அவள் பெயர் மாயை” என்றார் உடன் வந்தவர்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்கள்”
அவர் சென்றுவிட்டார்
சிறிது தயக்கத்துடந்தான் ஆரம்பித்தேன்
மெதுவாய்
ஒன்றாய்
இரண்டாய்
பின்
காலமொன்றை மறந்து
திரும்பி வந்து
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”
என்றார் நான் முன்னால் கூறிய நண்பர்
“தெரியவில்லை”
“நீங்கள் எங்கு சென்றீர்கள்?”
“தெரியவில்லை”

அதன் பின்
அவர் மீண்டும் போய்விட்டார்
நான்
அந்த அட்டையில்
சொல்லியிருந்தபடி
செய்யத் தொடங்கினேன்….

மனம் தொட்ட கவிதை

உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது கவிதைகள் கூறுங்கள் என்று நண்பர்கள் கேட்கும் பொழுது எனக்கு எதைச் சொல்வது இல்லை எவற்றைச் சொலவது என்று தெரியாமல் கஷ்டப் படுவேன். இதற்கு முக்கியக் காரணம் என் ஞாபக சக்தி. என்னால் ஒரு விசயத்தை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவே முடிவதில்லை. நான் எழுதியவற்றில் கூட என்னால் ஒன்றிரண்டைத் தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.பல வருடம் பழகிய நண்பர்களையெல்லாம் ஒரு சில ஆண்டுகள் பார்க்கவில்லை என்றால் யார் நீங்கள் என்று கேட்ட அனுபவமெல்லாம் உண்டு. இதனாலேயே இப்படி யாராவது கேட்டால் “அப்படி ஒன்னு ரெண்டுலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று சொல்லி சமாளிப்பேன். ஆனால் நகுலனின் இக்கவிதை என்றைக்கும் என் நினைவை விட்டு அகலும் என்று தோன்றவில்லை.

“எனக்கு யாருமில்லை நான் கூட‌” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.

 இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,

 ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது  போலிருந்தது.

தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.

என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.

அஞ்சலி!

அவன்
 இன்று
 அங்கு வந்திருந்தான்

க‌ம்பீர‌மான‌
 அழ‌கான‌
 த‌ன் ம‌ர‌ணத்தைக் காட்ட‌
 உடல் கிழிந்து இறந்த‌
 ஒரு பெண்ணுடன்
 அவன்
 இன்று
 அங்கு வந்திருந்தான்

“இங்குதான்
 எல்லோரும்
 பார்க்க‌
 என் மரண நாட‌க‌ம்
 இனிதே நிறைவேறியது

அதோ
 அங்கு
 சிதிறிக் கிடப்பவை
 என் இறுதி வேண்டுதல்கள்

இங்கிருந்து அவ்வளவு தூரமே
 என் இறுதிப் பயணம்

பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
 இவனும்

ஆனால்
 கருணையுள்ளவன்

ஓட ஓட விரட்டியோ
 கதறக் கதற குதறியோ
 நடு ரோட்டில் வீசியோ
 என்னைக் கொல்லவில்லை

எல்லோரும்
 கதறினோம் பதறினோம்
 என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்

‘விட்டுவிடு
 என்று கெஞ்சியிருந்தால்
 விட்டிருக்கும்
 என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை’

உனக்கு
 இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்” என்றான்

அவள் பேசவில்லை
 ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
 இன்றும் பேசவேயில்லை

நம்பிக்கை


நிகழ்ச்சி முடிந்து
 எல்லோரும் போய்விட்டார்கள்
 இன்னமும் கலைக்கப்படாத
 மேடையில் நின்றுகொண்டு பார்க்கிறேன்

வந்திருந்த பார்வையாளர்கள்
 அவர்களால் முடிந்த
 ஏதோ ஒன்றை
 விட்டுத்தான் போயிருக்கிறார்கள்

சம்பிரதாய கைத்தட்டல்கள்
 சிறு சிறு
 புன்னகைகள்
 ஆராவார விசில் சத்தங்கள்
 தின்று விட்டு
 போட்ட ஏப்பங்கள்
 கொட்டாவியுடன்
 எடுத்த
 கைப்பேசி அழைப்புகள்
 நடு நடுவே கிடந்த
 ஆபாச வார்த்தைகள்
 என
 இன்றைய தினம்
 அரங்கு முழுவதும்
 நிறைவாய்
 சிதறிக் கிடக்கிறது

- ஒத்திகைகள்
 எப்பொழுதும்
 நம்பிக்கைத் தருவனவாகவே
 முடிகின்றன

மூடர்க் கூடம்!

அதிகாலை நான்கு மணிக்கே
கடையைத் திறந்துவிட்டேன்
நான் ஊருக்குப் புதுசு
தொழிலுக்கும் புதுசு
ஆரத்தி எடுக்க‌
ஆளை நிறுத்தி
வருபவர்களை எதிர்பார்த்து
வாசலில் நின்றேன்
விசித்திர ஊர்
எல்லோரும் விடிந்து
மூன்று மணி நேரம் கழித்து
வரத் தொடங்கினர்
வந்த எல்லோரும்
என் கடைப் பக்கத்திலேயே
கடை போட்டனர்
என்னைப் போலவே
ஆரத்தி எடுக்கும் ஆளுடன்
வாசலில் நின்றனர்
அதிலொருவர்
என்னைப் பார்த்து
ஏதோ கேட்டார்
ஒருவர்
என்னைப் பற்றி
இன்னொருவரிடம் ஏதோ சொல்லத்தொடங்கினார்
மற்றொருவர்
என்னைத் திட்டத் தொடங்கினார்
ஒன்றாக சேர்ந்து
ஒரு கூட்டம் சிரிக்கத் தொடங்கியது
ஓடிவிடு என்றார் ஒருவர்
ஒருவர் கடைசி வரை
என் பக்கம் திரும்பவில்லை
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஒருவருக்கும்
போணி ஆகவில்லை
எனினும்
அன்றைய நாள்
இவ்வாறாக முடிய‌
கை குலுக்கிக் கொண்டு
விடைப் பெற்றனர்
இப்படியே
இரண்டு நாட்கள்
காலியான‌
தெருவில்
கைக்கலப்புகளுடனும்
கைக்குலுக்கள்களுடனும்
போயின
எனக்கு
மெல்ல‌
இந்த வியாபாரம்
புரியத் தொடங்கியது
மறு நாள்
பத்து மணிக்கே
விடிந்தது!

நீதிக் கவிதை!

நீள் கவிதையொன்றை எழுதி
நீல நிற ஆற்றைக்
கடந்து கொண்டிருந்தேன்
“ஆறு” – இங்கு குறியீடாக வருகிறது
யாருமே பாத்திராத ஒன்றுக்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்று சண்டையிட்டுகொண்டிருந்த இருவர்
என் கவிதையைப் பிடுங்கி
குறியீட்டில் எறிந்தனர்
தவறி விழும் பொருட்களை
எடுத்துக் கொடுக்கும் தேவதையிடம்
வேண்டினேன் வேண்டினேன் வேண்டிக்கொண்டேயிருந்தேன்
ஆதர்சனம் என்று
யாரையோ சொல்லிக்கொண்டு
தர்சனம் கொடுத்தாள் தேவதை
நான் முத்தமிட்டால்
இந்த ஆறே கரைந்து போகும்
மரியாதயாய் எடுத்துத் தா என்றேன்
புரியவில்லை என்றாள்
அதைத்தான் எடுத்துத் தா என்றேன்
புரிந்து கொண்டாள்
மூன்றெழுத்தில் முடியும் கவிதையொன்றை
எடுத்து வந்தாள்
அய்யோ
இது இல்லையென்றேன்
அதையே
முன்று வரியாக்கித் தந்தாள்
இருக்கலாம் என்றேன்
‘பரமபிதா, சாத்தானே, முலை, வேசி,
கொலை, கொடூர பயங்கரம்’
நிறைந்த ஒன்றைத் தந்தாள்
பார்க்க அப்படித்தான் தோன்றுகிறதென்றேன்
ஒரே எழுத்தில் முடியும்
ஒன்பது வரிகளைக் கொண்ட ஒன்றையும்
மூன்று மூன்றுப் புள்ளிகளுக்கிடையில்
சில வார்த்தைகள் கொண்ட ஒன்றையும்
எடுத்து வந்தாள்
நிச்சயமாய் சொல்வதற்கில்லை என்றேன்
சோர்ந்து போனவளாய்
கொட்டாவி விட்டாள்
ஆஹா அருமை என்றேன்
‘போடா மயிறு’ என்றாள்
கவிதை, கவிதை
எனக் கத்தினேன்

நீதி:
யாரறிவார்
எது
என்ன என்பதை
எனவே
“உனக்கான கவிதையை
நீயே எழுதிக்கொள்”

இரவு

இரவுகளை விற்கும்
கடைக்குச் சென்றிருந்தேன்
பல வகையான‌
இரவுகளை விற்றுக்கொண்டிருந்தார்கள்
தூக்கத்தைத் தரும் இரவு…
கனவுகளையும் சேத்துத்தரும் இரவு
நிலாவோடு இரவு
நட்சத்திரங்கள் பூத்த இரவு
மழை இரவு
மூடி மறைத்து
அதிக விலைக்கு விற்கப்படும்
முதலிரவு
என பலவகையான இரவுகள்.
கடைசியைத் தவிர்த்து
எல்லாவற்றிலும்
ஒன்று வாங்கிவந்து
ஒரு வருடமாயிற்று
பிரிக்கப் படாத‌
புத்தகங்களாய்
கிடக்கும் அவைகளை
யாரேனும்
பாதி விலைக்கு வாங்க்கிக்கொள்கிறீர்களா
- இப்படிக்கு
பி.பி.ஒ எம்ப்ளாயி

“கானகன்”

கானகன்

லக்ஷ்மி சரவணகுமார் அவர்கள் எழுதிய‌ நாவல். ஆசிரியரின் பெயரை இந்நாவலுக்கு முன் கேள்விப் பட்டிருந்தாலும், அவரின் படைப்புகளை படிப்பது இதுவே முதல் முறை. அகநாழிகை பதிப்பகத்தில் நடந்த கானகன் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தேன். அதுவே இப்புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும், இவ்வளவு காலம் கழித்துப் படிக்கவும் காரணம். ஆம். மூத்த எழுத்தாளர் சாரு அவர்கள் படு பயங்கரமாக அறிமுகப் படுத்தி வைத்தார். சாருவின் மதிப்புரைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்ட காரணத்தால் மனதில் எழுந்த முன் முடிவுகளை ஒத்தி வைக்க சற்று கால தாமதமாகிவிட்டது.

இந்நாவலுக்கு குட் ரீட்ஸ் தளத்தில் நான் நான்கு நட்சத்திரங்கள் குடுத்துள்ளேன் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

கதையை மிகக் குறுகிய காலக்கட்டத்திற்குள் எழுதி முடித்ததாகவும், இன்னும் கூட எழுதப்படாமல் சிலவை விட்டுப் போயிருக்கலாம் என்று ஆசிரியர் அறிமுகக் கூட்டத்தில் சொன்னார். பின்பு நாவலைப் பற்றி எழுதப்பட்ட/பேசப்பட்ட‌ விமர்சனங்களில் முடிவு மிகவும் நாடகத்தனமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. அதையே நானும் கூறுகிறேன். எனக்கும் அவ்வாறே தோன்றியது.இவை எல்லாவற்றையும் தவிர்த்து என்னால் இந்த நாவலை ரசிக்க முடிந்தது.

கதையின் கரு (ஒன்லைன்) வாசி, தங்கப்பன்(அப்பா, மகன்) உறவுச் சிக்கல் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கதை முழுவதும் வாசிக்கையில் தோன்றிய எண்ணங்கள், படித்து முடித்த பின்பும் எஞ்சி நிற்பவை: மனிதர்கள் காட்டு வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் பழங்குடியினர் மற்றும் காட்டு உயிரினகங்கள் துரத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றன.

இன்னும் சற்று யோசித்தால் : கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல் வேட்டயாடி, தன் வேட்டை மிருகங்களுக்கே பலியாவான். ஆனால் நாவல் முழுவதும் திரும்பத் திரும்ப காட்டிற்கும், காட்டு உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு,அவையின் அழிவு அழிவைத் தரும் என்று சொல்லப்படுவதால் முதலில் கூறிய எண்ணமே எஞ்சி நிற்கிறது.

சில மனதிற்கு ஒட்டாத வரிகள்:

பேருந்து நிலையத்திலிருந்து பஸ் கிளம்பிச் சென்றது...

செத்த குரங்குகள் நிம்மத்யாய் கிடந்தன...

புலி குன்று போல் கிடந்தது( புலியின் பிரம்மாண்ட உருவை இவ்வரி கண் முன் நிறுத்தவில்லை,அதற்கு முன்புள்ள வரிகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது )

இந் நாவல் காட்டும் மலைவாழ் பழங்குடியினரின் வாழ்க்கை முறை ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டும்.

தங்கு தடையற்ற, தொய்வற்ற ஓட்டம் இந்நாவலின் பலம். மனிதன் ஒரு கரையான் என்பதும், ஆபத்து காலங்களில் தன் நலனுக்காக‌ எதையும் இழக்கவோ/அழிக்கவோ துணிவான் என்பதை ஆழமாக பதிவு செய்கிறது. (ஜெ.மோ வின்தளத்தில் ஒரு வாசகர் இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்: தன் மகனுடன் வெளியில் சென்ற அவர் ஆபத்தொன்றில் தன் மகனை விட்டு விட்டு தான் தப்பிக்க நினைத்ததாய் போகும் அக்கடிதம். ஒரு ஆணின் குணம் என்று அக்கடிதம் அலசப்பட்டிருக்கும். இங்கு அக்கடிதத்தை நினைவு கூறுகிறேன்)

மலைச்சொல் பதிப்பகம்
விலை: ரூபாய் 200

Thursday, September 25, 2014

பூ

செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது

மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது

முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது

ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்

பின்
அழகான பூவென‌

ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்

பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ

எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது

என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என‌
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது

தண்ணீர்

இரண்டாயிரத்தின் பிற்பாதியில் எங்கள் ஊரில் மாதக் கணக்கில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. லாரி தண்ணீரும் கிடைக்காத நிலையில், ஊருக்கே தண்ணீர் தந்த கிணற்றை நினைத்துப் பார்க்கிறேன். வாய்க்கால் வரப்புகளைத் தாண்டி, ஒரு சிறு குன்றின் அருகில் இருந்த அக்கிணற்று நீருக்காக, சைக்கிளில், டி.வி.எஸ் எக்சலில் குடங்களை வைத்துக் கொண்டு ஊரே செல்லும் காட்சி கண் முன் தோன்றி மறைகிறது. ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய். :)

புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.

கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :)

சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.

கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் 115

உன் பெயர்

உன்னைப் பற்றி பாடப் போகும்
கவிதையொன்றுக்காக‌
வார்த்தைகளுக்கு
நேர்முகத் தேர்வு நடத்தினேன்
முற்றுப் புள்ளிக்கு
இடமளிக்காமல்
வந்து விழுந்த வார்த்தைகளில்
கழித்தது போக‌
மீதமிருப்பவை
எல்லா மொழிகளிலும்
உன் பெயர் மட்டுமே!

“தெரியவில்லை”

நானும் நண்பரும்
ஒரு பயணத்திலிருந்தோம்
நண்பர் என்றா சொன்னேன்?
ம்…
உற்சாகமான பயணமென்று
சொல்வதற்கில்லை
ஆனால் அதுதான் வழி
என்று சொல்லியிருந்தார்கள்
நீண்ட நெடுஞ்சாலையொன்றின்
ஓரத்தில்
“என்னை முத்தமிட்டுக்கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த அட்டையைப்
பிடித்துக் கொண்டு
ஒரு பெண் நின்றிருந்தாள்
அவளைப் பார்க்காமல்
வந்து விடுங்கள்
“அவள் பெயர் மாயை” என்றார் உடன் வந்தவர்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்கள்”
அவர் சென்றுவிட்டார்
சிறிது தயக்கத்துடந்தான் ஆரம்பித்தேன்
மெதுவாய்
ஒன்றாய்
இரண்டாய்
பின்
காலமொன்றை மறந்து
திரும்பி வந்து
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”
என்றார் நான் முன்னால் கூறிய நண்பர்
“தெரியவில்லை”
“நீங்கள் எங்கு சென்றீர்கள்?”
“தெரியவில்லை”
அதன் பின்

அவர் மீண்டும் போய்விட்டார்
நான்
அந்த அட்டையில்
சொல்லியிருந்தபடி
செய்யத் தொடங்கினேன்….

மனம் தொட்ட கவிதை

உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது கவிதைகள் கூறுங்கள் என்று நண்பர்கள் கேட்கும் பொழுது எனக்கு எதைச் சொல்வது இல்லை எவற்றைச் சொலவது என்று தெரியாமல் கஷ்டப் படுவேன். இதற்கு முக்கியக் காரணம் என் ஞாபக சக்தி. என்னால் ஒரு விசயத்தை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவே முடிவதில்லை. நான் எழுதியவற்றில் கூட என்னால் ஒன்றிரண்டைத் தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.பல வருடம் பழகிய நண்பர்களையெல்லாம் ஒரு சில ஆண்டுகள் பார்க்கவில்லை என்றால் யார் நீங்கள் என்று கேட்ட அனுபவமெல்லாம் உண்டு. இதனாலேயே இப்படி யாராவது கேட்டால் “அப்படி ஒன்னு ரெண்டுலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று சொல்லி சமாளிப்பேன். ஆனால் நகுலனின் இக்கவிதை என்றைக்கும் என் நினைவை விட்டு அகலும் என்று தோன்றவில்லை.

“எனக்கு யாருமில்லை நான் கூட‌” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.

இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,

ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது போலிருந்தது.

தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.

என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.

அஞ்சலி!

அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்

க‌ம்பீர‌மான‌
அழ‌கான‌
த‌ன் ம‌ர‌ணத்தைக் காட்ட‌
உடல் கிழிந்து இறந்த‌
ஒரு பெண்ணுடன்
அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்

"இங்குதான்
எல்லோரும்
பார்க்க‌
என் மரண நாட‌க‌ம்
இனிதே நிறைவேறியது

அதோ
அங்கு
சிதிறிக் கிடப்பவை
என் இறுதி வேண்டுதல்கள்

இங்கிருந்து அவ்வளவு தூரமே
என் இறுதிப் பயணம்

பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
இவனும்

ஆனால்
கருணையுள்ளவன்

ஓட ஓட விரட்டியோ
கதறக் கதற குதறியோ
நடு ரோட்டில் வீசியோ
என்னைக் கொல்லவில்லை

எல்லோரும்
கதறினோம் பதறினோம்
என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்

'விட்டுவிடு தம்பி
என்று கெஞ்சியிருந்தால்
விட்டிருக்கும்
என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை'

உனக்கு
இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்" என்றான்

அவள் பேசவில்லை
ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
இன்றும் பேசவேயில்லை

Sunday, September 21, 2014

கிறுக்கல்கள்

ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் வழியாக உள் செல்லும் வார்த்தைகளை வழி மறித்து காதல் ரசாயனத்தை ஊற்றி உன் பெயராய் மாற்றி  அனுப்புகிறது உன்னால் ஆன என் மனம்.
நீள் கவிதை யொன்றின் முடிவில் வரும் உன் பெயரைச் சுற்றி சுற்றி வந்து படக் கவிதையாக்கியதில் உன் முகம் வரைந்து பூக்களின் சுயம்வரத்ததிற்கு அனுப்பி வைக்கின்றன வார்த்தைகள்.
வானவில்லை அனுப்பி உன்னோடு வரிசையில் நிற்க வைத்து உன் மணம் பிடித்து வர சதி செய்கிறது இந்த சின்னப் பிரபஞ்சம்
உன் கன்னம் உரசிச் சென்ற காற்றை விரட்டிச் செல்கின்றன காதற் பறவைகள்
யாரிடமும் சொல்லாமல் உன்னைப் பார்க்க, இரவு நதியில் பூத்துக் குலுங்கும் நட்சித்திங்களைப் பறித்து வரும் நிலவிற்குப் பரிசாக உன் புன்னகையை மட்டும் தந்துவிடாதே.
இதழில் புன்னகைத் தவழ நீ ஏறிய அழகைக் கண்ட மின்சார ரயில் மூச்சு முட்டி புகை விடத் தொடங்குகிறது. இன்னொரு முறை நீ சிரித்தால் பறக்கும் ரயி்ல் ஆகி விடும் போலும்
உனக்கு மட்டுமே புரியும் ஒரு கவிதையை எழுதித் தருகிறேன்.நீ புன்னகைக்கிறாய். இப்பொழுது இந்த ஆகச் சிறந்தக் கவிதைக்கு எ‌ன்ன அர்த்தமென புரியாமல் நிற்கிறேன்
தேவதை உன் வீட்டு வழி கேட்டு வண்ணத்துப் பூச்சிகள் அலைகின்றன
உன் பாதங்களில் பாதைகளும் ஒட்டிக் கொள்கின்றன போலும்

பூ

செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது

மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது

முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது

ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்

பின்
அழகான பூவென‌

ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்

பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ

எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது

என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என‌
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது


Sunday, September 14, 2014

வெண்பா – முதல் முயற்சி

ஆண்டு பனிரெண்ட் டில்ப்பூக்கும் பூவதன்
நீண்ட  துயர மெதுவோ? – கண்ட
நுன் சிரிப்பில் காலம் மறந்தே
மலரும் மலரோ அது

வெண்பா எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. முதன் முதலில் நான் எழுத ஆரம்பித்தது, பள்ளியில் ஆசிரியர் வெண்பா நடத்தும் பொழுது, அதைப் போலவே எழுத முயற்சித்ததுதான். முதல் மூன்று அடிகள் நான்கு சீர்களாகவும், ஈற்றடி மூன்று சீர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே நானறிந்த இலக்கணமாக இருந்தது. ஆனால் இன்று எழுத ஆரம்பித்த பின்புதான் வெண்பா அவ்வளவு விளையாட்டான விசயமில்லை என்று தெரிந்தது. எவ்வளவு முயற்சித்தும் தளை தட்டாமல் மேலுள்ள வெண்பா முழுமையடையவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு இடத்தில் தளை தட்டியுள்ளது. அதிகமாக இருந்தால் கூறவும்.


மேலும் நேரிசை வெண்பாவாய் எழுதப்பட்டிருக்கும் இது இரு விகற்பமாகவும் இல்லை. முதல் முயற்சியென்பதால் என்னை நானே மன்னித்துக்கொண்டு, மனம் தேற்றி எழுதி முடித்தேன்.


“பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவின் துயரம்தான் என்ன? உன் சிரிப்பைக் கண்டு காலம் மறந்து மலர்கிறதா அம் மலர் என்று பொருள் வருமாறு எழுதியுள்ளேன்.”
வருகிறதா?

Wednesday, September 10, 2014

தீரா விளையாட்டு

ஒரு நாளை
பிடித்து
இரண்டாகக் கிழித்து
சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு
தூங்கப் போகிறேன்
விழித்துப்
பார்த்தால்
ஒன்று
பறந்து போயிருக்கும்…

சில விளையாட்டுகள்
அலுப்பதேயில்லை…
**********************

ஒவ்வொரு பகலிலும்
என் நிழலை
வெட்டி வீசுகிறேன்
அவை
இரவாய்
வளர்ந்து விடுகின்றன
யாரேனும்
என்னை
இந்தக் குழியிலிருந்து
தூக்கி விடுங்கள்…
*********************

துக்கத்தை
எழுதி வைக்கத்
தொடங்காதீர்கள்
அது
ஆற்று மணலின்
ஊற்று நீர் போல்
மிகச் சுவையாய் இருக்கும்.

Tuesday, September 9, 2014

பேஸ்புக் கவிதைகள்

ஒரு டஜன் ஜோடிகள்
உட்கார்ந்திருக்கும் பூங்காவில்
என்னை மட்டும் கடிக்கும்
கொசுவிற்கு
தனிமையென்றும்
நினைவு யென்றும்
பெயரிட்டு
விரட்டிக் கொண்டிருந்தேன்.

நான் உனக்கு அனுப்பும் கடிதங்கள் எல்லாம் என்னிடமே வந்து சேர்கின்றன.
நீ எங்கு இருக்கிறாய்?

பகல்
எல்லாவற்றையும் சத்தமாக சொல்கிறது.
கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கிறேன்
பகலின் மௌனம்
அதை விட
அதிகச் சத்தம் போடுகிறது.

பெண்மை

நானொரு
பெண்
இதைச் சத்தமாய்ப்
படித்திடாதீர்கள்!

காலம்
கிழித்த‌
இடத்தி(தா)ல்
ஊசலாடுகிறது
என் உயிர்!

போதும்
இனி வேண்டாவென‌
முலைய‌றுத்து
என் யோனியை
அடைத்திட்டேன்

ம‌ற்றொன்றறுத்து
என் இடையினை
நிறைத்திட்டேன்

மயிர‌றுத்து
நிர்வான‌(ண‌)த்திற்கு
த‌ந்திட்டேன்

பெயர‌றுத்து
பிண‌ங்க‌ளுக்குப்
போட்டேன்

ஆங்கோர்
குழந்தை அழக் கண்டு
முலை(ளை)த்திடும் ம‌ன‌த்தை
என் செய்வேன்!!

நிழல் தேடிய நதி

அந்த அறையில்
நாங்கள் மட்டுமே இருந்தோம்
தனித்து விடப்பட்ட
நாங்கள்
அந்த அறையாகவே இருந்தோம்
பகலினில்
அவனுடன் மட்டும்
இரவினில் அவனாகவே…
கட்டித் தழுவ
கை நீட்டிய பொழுதெல்லாம்
கை பற்றி
மேலெழத் துடிக்கும்
தூரத்தில்
அவன்
சரிந்து சரிந்து
விழும் நதிக்கு
கடல்தான்
முட்டுச்சந்து
நீ
என்னுடையவன்
என்று நினைத்திருந்தேன்
உன் பெயர்
நிழல்
என்று தெரியும்வரை….

Sunday, September 7, 2014

அன்புள்ள தோழிக்கு,

அன்புள்ள தோழிக்கு,

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாள் என்று நினைக்கிறேன். ஆதாமைத் தேடி காட்டிற்குள் போகிறாள். காடென்றால் அது பூக்களால் ஆன காடு. பூக்களைக் கண்டு மனம் மகிழ்கிறாள். பூக்களுக்கும் அவளைக் கண்டு பெரு மகிழ்ச்சி. வரிசையில் வந்து முத்தமிடுகின்றன. வாசனைப் பாடல்களால் துதி பாடுகின்றன. ஏவாளுக்கு வெட்கத்தில் முகம் பூக்கிறது. அப்பூவிற்கு சொந்தம் கொண்டாட முயல்கின்றன காட்டுப் பூக்கள். காட்டுப் பூக்கள் என்றால் அவை வெறும் பூக்கள் அல்ல.

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாளாய் நீ. ஆதாம் உன்னைத் தேடி வருகிறான். பூக்களின் மத்தியில் பூத்து நிற்கும் உன்னைக் காண்கிறான். அவனால் காணவே முடியாத அழகைக் கண்டு மனம் பத பதைக்கிறான். பூக்களிடம் கோபம் கொள்கிறான். அழுகிறான். மனம் தடுமாறுகிறான். பூவாய் நின்ற நீ பாவமென மனமிறங்குகிறாய். ஆதாமை மடி  சாய்த்துக்கொள்கிறாய். நீ நீயாய் மாறுகிறாய்விழித்து அவன், முகம் பார்க்கிறான். பார்த்தவனுக்கு நீ யாரென்று புரிந்தவன்போல் விழிக்கிறான். அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என நீயே சொல்.


கனா ஒன்று கண்டேன் தோழி. அது வெறும் கனா என்று சொல்வதற்கில்லை. வான் வெளியில் நீ. உன் இடத்தில் இரவை விதைத்து நிலவுக்காய் காத்திருக்கிறாய். நிலவும் வருகிறது. தான் நிலவென்று தெரியாமலே. யாருமில்லா இடத்தில் தான் மட்டும் எதற்கு நிற்கிறோம் என்று குழம்புகிறது. தான் ஒளிர்வது எவ்வாறு என்று கேள்வியெல்லாம் அதற்கு கேட்கத் தெரியவில்லை. தூரத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து பயம் கொள்கிறது. வால் நட்சத்திரம் ஒன்றைத் துரத்திச் செல்கிறது. என்னிடம் நீ கேட்கிறாய்; ஏன் நிலவு நெருங்க மறுக்கிறதென்று. நீயே சொல் உன்னருகில் நிலவுக்கு இடமுண்டா?

Saturday, September 6, 2014

அதைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
                              *****

தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் தங்களைப் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்ற பழனிச்சாமியை, இன்றக்குத் திட்டித் தீர்த்துவிடுவது போல் ஆரம்பித்த அம்மா அரை மணி நேரம் ஆகியும் நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருப்பதை அச்சமும் வியப்பும் கலந்த பார்வையுடன் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. பழனிச்சாமி அவள் அப்பாதான். ராஜாங்கத்தைத்தான் தனியாக விட்டுப் போயிருந்தார்கள்லட்சுமியை விட மூன்று வயது மூத்தவன் ராஜாங்கம். வீட்டின் மூத்த மகன்.  மொத்தப் பாசத்தையும் கொட்டி வளர்க்கப்பட்ட 'ஆம்பள புள்ள'. அவனுக்குக் கொடுக்கப்பட்ட பாசத்தின் மிச்ச மீதிகளை உண்டு வளர்ந்து வந்தாள் லட்சுமி. இருந்தும் அண்ணன் என்றாள் அவளுக்கு உயிர். பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்பது இவள் விசயத்தில் குழந்தையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஆம்பள புள்ளையைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதை மிகச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டாளோ என்னவோ அண்ணனின் நிழல் அவனை விட்டுப் பிரிந்தாலும் அவள் பிரியாமல் உடன் இருந்தாள். "எனக்கு ரெண்டும் பசங்கதான்" என்று அவள் அம்மா சொல்லும் பொழுது சந்தோஷமே அடைந்தாள். இப்படி வீட்டின் இளவரசனாகவும், தன் ஹீரோவாகவும் இருந்த அண்ணன் ஒரு நாள் புத்தி சுவாதீனம் இல்லாமல் போனான் என்பதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதவளாய்  எல்லாக் கடவுள்களையும் ஏன், ஏனென்று கேள்விகளால் தன் மனதிலிருந்து விரட்டியடித்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.
                                                                                *****

என்றைக்குமில்லாமல் அன்று வீட்டுக்குச் சீக்கிரமே வந்தான். எல்லோரிடமும் நன்றாக பேசினான் என்றுதான் நினைவு. சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றான். நன்றாகவும் ஏன் வழக்கத்தை விட அதிகமாகவும் சாப்பிட்ட மகனை உச்சி முகர்ந்தாள் ராஜாங்கத்தின் அம்மா. வீட்டில் எல்லோரும் காரணமின்றி அன்று அதிக சந்தோஷமாக இருப்பது போல் தோன்றியது லட்சுமிக்கு. எனினும் சிரிப்பவர்களைப் பார்த்தால் தானும் சிரிக்கும் குழந்தைப்போல் அவளும் சந்தோஷமாகவே அன்று தூங்கிப் போனாள்.
மறு நாள் எல்லோரும் எழுந்து இரண்டு மணி நேரம் ஆகியும் ராஜாங்கம் எழவில்லை. வீட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் காலையில் அவன் தான் முதலில் எழுந்திருப்பான். அதிகமாக சாப்பிட்டதால் தூங்குகிறான் என்று நினைத்துக்கொண்டு அவனை யாரும் எழுப்பவில்லைஆனால் நேரம் ஆக ஆக மனம் பொறுக்காமல் அம்மா கவலைப் படத் தொடங்கினாள். லட்சுமியிடம், "அண்ணன எழுப்புடி. என்ன இன்னைக்கு இவ்வள நேரம் தூங்குறான். தலயத் தொட்டுப் பாரு காய்ச்ச.. கீய்ச்ச அடிக்குதான்னு" என்று நச்சரிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் "விடும்மா... தூங்கட்டும். எப்பவும் என் புள்ள ஒழுங்காவே தூங்கறதில்லன்னு புலம்புவ. இப்ப தூங்கறவன எழுப்பு எழுப்புன்ற" என்று சொன்னாலும் விடிந்து நான்கு மணி நேரம் ஆகியும் தூங்கும் ராஜாங்கத்தைப் பார்த்து கவலைப் படத் தொடங்கினாள்.

"அண்ணே.. அண்ணே.. எழுந்திரிண்ணே.. மணிப் பத்தாக போவுது. எழுந்துரிச்சு சாப்டாவது தூங்குணே "

ராஜங்கம் அசையவில்லை. பாறையென‌ கட்டிலில் கிடந்தான். லட்சுமி எழுப்பியும் எழுந்திருக்காத  மகனைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவளாய் அவளும் வந்து எழுப்பத் தொடங்கினாள்.
ஒருக்களித்துப் படுத்திருந்தவனின் தோளைப் பிடித்து திருப்பினாள். கசங்கிய நிலையில் ஒரு காகிதம் கிடந்ததுலட்சுமி அவள் அம்மாவைப் பார்த்தாள். அவளுக்கும் பயம் தான் என்பது கண்களிலேயே தெரிந்ததுலட்சுமிதான் அக்காகிதத்தைக் கையில் எடுத்தாள்.  "என்னடி அது.." அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவளாய் விழித்துக் கொண்டிருந்தவளை " படிடி.. என்ன எழுதிருக்குன்னு" என்று கத்தினாள் ராஜாங்கத்தின் அம்மா.

"யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. யாருக்குச் சொன்னால் புரியும் என்றும் தெரியவில்லை. இன்று ஒரு பெண் குழந்தையைக் கண்டேன். ஐந்து வயது இருந்தாலே அதிகம். பேருந்து நிறுத்தத்தில் தன்னச் சுற்றி நிற்கும் கூட்டத்தைக் கண்டு மிரளவோ, வேடிகைப் பார்க்கவோ, ஒரு பொருட்டாகவோ கூடக் கருதியதாகத் தெரியவில்லை... தனக்கு நேர்ந்தது நாளை உனக்கும் நேரலாம் என்பது போலவோ இல்லை உன்னால்தான் நான் இன்று தெருவில் ஆடிக் கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் நீ இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். என்பது போலவோ தன் அம்மாவின் மடியில் இருக்கும் தங்கையை ஒரு நொடிப் பார்த்து விட்டு அம்மா விட்டெறிந்த வளையத்தை எடுத்துக்கொண்டு கூட்டத்தின் நடுவில் போய் நின்றது. கையில் வைத்திருந்த தட்டை அதன் அம்மா  தட்டத் தட்ட அதற்கு ஏற்றார் போல் உடலை இருமுறை அசைத்துவிட்டு வைத்திருந்த வளையத்துக்குள் தன் உடலைச் செலுத்தி வெளி வந்தது. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், கடமையைச் செய்யும் ஒரு போர் வீரன் போல் வேறு எண்ணங்கள் ஏதுமற்றவளாய் அக்குழந்தை தெரிந்தாள். முகத்தில் ஏதுமில்லை: சிரிப்போ, ஆசைகளோ, ஆச்சர்யங்களோ ஏதுமில்லை. எவ்வாறு ஐந்து வயதினும் குறைந்த ஒரு குழந்தையால் இவ்வாறு இருக்க முடியும். ஏன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் உலகிடமிருந்து அவளுக்குக் கேட்டுப் பெற ஒன்றுமில்லை. சுற்றிலும் நிற்கும் மாமிச மலைகளை எப்படி அவளால் எளிதாக உதாசீனப் படுத்தி விட்டுப் போக முடிகிறது. மனம் கிடந்து துடித்ததுஅதைவிடக் கொடுமையாய் கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்து,"அங்க பாரு அந்த பாப்பா எப்படி ஆடுதுன்னு.." என்று வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அட ஆண்டவா எப்படி இவர்களால் சிரிக்க முடிகிறது. இந்த உலகில் எதையுமே நான் பெரிதாக நினைத்ததில்லை. எந்த ஒரு விசயத்திற்கும் பெரிய மதிப்பில்லை என்னிடம். நான் மதிப்பது, ரசிப்பது எல்லாமே மனிதர்களின் சிரிப்பைத்தான். சிரிப்புதான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது என்று நம்பினேன். அதனினும் ஆகச் சிறந்த தத்துவம் வேறில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று ஒரு வேளை உணவிற்காக ஒரு குழந்தை குழந்தையாக இல்லாமல் தெருவில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து இவர்களுக்கு எப்படி சிரிப்பு வருகிறது. எவ்வாறு சிரிக்கிறார்கள். நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்த ஒன்று என் வாழ்விற்கும் மறக்க முடியாதது. வளையத்திலிருந்து வெளி வந்த அந்தக் குழந்தை தட்டைத் தூக்கிக் கொண்டு கூட்டதிலிருக்கும் எல்லாரிடமும் சென்றது. ஒருவர் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வேட்டியயோ, சேலையையோ தொட்டது. காசு போடவில்லை என்று தெரிந்தால் சிறிதும் கவலையின்றி அடுத்தவரிடம் போனது. ஒரு பெண்மனி கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் போன குழந்தை ஒரு நொடி அந்தப் பெட்டியைப் பார்த்துவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து ஆட்டிப் பார்த்தது. பின் தன் தட்டில் சேர்ந்திருந்தக் காசை அதன் அம்மாவிடம் குடுக்கச் சென்றுவிட்டது. என்னால் அதற்கு மேல் அங்கு நிக்க முடியவில்லை. அதுவரை அப்பெண் குழந்தை குழந்தை தானா என்று கேட்டுக் கொண்டிருந்த‌ என் மனம் அவள் குழந்தையாய் மாறிய ஒரு நிமிடம் துடி துடிதுப் போனது. ஓடிச் சென்று அக்குழந்தையை அள்ளிக் கொள்ள வேண்டும்; போதும், நீ ஆடி உன் அம்மாவின் வயிற்றை, உன் அப்பனென்று ஒருவன் இருந்தால் அவன் வயிற்றை நிரப்பியது போதும், தன் குழந்தையை தெருவில் தனியாக நிற்கக் கூட விடாத இந்த சமுதாயம் உன்னை ஆட விட்டு வேடிக்கைப் பார்த்ததுச் சிரித்தது போதும் என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. வந்துவிட்டேன். வரும் பொழுதெல்லாம் அந்தக் குழந்தையின் நினைவாகவே இருந்தது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு அதன் வாழ்க்கை  இப்படி இருக்கும். இன்னும் ஐந்து வருடங்கள், ஆறு வருடங்களில் இவள் பெரிய மனுசியாகிவிட்டாள் என்பார்கள். காலத்திற்கும் சுமக்க வேண்டிய பாரங்கள் இரண்டைக் காலம் இவள்  மார்பில் ஏற்றிவிடும். தங்கத்தில் செய்த விலங்கை அவள் கழுத்திலும், காதிலும் மாட்டிவிடலாம். சேலைச் சிறைக்குள் மறைத்து, மறைத்து அவள் உடலைச் சுமப்பாள். ஆனால் அப்பொழுதும் ஆடிக்கொண்டேதான் இருப்பாள். அப்பொழுதும் இந்த மனித மிருகங்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும். என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.. எனக்கு தீடீரென்று எல்லாம் மறக்க ஆரம்பிப்பது போல் இருக்கிறது. கண் முன்னேயே எல்லாவற்றின் பெயரும் அழியத் தொடங்குகிறது. என் தலைக்கு மேல் நிழல் ஒன்று சுற்றிக்கொண்டே இருக்கிறது. எதன் மேல் நான் படுத்திருக்கிறேன்... படுத்திருக்கிறேன்.. படுத்திருக்கிறேனென்றால்.. அம்மா.. அம்மா எங்கே... .."

 அக்கடிததில் அதற்கு மேல் ஒரே கோடு கோடாக இருந்தது. வார்த்தைகள் என்று ஏதுமில்லை. படித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு தலை சுற்றியது. லட்சுமியின் அம்மாவுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அவள் வாய் விட்டு அழத்தொடங்கினாள். " டேய் ராஜா என்னடா இது.. எழுந்திரிடா.. எழுந்திரிடா என்னடா எழுதி வச்சுருக்கா" என்று அவன் மேல் விழாதக் குறையாய் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த பழனிச்சாமியும் அப்பொழுது வந்து சேர்ந்தார். எல்லோருமாக சேர்ந்து ராஜாங்கத்தைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். டாக்டர் அவனைப் பரிசோதித்துவிட்டு அவனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை எனவும் மன நலம் பாதிக்கப் பட்டிருப்பது போல் தோன்றுவதாகவும் அவரே ஒரு  மருத்துவரை பரிந்துரைத்து அவரிடம் அழைத்துப் போகும்படியும் கூறினார்.
   
மன நல மருத்துவர்  அவனைப் பரிசோதித்தார். அவன் எழுதியிருந்தக் கடிதத்தைப் படித்தார். "இவனுக்கு ஏற்பட்டிருப்பது பெர்சனாலிட்டி டிஸார்டர்" எனவும் அப்படி என்றால் என்னவெனவும் விளக்கினார். ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும் விசயங்கள் திடீரென்று ஒரு நாள் வெளிப்படத் தொடங்கும். மனம் பிறழும் என்றார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என் மகன் பைத்தியமாய்ட்டானா என்று ராஜாங்கத்தின் அம்மா திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.

அன்றிலிருந்து ராஜாங்கத்தைத் தனியாக விடுவதேயில்லை யாரும். தூக்கத்தி லேயே உயிர் போனால் அது நல்ல சாவு என்பார்கள். அப்படித்தான் போக வேண்டும் என்று விரும்புவார்கள். அதுபோல் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அவன் மனம்.
                                                                                *****

வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு அதிர்ச்சி. ராஜாங்கம் படுத்திருந்த கட்டில் சரிந்து கிடந்தது. அவன் மலம் கழித்திருந்தான். அவன் மூத்திரம் அவன் தலையருகே வந்துவிட்டிருந்தது. பதறிப் போய் லட்சுமி அவனை நகர்த்தினாள். லட்சுமியின் அம்மா தண்ணீர்க் கொண்டு வர ஓடினாள். பழனிச்சாமிக்கு ராஜங்கத்தின் கோலத்தைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
                              *****